(எம்.மனோசித்ரா)
இந்தியா ஒருபோதும் இலங்கையை கை விடாது. இலங்கை மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை வரும் வரை பார்த்துக் கொண்டிருக்காது.
எனவே மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான நிதியை இந்தியாவிடம் கோருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு இப்போது தீர்மானித்துள்ளமை காலம் கடந்த ஞானமாகும்.
ஒரு வருடத்திற்கு முன்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தால் நாட்டில் இந்தளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா என தீர்மானித்துள்ளமை காலம் கடந்த ஞானமாகும். தற்போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை பிரயோசனமற்றது.
காரணம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்தாலும் வரையறுக்கப்பட்ட சலுகைகளே கிடைக்கப் பெறும்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடுத்த ஆண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள அனைத்து கடன் தொகையையும் செலுத்த முடியும் என்று கூறுகின்றார்.
ஆனால் தற்போது அரசாங்கத்திடம் 1000 மில்லியன் டொலர் கூட டொலர் வடிவில் கையிருப்பில் இல்லை. கடந்த மாத இறுதியில் 1009 மில்லியன் டொலர் இருப்பு காணப்பட்டது. ஆனால் ஜனவரியில் 1440 மில்லியன் டொலர் கடன் தவணை மற்றும் வட்டி என்பவற்றை செலுத்த வேண்டியுள்ளது.
இது தவிர சர்வதேச பிணைமுறி, அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை அபிவிருத்தி பிணைமுறி கடன் 200 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இது தவிர உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 525 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
அத்தோடு உள்நாட்டு வங்கிகளிடம் பெற்றுக்கொண்ட கடன் தொகையில் 140 - 150 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.
எனவே தற்போதுள்ள அந்நிய செலாவணி இருப்பினை அரசாங்கம் இந்த கடன்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்போகிறதா? அல்லது அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்போகிறதா? இந்த நெருக்கடி மாத்திரமின்றி டொலர் இன்மையால் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
அரசாங்கம் கடனை செலுத்துவதற்காக டொலரை மீதப்படுத்தி, மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
அரசாங்கத்தினால் உரிய காலத்தில் கடனை மீள செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்தாவிட்டால் பிணைமுறி தொடர்பான நியுயோர்க் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் 14,000 மில்லியன் டொலரை ஒட்டுமொத்தமாக ஒரே சந்தர்ப்பத்தில் செலுத்த வேண்டியேற்படும்.
எனவே கடன் மீள் செலுத்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையை மீள் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் உரிய காலத்தில் கடனை மீள செலுத்த முடியாது.
இவ்வாறு செய்வதன் ஊடாக மருந்து மற்றும் உணவு பொருட்கள் இறக்குமதிக்கான பணத்தை மீதப்படுத்த முடியும்.
நாட்டுக்கு மக்களின் நலனுக்காக இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம். மக்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் போராடுவோம்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் இந்தளவு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் இன்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள அரசாங்கம் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காமலிருந்தமைக்கான காரணம் என்ன?
அரசாங்கத்தின் இயலாமை, அறிவின்மையால் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழச்சியடைந்துள்ளது. ஆனால் தற்போது அதற்கு நாம் பொறுப்பு கூற வேண்டும் என்று எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர்.
முடியவில்லை என்றால் ஆட்சியை எம்மிடம் ஒப்படை வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியிடம் இயலுமை, வேலைத்திட்டம், சர்வதேச தொடர்புகள் உள்ளன. எம்மால் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்க முடியும் என்ற 100 வீத நம்பிக்கை எமக்கிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM