நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்

Published By: Vishnu

16 Nov, 2021 | 12:01 PM
image

15.11.2021அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்


01. சினிமாவை ஒரு தொழிற்துறையாக ஏற்றுக்கொள்ளல்

இலங்கையில் சினிமாத் துறையில் பல பிரபல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை, சர்வதேச புகழ்பெற்ற திறமைவாய்ந்த அதிகமான சினிமா கலைஞர்களை உலக சினிமாவுக்கு வழங்கியுள்ளது. ஆனாலும், உள்ளூர் சினிமாத்துறை, ஒரு தொழிற்துறையாக சட்டரீதியாக வெளியிடப்படாமையால் அதன் அளவும் விருத்தியும் சிறியளவில் உள்ளூர் வணிக வாய்ப்புக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக உள்ளூர் சினிமாத்துறை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. சினிமாத்துறையை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் பல வாழ்வாதார வழிகள் உருவாதல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நவீனமயப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதேபோல் உலகில் முன்னேற்றகரமான சினிமா தொழிற்துறை காணப்படும் நாடுகளில் அந்தந்த நாடுகள் சினிமாத்துறையை ஒரு தொழிற்துறையாக ஏற்றுக்கொண்ட பின்னரே குறித்த தொழிற்துறையின் விருத்தி ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எமது நாட்டின் சினிமாத்துறையின் மேம்பாட்டுக்காகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் சினிமாவை தொழிற்துறையாக பதிவு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஜனாதிபதி ஊடக விருது விழா – 2022

'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்க கொள்கைப் பிரகடனத்தின் மூலம், 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் உயரிய ரீதியில் செயற்படக்கூடிய வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழில்வாண்மையாளர்களின் பணிகளுக்கான சரியானதும் சுதந்திரமானதுமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, வெகுசன ஊடகங்களின் தரநியமத்தை பேணுவதற்காகவும் இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தள ஊடகங்களின் உள்ளடக்கம் பொறுப்புக்களுடன் கூடிய சுயாதீனமானதும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் நடாத்திச் செல்வதற்காக ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக விருது விழாவை மிகவும் முறைசார்ந்த வகையில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வானொலி, தொலைக்காட்சி,

அச்சு ஊடகங்கள், இணையத்தளங்கள், பாடசாலை மட்ட ஊடக மற்றும் ஊடக ஆய்வு போன்ற துறைகள் ஆறு (06) இனை உள்ளடக்கியதாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான 2021 ஆம் ஆண்டின் ஆக்கங்களை அதற்கு அடிப்படையாகக் கொண்டு படைப்பாளிகளை பாராட்டுவதற்காக ஜனாதிபதி ஊடக விருது விழா – 2022 இனை நடாத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. அஞ்சல் அலுவலகங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் பல்துறைசார் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

இலங்கை அஞ்சல் திணைக்களமானது 654 பிரதான அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 3,410 உப அஞ்சல் அலுவலங்களுடன் கூடிய வலையமைப்பைக் கொண்டிருப்பதுடன், தற்போது குறித்த 654 பிரதான அலுவலகங்களில் 154 அலுவலகங்கள் வாடகை அடிப்படையில் தனியார் கட்டிடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றன. அஞ்சல் அலுவலகக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக ஒரு சில மாகாணங்களில் காணித்துண்டுகள் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தாலும், திணைக்களத்திடம் போதுமானளவு நிதியின்மையால் முன்மொழியப்பட்டுள்ள கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு இயலாமல் உள்ளது. அவ்வாறே, அஞ்சல் திணைக்களத்தின் வருமானம் மற்றும் செலவுகளுக்கிடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கு திணைக்களம் கவனம்; எடுத்துள்ளதுடன், அதன்கீழ் புதிய வருமான விருத்திக்கான வழிமுறைகளை அடையாளங்காண வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அஞ்சல் திணைக்களத்தின் தேவைகளுக்காக போதுமான இடவசதிகளை வழங்குவதற்காக திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் பல்துறைசார் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கை மற்றும் ரஷ்யா இற்கிடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான ஒப்பந்தம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல் தொடரின் பின்னர், வெளிப்படையானதும் முன்கணிப்பிடக் கூடியதுமான சுங்க நடவடிக்கை முறைகள் ஊடாக சட்ட ரீதியான வணிக நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இருதரப்பினருக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் குறைத்தல், தேச எல்லைகள் உள்ளிட்ட வரிகளை சரியான வகையில் கணிப்பிடல் மற்றும் சேகரித்தல், மட்டுப்பாடுகளின் கீழ் பண்டங்களை பரிமாற்றிக் கொள்வதை கட்டுப்படுத்தல், தடுத்தல் மற்றும் அதற்குரிய ஒழுங்குவிதிகளை வகுத்தல் போன்றவற்றுக்காக இவ் ஒப்பந்தம் பங்களிப்புச் செய்யும். அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ஸ்ரீலங்கா விமான சேவைகள் கம்பனியின் 21 பயண முடிவுகளுக்கான விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கான பெறுகைகளை வழங்கல்

உலகளாவிய ரீதியில் 21 விமான நிலையங்களில் (பயண முடிவுக்கான) ஸ்ரீலங்கா விமான கம்பனியின் விமானங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் செயன்முறையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த பெறுகைகளின் செல்லுபடியான காலப்பகுதி 12 மாதங்கள் தொடக்கம் 24 மாதங்கள் வரையாவதுடன், 21 விமான நிலையங்களுக்கான பதிலளிப்புடன் கூடிய 26 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த 21 பயண முடிவுகளுக்காக, தெரிவு செய்யப்படும் குறித்த விலைமனுதாரர்களுக்கு வழங்குவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. எதிர்வரும் விடுமுறைக் காலத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

கொவிட் 19 நிலைமையால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீண்டும் 2021ஃ2022 சுற்றுலாக் காலத்தில் மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் விமானக் கம்பனிகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்துறைகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினர்களும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகம் நடைமுறைப்படுத்தவுள்ள உலகளாவிய ரீதியான தொடர்பாடல் வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதான சுற்றுலாத்துறை வணிக வாய்ப்புக்களில் 05 வருட காலத்திற்கு பயண முடிவுக்கான முகவர் நிறுவனம் மற்றும் மக்கள் தொடர்பு கம்பனிகளைத் தெரிவு செய்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த உலகளாவிய சுற்றுலாத்துறை மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் துணை நடவடிக்கையாக, விசேட கவனம் செலுத்த வேண்டிய சுற்றுலாத்துறை வணிக வாய்ப்புக்களாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஆசிய வலயத்தின் பிரதான மூல வணிக வாய்ப்பான இந்தியாவையும் இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலம்

அரச நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி வசதிகளை வழங்குவோர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களால் பிரத்தியேக தகவல்களைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தும் போது குறித்த தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை வகுப்பதற்காக பிரத்தியேக தரவுகள் பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 2011 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க மாகாண சபைகள் (முத்திரைக் கட்டணம் மாற்றம் செய்யும்) சட்டத்தை திருத்தம் செய்தல்

ஏதெனுமொரு ஆளொருவரால் சரியான வகையில் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலதிகமாக அல்லது தவறுதலாக வைப்பிலிடப்பட்ட ஏதேனும் முத்திரைக் கட்டணம் அல்லது தண்டப்பணத்தை மீளச் செலுத்துமாறு உரிமை கோரல் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படும் போது மேலதிகமாக அல்லது தவறுதலாக செலுத்தப்பட்ட முத்திரைக் கட்டணம் அல்லது தண்டப்பணத்தை மீளச்செலுத்தக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை உட்சேர்த்து, 2011 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க மாகாண சபைகள் (முத்திரைக் கட்டணம் மாற்றம் செய்யும்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2021 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சர்வதேச மற்றும் உள்ளூர் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளங் காண்பதற்காக குழுவொன்றை நியமித்தல்

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய ரீதியான அமைவிடத்தைக் கருத்திற் கொண்டு, சமுத்திர கேந்திர நிலையமாக எமது நாட்டை மேம்படுத்தும் போது சர்வதேச ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்கும் போது சர்வதேச தேவைகளை கருத்தில் கொண்டும், சட்டரீதியான உட்கட்டமைப்பு வசதிகளை தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த துறைசார்ந்த விடயங்களை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பி.ஏ.ரத்னாயக்க அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதுடன், குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் எம்.ரீ.நிவ் டயமன்ட் கப்பல் மற்றும் எம்.ரீ.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல்கள் விபத்துக்குள்ளானமையால் ஏற்பட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொள்ளும் போது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இதற்கு முன்னர் பி.ஏ.ரத்னாயக்க அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக அறிமுகப்படுத்த வேண்டிய அல்லது தற்போது காணப்படும், திருத்தப்பட வேண்டிய சட்டங்களை அடையாளங் கண்டு அது தொடர்பாகவுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தர அவர்களின் தலைமையிலான ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்; மற்றும் நீதி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22