(நா.தனுஜா)
பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவும் தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (7) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிவழியிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம் பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவ்விகாரம் தொடர்பில் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை.
மேற்படி 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளடங்கலாக கடற்படை அதிகாரிகள் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் முன்னாள் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் அதற்கு மாறாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தீர்மானத்திற்கு எதிராக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கடந்த இருமாதகாலமாகப் பல்வேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் நடாத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு எதிராகவும் தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் காலை 8.30 - 10.30 மணிவரையில் கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினர் அமைதிவழிப்போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பலவருடங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனூடாகத் திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத்தளபதி உள்ளடங்கலாக 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னாள் சட்டமா அதிபரினால் தீர்மானிக்கப்பட்டது. எனவே இந்தத் தீர்மானம் வெறுமனே தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்டவொன்றல்ல.
அதேவேளை வசந்த கரன்னாகொட அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாததுடன் அவர் நீதிமன்றத்திலும் ஆஜராவதில்லை. அத்தோடு தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல்செய்திருக்கின்றார். அவ்வனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்படக்கூடாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் அழுத்தம்திருத்தமாக வாதிட்டுவந்தது.
ஆனால் கடந்த மேமாதம் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவியேற்றுக்கொண்டதையடுத்து, இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான எமக்குக்கூடத் தெரியப்படுத்தாமல் நீதிமன்றத்தில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இவ்விவகாரத்தில் சட்டமா அதிபர் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு, முதுகெலும்பின்றிச் செயற்பட்டிருக்கின்றார். ஏற்கனவே புலனாய்வு மற்றும் பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
எனவே அதன் ஓரங்கமாகவே தற்போதைய நிகழ்வுகளை நோக்கவேண்டியிருக்கின்றது. உரிய விசாரணைகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அவற்றிலிருந்து சட்டமா அதிபரினால் இலகுவாக விடுதலை செய்யப்படுவார்களாயின் சட்டமும் நீதிமன்றமும் எதற்கு என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. நாட்டின் சட்டம் சஞ்சய் ராஜரத்னத்தினால் மீறப்படுமாயின், அச்சட்டத்தின் பயன் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM