(எம்.மனோசித்ரா)
தர நிர்ணயசபையின் நியமங்களுக்கு அமைவாகவும் , தரத்தை உறுதிப்படுத்தும் முத்திரையுடனும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு இணங்குவதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இலங்கையின் இரு பிரதான சமையல் எரிவாயு இறக்குமதி நிறுவனங்களுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் நாகாந்த கொடிதுவக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட கப்பல் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தது. ஒன்றிணைந்த விசேட தொழிநுட்ப குழுவினரால் குறித்த கப்பலில் காணப்பட்ட சமையல் எரிவாயு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது கப்பலில் காணப்படும் சமையல் எரிவாயுவில் ப்ரோபேன் மற்றும் பியுட்டேன் ஆகிய இரசாயன பதார்த்தங்கள் உரிய விகிதத்தில் காணப்பட்ட போதிலும் , வாயு மணத்தை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 'எதில்மேகெப்டன்' எனப்படும் இரசாயன பதார்த்தம் உரிய விகிதத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் கசிவின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி உத்தரவினைப் பிறப்பிக்க கோரி சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்று புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் குறித்த ரிட் மனு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லிட்ரோ நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர , 'தமது தரப்பினரால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.|' என்று தெரிவித்தார்.
மேலும் , தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் இரசாயன பதார்த்த உள்ளடங்களில் காணப்பட வேண்டிய முறையான விகிதம் இல்லை என்றும் , சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் தர நிர்ணய குழுவின் தலைமையில் எதிர்வரும் 20 ஆம் திகதி விசேட கலந்துரையாடலொன்று காணப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர மன்றில் சுட்டிக்காட்டினார்.
தர நிர்ணயசபையினால் அனுமதிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே தற்போது சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார். அத்தோடு எதிர்காலத்திலும் தரநிர்ணய சபையினால் வழங்கப்படும் நியமங்களுக்கு அமைய உரிய தரத்துடனான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர அறிவித்தார்.
மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் உள்ளடக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் தர நிர்ணய பரிசோதனை குறித்த முத்திரைகளை சிலிண்டர்களில் காட்சிப்படுத்துவதற்கும் தமது தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் , லிட்ரோ நிறுவனம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர தெரிவித்தார்.
அதற்கமைய , மன்றுக்கு தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிய உறுதிமொழியை இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதோடு , சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM