(எம்.மனோசித்ரா)
நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும்.
இதேநிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புகளை வழங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும்.
இலங்கையில் அவ்வாறு சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமேயாகும்.
எனவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வானளவு உயர்வடைந்துள்ள நிலையில், பேரூந்து கட்டணத்தையும் அதிகரித்து மரத்திலிருந்து விழுந்த மனிதனை மாடு முட்டியதற்கும் அப்பாற்பட்ட நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நிலையான பொருளாதாராக் கொள்கை அற்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் திட்டமிடலற்ற வேலைத்திட்டங்களின் காரணமாக மக்கள் நாளாந்தம் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பொருட்களின் விலைகளானது நூல் அருந்த பட்டம் போன்று வியாபாரிகளின் தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடின்றி அதிகரித்துச் செல்கிறது.
அரசாங்கத்திற்கு இதுவரையிலும் டொலர் நெருக்கடிக்கான தீர்வை வழங்க முடியாமலுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
வர்த்தகத்துறை அமைச்சர் இவற்றுக்கு டொலர் வழங்கப்படும் என்று கூறினாலும், மத்திய வங்கி அதனை மறுக்கிறது. உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாமல் இருக்குமாயின் அவை மனித பாவனைக்கு பொறுத்தமற்றவையானதாகிவிடும்.
பால்மா, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் என அனைத்திற்கும் வரிசையில் நிற்கும் யுகத்தை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையிலேயே இலங்கையில் விலை உயர்வடைந்துள்ளது. 2015 இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. நாம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கும் போது பெற்றோர் லீற்றரின் விலை 132 ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் தற்போது 177 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அன்று எமது எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தவர்களே இன்று அதனை பாராட்டுகின்றனர். எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று பெற்றோல் விலை 130 - 140 ரூபாவாகவே காணப்பட்டிருக்கும்.
கொவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்தது.
எனினும் அந்த சலுகையை மக்களுக்கு வழங்காத அரசாங்கம் , நிதியமொன்றை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது வழங்குவதாக குறிப்பிட்டது.
எனினும் அந்த நிதியத்திற்கும் , அதனால் கிடைக்கப் பெற்ற இலாபத்திற்கும் என்னவானது என்பது இது வரையில் அறிவிக்கப்படவில்லை.
டொலர் நெருக்கடியின் காரணமாக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கடனுக்கு மசகு எண்ணெய்யை பெற்று , அந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
இதே நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புகளை வழங்க வேண்டிய நிலையே ஏற்படும்.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்மானமாகும். எனினும் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மோசடியில் ஈடுபட முடியாது என்பதால் அரசாங்கம் அதனை விரும்பவில்லை.
அரசாங்கத்தினால் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ உரத்தைப் பயன்படுத்தியமையால் பயிர் செய்கைகள் முற்றாக பாழடைந்துள்ளன.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளினால் அடுத்த ஆண்டு பஞ்சம் ஏற்படும் என்று விவசாயத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரும் இதனை தெரிவித்துள்ளார். அதனைக் கூறி 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை எனில் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
மரக்கறி உற்பத்தி குறைவடைந்துள்ளமையால் அவற்றின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் அதிரிக்கப்பட்டது.
தற்போது பேரூந்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தவர்களே தற்போது அதனை தூற்றவும் செய்கின்றனர்.
ஒன்றில் அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யக் கூடியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும். நாட்டில் தற்போது காணப்படுவது டொலர் நெருக்கடியாகும். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாட்டுக்கு டொலரைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும்.
இலங்கையில் அவ்வாறு சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமேயாகும்.
2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ரணில் விக்கிரமசிங்கவே மீள கட்டியெழுப்பினார். அவர் அதனை செயலால் நிரூபித்த தலைவராவார். அவரது தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்திற்கு மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM