(ஆர்.யசி)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தற்போது முன்வைக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்திலும் அரசாங்கதிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் வரவு- செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏனைய பங்காளிக்கட்சிகளும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் வரவு -செலவு திட்டத்தை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் பங்காளிக்கட்சிகள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு பங்காளிக்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரசியல் அமைப்பு உருவாக்க விவகாரத்தில் ஜனாதிபதி செயலணியின் கருத்துக்கள் குறித்தும், செயலணி நியமிக்கப்பட்ட விதம் குறித்தும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சித்துள்ளதுடன், கெரவலப்பிட்டிய மின் நிலைய விவகாரம் மற்றும் நிதி அமைச்சரின் சில தீர்மானங்களில் அதிருப்தியடைந்துள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர மற்றும் பங்காளிக்கட்சிகளின் ஏனைய தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஜனாதிபதி வெறும் பொம்மை போன்றவர் எனவும் இந்த அரசாங்கம் மிக மோசமான ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் டியூ குணசேகரவும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் -பங்காளிக்கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை
இந்நிலையில் அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் பங்காளிக்கட்சிகளை சமாளிக்கும் விதமாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ள அவர், தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க தான் தலைமை தாங்குவதாகவும், ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி -நிதி அமைச்சர் - பங்காளிக்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
இந்நிலையில் இந்த வாரத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பங்காளிக்கட்சிகளை பேச வைக்கவும் முயற்சிகளை எடுத்துள்ளார். இந்த வார இறுதிக்குள் அல்லது அடுத்த வாரத்தில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டத்திலும் அரசாங்கத்திற்கு நெருக்கடி
இந்த பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக சிந்தித்து வருவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடி நிலைமைகளில், தீர்வுகள் வழங்கக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் கருத்தில் கொள்ளாதமை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், சில இறுக்கமான தீர்மானங்களை இந்த தருணத்தில் எடுக்கவேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் சவால்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இம்முறை வரவு -செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக செயற்படவும் ஆராய்ந்து வருவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கேசரிக்கு உறுதிப்படுத்தினார்.
எனினும் இவை பேச்சுவார்த்தை மட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இப்போது தீர்மானம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைப்பாட்டில் உள்ளதாவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM