(நா.தனுஜா)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவற்றை முழுமையாக ஒழித்தல் தொடர்பான பிரசாரங்களையும் பல்வேறு செயற்திட்டங்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான 16 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய மகளிர் சக்தி திட்டமிட்டுள்ளது.
'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் : உலகை அழகுறச்செய்வோம்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சி உறுப்பினர்கள் மேற்குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கூறியதாவது:
இன்று (நேற்று) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம் இன்றிலிருந்து (நேற்றிலிருந்து) 16 நாட்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக்கொண்டுவருவதுடன் தொடர்புடைய பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும்.
இருப்பினும் எமது நாட்டில் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் முதற்தடவையாக மகளிர் விவகார அமைச்சு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைச்சிற்குப் பொறுப்பாக ஒரு பெண் அமைச்சரை நியமிக்கமுடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது.
ஆனால் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கும் அதேவேளை, அவர்களுக்குரிய இடத்தை வழங்கவேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் உறுதியாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கூறுகையில்,
எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவர். அவர்களில் ஐவரில் ஒருவர் என்ற விகிதாசாரத்தில் பெண்கள் உடலியல் அல்லது பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக ஆய்வொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களில் 56 சதவீதமானோர் பெண்களாவர். அவ்வாறு பெருமளவான பெண்களின் வாக்குகள் மூலம் தெரிவான தற்போதைய அரசாங்கம், பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அண்மையில் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதைப் பார்த்தோம்.
எனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதை முன்னிறுத்திய இந்தப் பிரசாரம் எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும். கொள்கைகளை வகுக்கும் கட்டமைப்பில் இடம்பெறுகின்ற இத்தகைய நிகழ்வுகளால் அதன்மீதான நம்பிக்கை சீர்குலைகின்றது.
எனவே முதலில் பாராளுமன்றத்திற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும். அதுமாத்திரமன்றி அவ்வாறு முறையற்ற விதத்தில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிர்வருங்காலங்களில் வாக்களிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் நாட்டுமக்களிடம் வலியுறுத்துகின்றேன் என்றார்.
மேலும் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறியதாவது,
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவற்றை முழுமையாக ஒழித்தல் தொடர்பான பிரசாரங்களையும் பல்வேறு செயற்திட்டங்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான 16 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய மகளிர் சக்தி திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை அவமரியாதை செய்த நபரைப்போன்ற ஆண்கள் மாத்திரமன்றி, பெண்களுக்கு மதிப்பளிக்கின்ற மிகச்சிறந்த ஆண்களும் எமது சமூகத்தில் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்றார்கள்.
ஆகவே அவர்கள் ஊடாக இப்பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்வதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக பெண்களின் நலனை முன்னிறுத்தி எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும், பெருமளவான பெண்கள் அவர்களை நாட்டின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்தார்கள்.
பாடசாலை மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைப் போதிப்பதற்கான நடவடிக்கை எமது கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைப் போதிப்பதால் கலாசார சீர்கேடு ஏற்படும் என்றுகூறி வெளியகத்தரப்பினர் அதனைத் தடுத்துநிறுத்தினார்கள். இருப்பினும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்குச்சென்று பெண்களைத் துன்புறுத்துகின்ற வேளையில் யாரும் கலாசார சீர்கேடு குறித்து சிந்திப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM