“ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் மத்தியில் இன்று தெரிவித்தார்.
தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இன்று முற்பகல் இடம்பெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
“எளிமையான பணிகளில்கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும்.
ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது.
நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. அவர்கள் சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும்.
இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
பின்னடைவுகள் என்பன ஒரு பயணத்தின் ஒரு பகுதியே ஆகும். அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இராணுவ நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், விடைபெற்றுச் செல்லும் அதிகாரிகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த 316 கெடெட் அதிகாரிகள் நிகழ்வில் விடைபெற்று வெளியேறினர்.
இலங்கை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து 02 வருடங்களும் 09 மாத காலமும் “இராணுவ கல்வி இளங்கலைப் பட்டப் பாடநெறியை” தொடர்ந்த 73 பேரும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 150 பட்டதாரிகளும், 61 தொண்டர் கெடெட் அதிகாரிகளும், 15 பெண் தொண்டர் கெடெட் அதிகாரிகளும், சேம்பியா, மாலைதீவு மற்றும் ருவண்டா குடியரசுகளில் இருந்து வருகை தந்து பயிற்சிகளைப் பெற்ற 06 கெடெட் அதிகாரிகளும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பயிற்சிப் பெற்ற இலங்கை மாணவப் படை அதிகாரிகள் 05 பேரும் இதில் அடங்குவர்.
மகளிர் தொண்டர் கெடெட் அதிகாரி பாடநெறி எண். 17இல், முதலாம் இடத்தைப் பெற்றவருக்கான ஜனாதிபதி திறன் விருது எச். ஏ. டி. பிரபாஷ்வரி அவர்களுக்கும், தொண்டர் கெடெட் அதிகாரி பாடநெறி எண் 60 இல் முதலாம் இடத்தைப் பெற்றவருக்கான ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்துப் அம்சங்களிலும் மிகவும் சிறந்த கெடெட் அதிகாரிக்கான கெளரவ வாள் என்பன - ஏ. எம். டி. டி. என். பெரேரா அவர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.
அத்துடன், பயிலிளவல் கெடெட் அதிகாரி பாடநெறி எண் 89 பீ - முதலாம் இடத்தைப் பெற்றவருக்கான ஜனாதிபதி திறன் விருது ஆர்.டி.எல்.ஏ.சில்வா அவர்களுக்கும், பயிலிளவல் கெடெட் அதிகாரி பாடநெறி எண். 89 பீ - அனைத்து அம்சங்களிலும் அதிவிசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் விருது எச்.இ.ஏ.ரன்ஜுல அவர்களுக்கும், நிரந்தர கெடெட் அதிகாரி பாடநெறி 90இல் முதலாம் இடத்தைப் பெற்றவருக்காற ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்து அம்சங்களிலும் அதி விசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் விருது ஆகியன டி.ஆர்.சி.டி. பத்திநாயக்க அவர்களுக்கும், நிரந்தர கெடெட் அதிகாரி பாடநெறி இலக்கம் 89இல் முதலாம் இடத்தைப் பெற்றவருக்கான ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்து அம்சங்களிலும் அதி விசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் விருது டி.எம்.எம். ருக்ஷான் அவர்களுக்கும், சிறந்த வெளிநாட்டு கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ பிரம்பு விருது மாலைதீவைச் சேர்ந்த ஏ.ஆதம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்றமைக்கு அடையாளமாக, மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி அங்கு நாட்டினார்.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவத் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM