ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 2 ஆம் குழுவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் விளையாட ஆரம்பித்த போதிலும் அவை தகுதிகாண் சுற்றுகள் மூலம் நீண்ட தூரம் பயணித்தே பிரதான சுற்றில் விளையாடி வந்துள்ளன.
இம் முறை சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதிபெற்ற அதேவேளை, ஸ்கொட்லாந்து பிராந்திய மற்றும் முதலாம் சுற்றுகளில் விளையாடி சிறந்த பேறுபேறுகளுடன் தகுதிபெற்றுக்கொண்டது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஸ்கொட்லாந்து 2007 இலும் ஆப்கானிஸ்தான் 2010 இலும் முதல் தடவையாக விளையாடியிருந்தன.
உலகக் கிண்ணத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ளபோதிலும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்த இரண்டு அணிகளினதும் அண்மைக்கால பெறுபேறுகளின் பிரகாரம் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாகத் தென்படுகின்றது.
ஆனால், எத்தகைய சவாலையும் முறியடிக்கக்கூடிய அணி என்பதை பங்களாதேஷுடனான முதல் சுற்று வெற்றிமூலம் ஸ்கொட்லாந்து நிரூபித்துள்ளது.
சுப்பர் 12 சுற்றுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய போதிலும் சொந்த நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அவ்வணி வீரர்களால் நிம்மதியாக தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியாமல் போனது.
சில வீரர்கள் தி ஹண்ட்ரட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றபோதிலும் ஏனையவர்கள் போட்டிகளின்றி வெறுமனே பயிற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டுவந்தனர்.
எவ்வாறாயினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஈட்டிய வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
மேலும் அதன் ஆரம்ப வீரர்களான ஹஸ்ரத்துல்லாஹ் ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்ததைப் போன்று இன்றைய போட்டியிலும் பிரகாசிப்பார்கள் எனவும் அஸ்கர் அப்கான் தனது அனுபவத்தின் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுபவசாலியான மொஹம்மத் நபியின் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கொட்லாந்து எந்தவொரு தனிப்பட்ட வீரர்களிலும் தங்கியிருக்கவில்லை. நடந்து முடிந்த போட்டிகளில் வெவ்வேறு வீரர்களினது ஆற்றல்களுடனேயே ஸ்கொட்லாந்து வெற்றிபெற்று வந்துள்ளது.
அணித் தலைவர் கய்ல் கோட்ஸர், 31 வயதான ஜொஷ் டாவி, ப்றட் வீல், மார்க் வொட், ரிச்சி பெரிங்டன், ஜோர்ஜ் மன்சே ஆகியோர் தமது அணியின் வெற்றிக்காக ஆக்ரோஷத்துடன் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இந்த 2 அணிகளும் சந்தித்த 6 சந்தர்ப்பங்களிலும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. இரண்டு அணிகளும் 2016 க்குப் பின்னர் இன்றைய தினமே ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
அணிகள்
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்கர் அப்கான், மொஹம்மத் நபி (தலைவர்), கரிம் ஜனத், கல்பாதின் நய்ப், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக்.
ஸ்கொட்லாந்து: ஜோர்ஜ் மன்சே, கய்ல் கோட்ஸர் (தலைவர்), மெத்யூ க்ரொஸ், ரிச்சி பெரிங்டன், கெலம் மெக்லியொட், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், ஜொஷ் டாவி, சபியான் ஷெரிப், ப்றட் வீல்.
(என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM