(நா.தனுஜா)
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத்துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுவருவதன் காரணமாகவே வெளிநாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்துகொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி.காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கைப் பிரஜைகளைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப்பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப்பிரஜைக்கும் வெளிநாட்டுப்பிரஜைக்கும் இடையிலான திருமணப்பதிவின்போது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வணிகசேகரவினால் பிரதேச செயலகங்கள், மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி சுற்றுநிருபமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விவாகப்பதிவுச்சட்டத்தின் 112 ஆவது பிரிவின்படி இலங்கைப்பிரஜைக்கும் வெளிநாட்டுப்பிரஜைக்கும் இடையிலான திருமணப்பதிவின்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, திருமணமாகாதவர் அல்லது விவாகரத்தானவர் என்பதை உறுதிசெய்வதற்கான ஆவணங்கள், தேவையேற்படின் பிறப்புச்சான்றிதழ் என்பன வெளிநாட்டுப்பிரஜையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
இருப்பினும் இவற்றுக்கு மேலதிகமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மேலும் சில ஆவணங்களைக் கோருவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது அச்சுற்றுநிருபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சுற்றுநிருபத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அறிவிப்பானது திருமணம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ளும் தனிநபர் உரிமையில் அநாவசியமாகத் தலையீடு செய்யும் வகையில் அமைந்திருப்பதாக நேற்று முன்தினம் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தீர்மானத்திற்கான காரணம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாக வழங்கியிருக்கும் விளக்கத்திலேயே பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கைப்பிரஜையொருவர் வெளிநாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் எதற்காக அனுமதிபெறவேண்டும்? என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத்துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளமை இத்தீர்மானத்திற்கான முக்கிய காரணமென பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல், சமூகவலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான திருமணங்களுக்காக வறிய பெண்களே இலக்குவைக்கப்படுகின்றார்கள். அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கைப் பிரஜைகளைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப்பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி உள்நாட்டுப்பிரஜையொருவர் வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்யவிருக்கும் பட்சத்தில், அவர் பதிவாளர் திணைக்களத்திடம் பாதுகாப்புசார் ஆவணமொன்றைக் கையளிக்கவேண்டும். அந்த ஆவணம் பதிவாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு, குறித்த வெளிநாட்டவர் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்று வழங்கப்படும். அதுமாத்திரமன்றி சுகாதாரச்சான்றிதழ் ஒன்றும் கையளிக்கப்படவேண்டும்.
அவற்றின் பிரகாரம் தடைநீக்கல் சான்று வழங்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை பதிவாளர் நாயகம் அவர்களுக்கு அறியத்தருவார்.
இந்த நடைமுறை பல்வேறு நாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுவதுடன் இது தேசிய பாதுகாப்பையும் நாட்டுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM