கே.சுகுணா
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா? என்ற பாடலை எப்போது கேட்டாலும் இதயத்ததில் ரண வலியை கொடுக்கும்.
இதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனோடு இணைந்து,
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம் ... என்று நம் உயிரின் கண்ணீர் குரலாக மாணிக்க விநாயகத்தின் குரல் ஒலிக்கும்.
ஆனால் இன்று அந்த குரலுக்கு சொந்தமான அவர் நம்மோடு இல்லை. ஆம் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு காலமானார்.
1943 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி மயிலாடுதுறையில் பிறந்த அவர் உலகை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பிற்கு அண்மையில் உள்ளான போதும் அதிலிருந்து மீண்டார். ஆயினும் உடல் நலக்குறைவு காரணமாக தனது 78 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். 2001 ஆம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் " கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ '' என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
" பொம்பளைங்க காதலத்தான்
நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே " என்ற பாடல் உள்ளிட்ட பல பிரபல்யமான பாடல்களை சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடியுள்ளார்.
அதுமட்டும் அல்ல பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
திருடா திருடி திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தில், யுத்தம் செய், வேட்டைக்காரன், கம்பீரம், பேரழகன் தொங்கா தொங்கடி,கள்வனின் காதலி,போஸ்,திமிரு, கிரி, பலே பாண்டியா, வ குவாட்டர் கட்டிங் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார்.
2013இல் வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு வருகைத்தர இருந்தனர்.
ஆனால் அப்போது இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியை இரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார்.
அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை இரத்து செய்தனர். வெற்றிலை சிவக்கும் வாய் , உயரமான கம்பீர உடல், நெற்றியில் குங்கம பொட்டு என்பவற்றோடு அதிகமாக வேட்டி சட்டையில் காட்சி தரும் அவர் தனது பெயரை போல குணத்திலும் மாணிக்கமாக ஜொலித்தவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது மாணிக்க குரல் காற்று இருக்கும் வரை இந்த பூமியில் கலந்து ஜொலித்திருக்கும். கலைஞர்கள் என்றும் அழிவதில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM