(இராஜதுரை ஹஷான்)
இலங்கையில் வரலாற்று காலம் தொடக்கம் பல்வேறு சமூகத்தினர் பல்வேறு சட்டங்களையும், இலட்சினங்களையும் பின்பற்றி வருகிறார்கள்.
அச்சட்டங்களை காலம் காலமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்தம் செய்வது அவசியமாகும்.
சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை இரத்துச் செய்வது இலங்கை இராச்சியத்தை கட்டியெழுப்ப இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் நீக்குவதற்கு ஒப்பானதாக அமையும்.
நாட்டின் அரசியலமைப்பிற்கும், இன ஒருமைப்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஆலோசனையை பெறாமல், நீதியமைச்சர் மற்றும் சட்டமாதிபரை புறக்கணித்து செயலணி நியமிக்கப்பட்டுள்ளமை நகைப்புக்குரியதாகும்.
ஆகவே இன ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலணியை ஜனாதிபதி நீக்க வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கு வலியுறுத்துகிறோம் என சுட்டிக்காட்டி ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்றதை தொடர்ந்து காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க நாட்டின் தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்தியதுடன், சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய இன மக்களை ஒன்றிணைத்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதனை நாட்டின் தேசிய கீதத்தில் 'ஒரு தாயின் பல பிள்ளைகள்' என்ற சொற்பதத்தை இணைத்து உறுதிப்படுத்தினார். அதேபோல் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளிலும் அவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.
அதேபோல் இலங்கையின் தனித்துவ அடையாளத்துடன் குறைகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்வது அவசியமாகும். ஆகவே ஒரே நாடு –ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவிற்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி அரசியலமைப்பிற்கு முரணானது.
இந்த நாட்டில் பல்வேறு சமூகத்தினர், பிரிவினருக்காக வெவ்வேவேறான சட்டங்கள் காணப்படுகின்றன. சிங்கள இராஜதானியின் சட்டம் தற்போது மேல்நாட்டு சட்டம் என அடையாளப்படுத்தப்படுகின்றன.
அச்சட்டம் 700 வருட காலம் பழமைவாய்ந்தது. உரோமானிய சட்டம் 600 வருடகாலமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல 500 வருட கால பழமைவாய்ந்த தேசவழமைச்சட்டம் யாழ்ப்பாணத்தை மாத்திரம் அடையாளப்படுத்தியதாகவும் தென்னிந்தியாவில் கூட செயற்படுத்தப்படாத பழமையானதாக காணப்பட்டது.
அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தில் 'முக்குவர்' என்ற பெயரில் ஒரு சமூகத்தினர் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கும் தனித்த சட்டம் காணப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் முக்குவர் என்ற சமூகத்தினர் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருடன் ஒன்றினைந்ததால் சமூகத்திலிருந்து தூரமாக்கப்பட்டார்கள்.
வரலாற்று காலம் தொடக்கம் நாட்டில் பல்வேறு சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அச்சட்டங்கள் எத்தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அச்சட்டங்களை நீக்குவது இலங்கை இராச்சியத்தை கட்டியெழுப்புவதற்காக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் இரத்துச் செய்வதற்கு ஒப்பானதாக அமையும்.
நடைமுறையில் உள்ள சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகளை முரண்பாடற்ற வகையில் திருத்தியமைக்க முடியும்.
பிரதானமாக தேசவழமை சட்டத்திற்கமைய திருமணம் முடித்த பெண்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்ற குறைப்பாட்டை திருத்தியமைக்க வேண்டும்.
அதேபோல் முஸ்லிம் விவாகச்சட்டத்தில் ஆண் ஒருவர் 4 திருமணங்களை செய்ய முடியும் என்பதுடன் திருமணமான பெண்களின் உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபு 2019ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அச்சட்டவரைபு நீதியமைச்சர் அலிசப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரே நாடு –ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கையில் ஆண் மற்றும் பெண் ஆகியோர் சமமாம மதிக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் பெண்களின் விகிதம் ஆண்களை காட்டிலும் உயர்மட்டத்தில் உள்ளது. ஆகவே பெண் உரிமை மதிக்கப்பட வேண்டும். அத்துடன் தாரளப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான செயலணியின் செயற்பாடுகள் ஒரே நாடு –ஒரே சட்டம் தொடர்பில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை பலவீனமடைய செய்வதுடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவை இல்லாதொழிக்கும். இச்செயலணி குறித்து முதலில் பாராளுமன்றில் விவாதம் இடம்பெற வேண்டும்.
அதனை தொடர்ந்து ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழு உருவாக்கப்படுவதுடன் அதற்கு நீதியமைச்சினதும், விஷேட நீதியரசர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அமைச்சரவையின் ஆலோசனைகளை பெறாமல் நீதியமைச்சரையும், சட்டமாதிபரையும் புறக்கணித்து ஒரே நாடு –ஒரே சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் கேலிக்கூத்தானது.
ஆகவே இன ஒருங்கிணைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரே நாடு –ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முழுமையாக நீக்கப்பட வேண்டும்.என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்துகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM