(ஆர்.யசி)
நாட்டிற்கு தேவையான டொலர்களை தேடிக்கொள்ள அரசாங்கத்திடம் உள்ள பெறுமதியான காணிகளையும், கட்டிடங்களையும் தனியார் துறைக்கு விற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் முக்கியமான பல காணிகள் இவ்வாறு தனியார் மயப்படுத்தப் படவுள்ளதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் காரணமாக நாட்டில் மக்கள் கிளர்ச்சியொன்று உருவாக்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
டொலர் தட்டுப்பாட்டை அடுத்து நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வருடகாலத்தில் நாடு எதிர்கொள்ளப்போகும் சவால்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள முடியாது அரசாங்கம் பாரிய அழுத்தத்தில் உள்ளது.
டொலரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் அரசாங்கத்தின் காணிகளையும், கட்டிடங்களையும் சொத்துக்களையும் தனியாருக்கு விற்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகின்றது.
குறிப்பாக வோட்டர்ஸ் எச் காணி, யோர்க் கட்டிடம், கிரான்ட் ஓரியன் ஹோட்டல் ஆகியவறை பெப்ரவரி மாதம் 10 திகதிக்கு முன்னர் செலந்திவா நிறுவனத்தின் ஊடாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல வெளிவிவகாரத்துறை அமைச்சின் கட்டிடம், பிரதான தபால் நிலையம் என்பவற்றையும் தனியார் மயமாக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் இவற்றை அடுத்த ஒரு இரு மாதங்களுக்குள் தனியார் துறைக்கு கைமாற்றவே முயற்சிக்கின்றனர். அடுத்த ஒரு மாதகாலத்திற்குள் இவற்றை விற்க வேண்டும் என்ற நெருக்கடியில் அரசாங்கம் உள்ளது. ஏற்கனவே எமது கையிருப்பில் இருந்த தங்கங்களின் 50 வீதமான தங்கங்களை விற்றுள்ளனர்.
நாளுக்கு நாள் நாடு வீழ்ச்சிகண்டு வருகின்ற நிலையில் நாட்டின் வளங்களின் பெறுமதியும் வீழ்ச்சிகாணும். அப்போதைய நிலையில் அடிமட்ட விலைக்கு வளங்களை விலைக்கு வாங்க ஒரு கொள்ளைக்கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செய்துகொண்ட வரி திருத்தங்களே நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீர்மானங்களினால் தான் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
மிகப்பெரிய கடன் தொகையை எதிர்வரும் ஆண்டுகளில் செலுத்த வேண்டியுள்ள நிலையில் எவ்வாறு தேசிய பொருளாதாரத்தை கையாள வேண்டும் என்பது ஆட்சியாளர்களுக்கு விளங்காது இருக்க வேண்டும் அல்லது நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது தமது விசுவாசிகளுக்காக தவறான தீர்மானங்கள் எடுத்திருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் இந்த தீர்மானங்கள் மக்களையே வெகுவாக பாதித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஒருபுறம் சர்வதேச கடன்களை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, மறுபுறம் தேசிய பொருளாதார நெருக்கடிகளை மீட்டெடுக்கவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கவும் வேண்டியுள்ளது.
இந்த இரண்டு காரணிகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் மக்களிடம் பணம் இல்லை, இறக்குமதிக்கு டொலர் இல்லை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆகவே இவற்றை சமாளிக்க வேண்டுமாயின் கடன் தவணைகளை மாற்றியமைக்க அல்லது வேறு மறுசீரமைப்பு யோசனைகளுக்கு சென்று தற்போது எம்மிடம் உள்ள நிதியில் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் நிலைப்பாடாகவும் அமைந்துள்ளது.
ஆகவே கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுக்கு செல்ல வேண்டியது அவசியமானதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதனை கையாள முடியும்.
இப்போது காணப்படும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது முக்கியமா அல்லது 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்துவது முக்கியம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
நெருக்கடிகளை சமாளிக்க எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அது ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் காரணமாக நாடு வீழ்ச்சி காணும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினோம். ஆனால் அவற்றை கருத்தில் கொள்ளாததன் விளைவாக இன்று ஒட்டுமொத்த நாடும் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியில் மட்டும் அல்ல அரசியல் ரீதியிலும் ஸ்திரமற்ற தன்மை உருவாகிக்கொண்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் மக்களின் வெளிப்பாடுகள் மிக மோசமாக அமையும்.
எந்தவொரு தேர்தலையும் இப்போது எதிர்பார்க்கவே முடியாது. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் காரணமாக நாட்டில் மக்கள் கிளர்ச்சியொன்று உருவாக்கும் அபாயம் உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM