( எம்.எப்.எம்.பஸீர்)
சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவ தளபதி இராணுவ தலைமையகத்துக்குள் வைத்து தற்கொலை தாக்குதல் ஊடாக கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கு, உதவி ஒத்தாசை அளித்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதி ஒருவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தை சுயமாக வழங்கப்பட்டது என ஏற்றுக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தை பிரதிவாதி சுயமாக வழங்கியுள்ளதாக ஏற்றுக்கொண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2017 மே 28 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எனினும் பிரதிவாதியான தற்போது மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரசியல் கைதி செல்வராசா கிருபாகரன் அந்த உத்தரவுக்கு எதிராக மேன் முறையீடு செய்தார்.
2017 ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்ட அந்த மேன் முறையீட்டின் மீதான வாதங்கள், கடந்த நவம்பர் 2 ஆம் முன் வைக்கப்பட்டிருந்தன.
மேன் முறையீட்டு மனுதாரரான கிருபாகரனுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேலும், பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சட்ட மா அதிபருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் எல். கருணாநாயக்கவும் ஆஜராகினர்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி மேனகா விஜேசுந்தர மற்றும் நீதிபதி நீல் இத்தவல முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர், நீதிபதி நீல் இத்தவலவின் இணக்கத்துடன் நீதிபதி மேனகா விஜேசுந்தர தீர்ப்பினை அளித்தார்.
இதன்போதே, மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஒப்புதல் வாக்கு மூலமானது, சுயமாக வழங்கப்பட்டது அல்ல என அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றின் அந்த உத்தரவை திருத்தி தீர்ப்பளித்தது.
இராணுவ தலைமையகத்துக்குள் வைத்து, அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கொலைச் செய்ய கடந்த 2006 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முயற்சிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அக்கொலை முயற்சிக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி செல்வராசா கிருபாகரனுக்கு எதிராக கடந்த 2012 இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன்போது உதவி பொலிஸ் அத்தியட்சர் நிமல் ரத்நாயக்கவுக்கு, பிரதிவாதி சந்தேக நபராக கைதில் இருந்த போது வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழக்குத் தொடுநர் தரப்பு மன்றில் முன் வைத்தனர்.
எனினும் பிரதிவாதி தரப்பு, அந்த வாக்கு மூலம் சுயமாக வழங்கப்பட்டது அல்ல என மேல் நீதிமன்றிலேயே ஆட்சேபனம் முன் வைத்தனர்.
எனினும் மேல் நீதிமன்றம் அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்றுக்கொள்வதாக உத்தரவிட்டிருந்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கும் போது, அச்சட்டத்தின் 16 (1) த்தியாயத்தின் கீழ் இந்தஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
இந் நிலையில், மேல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவை தாக்கல் செய்த மனுதாரர், தான் தமிழர் என்ற ரீதியில், தன்னிடம் வாக்கு மூலம் பெறும் போது எந்த மொழி பெயர்ப்பாளரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், தான் சித்திரவதைச் செய்யப்பட்டே அந்த வாக்கு மூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாகவும் மனுவூடாக நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
எனினும் பிரதிவாதிக்காக ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அதனை மறுத்தார். வாக்கு மூலம் பதிவு செய்த உதவி பொலிஸ் அத்தியட்சருக்கு நன்றாக தமிழ் தெரியும் எனவும், அதனால் மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் அவர் அதனை பதிவுச் செய்ததாகவும், சித்திரவதைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் உதவி பொலிஸ் அத்தியட்சரின் தமிழ் புலமை தொடர்பில், நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, அவரால் சரளமாக தமிழ் மொழியை கையாள முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே, மேன் முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சுயமாக வழங்கப்பட்டது அல்ல என தீர்மானித்ததுடன், கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த வாக்கு மூலத்தை ஏற்றுக்கொண்ட உத்தரவையும் திருத்தி தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM