உத்தரப்பிரதேஷத்தின் அயோத்தியில் நேற்று முதல் 5 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான தீப உற்சவ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளது.
இராமாயணத்தின் உலகளாவிய கலைக்களஞ்சியத்தின் இலங்கைப் பிரிவின் உறுப்பினர்களான ஞானகுமார் சிதம்பரம் மற்றும் காயத்திரி சுவீந்திரன் ஆகியோரும் கொழும்பிலுள்ள, சுவாமி விவேகானந்தா கலாசார மையம் மற்றும் நாட்டிய கலா மந்திர் ஆகியவற்றின் புகழ்பெற்ற பரத நாட்டிய குருவான கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனும் இக்குழுவுக்குத் தலைமை தாங்குகின்றனர்.
இக்கலாசாரக்குழுவினரின் பயணத்துக்கு முன்னதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை சந்தித்து உரையாடியிருந்தார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழைமையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இத்தகைய கலாசார மற்றும் ஆன்மீக தொடர்புகளின் முக்கியத்துவத்தை அவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார். மேலும் இந்தியாவில் அவர்களின் கலாசார நிகழ்ச்சிகளுக்காக வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
உத்தரப்பிரதேஷ அரசின் கலாசாரத் திணைக்களத்தின் அயோத்தி ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட இக்கலாசாரக் குழுவை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேஷ மாநிலத்தில் புனித நதியான சரயுவின் கரையில் அயோத்தி அமைந்துள்ளது. இது இராமர் பிறந்த இடம் என நம்பப்படுவதால் இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இங்கு பிரமாண்டமான ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் என்ற விழாவினைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐந்தாவது தீப உற்சவ பதிப்பின்போது, முதன்முறையாக 500 ட்ரோன்கள் அயோத்தியின் வானத்தில் இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கவுள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து வரும் கலாசாரக் குழுக்கள் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசார நிகழ்ச்சிகளை இங்கு காட்சிப்படுத்துவார்கள்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று 12 இலட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்க உத்தரபிரதேஷ அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ கொண்டாட்டங்களின் போது சரயு நதியின் கரையில் அமைந்திருக்கும் கம்பீரமான 'ராம் கி பைதியில்' பாரம்பரிய சுற்றுலா, மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, இராமாயண ஊர்வலம் புகைப்படக் கண்காட்சி, முப்பரிமாண ஒளிக்கீற்று காட்சிகள், திட்டபிரதிமைகளின் திரையிடல் மற்றும் லேசர் ஒளிக்கற்றை காட்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பப்பட்ட ஓர் அடையாள புனித சின்னம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி ஆலய தலைமை குருவிடம் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் ஒக்டோபர் 28 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. இப்புனித சின்னம் இலங்கையில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து உயர் ஸ்தானிகரால் இந்தியாவிற்கு எடுத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மங்களகரமான வஹப் போயா தினத்தன்று கொழும்பிலிருந்து புனித நகரமான குஷிநகருக்கு முதலாவது சர்வதேச விமானம் வந்தடைந்தமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவெண்டியதாகும். இலங்கையிலிருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு இந்நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் இக்குழுவில் 4 இராஜாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் புனித விகாரைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட பௌத்த மதகுருமாரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மகாசங்கத்தினரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இத்தகைய கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் மதங்களை கடந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலையான மக்கள் - மக்கள் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM