(ஆர்.ராம்)
ரெலோவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்கான தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.
இந்நிலையில் இக்கடிதம் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை அன்று அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மேற்படி ஆவணத்தில் கைச்சாத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கைச்சாத்திடும் நிகழ்வினை பொது இடத்தில் பகிரங்கமான முன்னெடுப்பதாக இல்லை, தனித்தனியே தலைவர்கள் கையொப்பமிட்டு பின்னர் அந்த ஆவணத்தினை பகிரங்கப்படுத்துவதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த கூட்டு கடிதச் செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில், இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்களினால் ஆவண உள்ளடக்கங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்செய்யும் நோக்கத்திற்காக கூடினர்.
அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வரைபும் பரிசீலிக்கப்பட்டது.
இரண்டு வரைபுகளுக்கு இடையிலும் பெரிய வித்தியாசங்கள் காணப்படாமையினால் தமிழரசுக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபில் உள்ள விடயங்களையும் சேர்த்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.
அன்று மாலைவரை நடந்த கலந்துரையாடலில் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்திற்கான வரைவை இறுதி செய்தனர். இணக்கம் காணப்பட்ட விடயங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட வரைவு மறுநாள் தலைவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சீர்செய்வதற்காக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து தலைவர்களுடைய வழிகாட்டுதலோடும் வரைவு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி அனைத்து தலைவர்களின் வசதிக்கேற்ப கொழும்பில் இந்த ஆவணத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தம் மக்களை மீட்க விட்டுக்கொடுப்போடும், அர்ப்பணிப்போடும் ஒருமித்து செயலாற்ற அனைத்து தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
இந்த ஒன்று கூடலின் முதல் விசேடம் சமகாலத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசும் கட்சி தலைவர்கள் கூடியதாகும். இதுபற்றி நான் தான் மிக நீண்டகாலமாக சக கட்சிகளுடன் பாராளுமன்றிலும் பொதுவெளியிலும் பேசியுள்ளேன். இப்போது ரெலோ, புளொட் முன்னெடுப்பில் நடக்கிறது.
அடுத்து, இதில் உள்ள அதி விசேடம் வடகிழக்கு, முஸ்லிம், மலையக கட்சிகள் ஆகிய மூன்று தமிழ் பேசும் தரப்புகளும் ஒன்றுக்கூடி இருப்பதுதான். இதை சமூக பொறுப்புடன் பக்குவமாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஒருங்கிணைவின் சார்பாக எழுதப்படும் கூட்டு ஆவணம் மூன்று தரப்பாரின் பிரச்சினைகளையும் விவரிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளையும் வட, கிழக்கு தமிழ் தேசிய பிரச்சினைக்குள் மாத்திரம் உள்ளடக்க முடியாது. அத்தகைய ஒரு முயற்சியை நாம் கண்டோம்.
ஆனால், கலந்துரையாடலில் கலந்துகொண்ட பெரும்பாலான கட்சிகள் அதை ஏற்கவில்லை. மூன்று தரப்பின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நவம்பரில் யாழில் நடைபெற்ற முதல் கலந்துரையாடலிருந்து டிசம்பரில் கொழும்பில் நடைபெற்ற மூன்றாம் கலந்துரையாடல்வரை கலந்துக்கொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இது தொடர்பில் பாரிய பொறுப்பு இருக்கிறது. எமது கூட்டணியின் பங்காளிகளான பழனி திகாம்பரம் எம்.பி, இராதாகிருஷ்ணன் எம்.பி ஆகியோருக்கும் இருக்கிறது. ஆகவே இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாஷைகள் தொடர்பில் நாம் எமது ஆவணத்தை தயாரிக்கிறோம். அவை சரிபார்க்கப்பட்டு பிரதான ஆவணத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இதேபோல் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும். அப்படியானால் மாத்திரமே, ஒன்று கூடும் மூன்று தரப்பினரின் பொது ஆவணமாக இந்த பிரதான ஆவணம் அடையாளப்படுத்தப்படும்.
மேலும் இந்த பொது ஆவணத்தை நீங்கள் முதலில் இந்திய பிரதமருக்குதானே அனுப்ப போகிறீர்கள்? இந்நிலையில் இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் அபிலாஷைகள் சேர்க்கப்படாவிட்டால் எப்படி? ஆகவே இது தர்க்கரீதியான கட்டாயமும் ஆகும்.
ஆகவே இந்த மலையக, முஸ்லிம் மக்களின் அபிலாஷகளை தொகுப்பது இப்போது நடக்கின்றது. இதனால் சில தாமதம் இயல்பாக ஏற்படலாம். இதை ஒரு பிரச்சினையாக்க கூடாது. இதை இழுத்தடிப்பு என வர்ணிக்க கூடாது. அவசரபட்டு முழுமையில்லாத ஆவணத்தை வெளியிடுவதை விட, சிறு தாமதத்தின் பின்னராவது சரியான ஆவணத்தை வெளியிடுவது சாலச்சிறந்தது.
மற்றபடி நிலைப்பாடுகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். ஆகவே பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகள் என்ற அடிப்படையில் ஒன்றுபடலாம். எமது ஆரம்ப நோக்கங்களின் படி, நாம் இந்தியாவை, அவர்களது கடப்பாட்டை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களது நல்-அதிகாரத்தை பயன்படுத்திரூபவ் 13 ஐ முழுமையாக அமுல் செய்ய, உள்ளே இழுக்க விரும்பினோம். 13 எமக்கான அரசியல் தீர்வு அல்ல. இந்திய ஒன்றிய மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு அப்பால் சென்றுரூபவ் எமக்கு சமஷ்டியை பெற்று கொடுக்க, இந்தியாவை அழைக்க முடியாது.
எங்கள் சச்சரவுகளை பற்றி பல பக்கங்களில் நாம் விவரணமாக எழுதலாம். ஏற்கனவே தளர்ந்து போய், விரக்தியடைந்துள்ள, எமது மக்களுக்கு கனவுலக நம்பிக்கைகளை நாம் கொடுக்கலாம்.
ஆனால், சமஷ்டிக்கான ஜனநாயக போராட்டங்களை நாம் இங்கே இலங்கையில் நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அதற்குள் இந்தியாவும் அமெரிக்காவும் வர மாட்டார்கள். உலகில் வேறு எங்கும் சென்று, தலையீடுகளை கேட்டு பார்க்கலாம். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் எஞ்சியுள்ள முன்னாள் இணைத்தலைமை நாடுகள் எவையும் இந்தியாவை மீறி அல்லது கடந்து ஒரு அடி எடுத்து வைக்க மாட்டார்கள் என்று நான் திடமாக நினைக்கின்றேன் என்றார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றல் உள்ளிட்ட சில பரிந்துரைகளை கொண்ட ஆவணமொன்றை பிரதான பரிந்துரையில் உள்ளீர்க்குமாறு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான் அனுப்பவுள்ள ஆவணத்திற்கு தனது அரசியல் பீடத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM