(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் கடந்த 206 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் ரியாஜ் பதியுதீனை, நிபந்தனைகளுடன் அத்தடுப்புக் காவலில் இருந்து உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்து உத்தரவிட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் 11 (1) அ, ஆ பிரிவுகளின் கீழ் உயர் நீதிமன்றின் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பை அடியொட்டி இந்த நிபந்தனையுடன் கூடிய விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, ரியாஜ் பதியுதீன் தனது வசிப்பிடம் அமைந்துள்ள கொழும்பு நகர் பகுதிக்கு வெளியே செல்லக் கூடாது எனவும், அவ்வாறு கொழும்பு நகருக்கு வெளியே செல்வதானால் சி.ஐ.டி. பணிப்பாளரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அத்துடன் மாதத்தின் ஒவ்வொரு முதல், 3 ஆம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் மற்றொரு நிபந்தனையையும் விதித்தது.
அத்துடன் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்த நீதிமன்றம், வெளிநாடு செல்வதானால் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனை இட்டது.
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், தன்னை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளின் போது மனுதாரர் மற்றும் பிரதிவாதித் தரப்புக்களின் வாதங்களை ஆராய்ந்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி நிபந்தனை விடுவிப்புக்கான உத்தரவைப் பிறப்பித்தது.
அத்துடன் ரியாஜ் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த உயர் நீதிமன்றம், ஆட்சேபனைகள் இருப்பின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி சமர்ப்பிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு மனு மீதான விசாரணைகளையும் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் ஆஜராகினார்.
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.
ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. ஜயசேகர, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ரியாஜ் பதியுதீனுக்காக தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தான் (ரியாஜ்) 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் திகதி கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அப்போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் 2020ம் ஆண்டு செப்டம்பர்பர் மாதம் 29ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வெள்ளவத்தையில் வைத்து தன்னை கைது செய்தமையும், அது தொடர்பில் தடுத்து வைத்துள்ளமையும் சட்ட விரோதமானது எனவும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அந்த செயற்பாடுகள் உள்ளதாகவும் ரியாஜ் பதியுதீன் சார்பிலான மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து, அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதன்படி 12 (1, 12 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சமத்துவத்அரசியலமைப்பின்துக்கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமலும் இருப்பதற்கான உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக 500 கோடி ரூபாவை பிரதிவாதிகளிடம் இருந்து நட்ட ஈடாக பெற்று தருமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு இதற்கு முன்னர் உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போது, ரியாஜ் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் விடயங்களை முன் வைத்திருந்தார்.
விசாரணையாளர்கள் ரியாஜ் குறித்த விசாரணை நிறைவடையவில்லை என கூறுவார்களாயின், அவரை பயங்கரவாத தடைச் அட்டத்தின் 11(1) ஆம் அத்தியாயத்தின் கீழ், தடுப்புக் காவல் இடத்தை மாற்றி நிவாரணமளிக்கலாம். அவரை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை செய்யும் வண்ணமோ அல்லது, போக்குவரத்து கட்டுப்பாட்டுகளை விதித்தோ அவசியமான முறையில் அதனை செய்துகொள்ளலாம்.
வின்சன்ட் ராஜ் எதிர் சி.ஐ.டி. எனும் வழக்கின் தீர்ப்பு இவ்வாறு செய்ய முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (குறித்த வழக்குத் தீர்ப்பும் சமர்ப்பிக்கப்ப்ட்டது) என வாதங்களை முன் வைத்திருந்தார்.
அந்த வாததை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ரம், ரியாஜ் பதியுதீன் தொடர்பிலான விசாரணைக் கோவையை முற்றாக ஆராய்ந்த பின்னர் அவரை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கான நியாயமான காரணிகள் இல்லாமையை அவதானித்தும், நிபந்தனைகளின் அடிப்படையில் சி.ஐ.டி. தடுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM