(நா.தனுஜா)
திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது. அந்த உரம் அடங்கிய போத்தலொன்றை 1393 ரூபாவிற்குக் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு காணப்பட்ட போதிலும், அதனை அரசாங்கம் 2500 ரூபாவிற்குக் கொள்வனவு செய்திருக்கின்றது.
எனவே இந்த உர இறக்குமதியில் சுமார் 300 கோடி ரூபா மேலதிகமாகச் செலவிடப்பட்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே லிதுவேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட்டு உரம் மற்றும் தற்போது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்ற திரவ நனோ நைட்ரஜன் உரம் என்பன உரியவாறான ஆய்வுகூடப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன, மதவாதத்தைத்தூண்டி, பல்வேறு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அவர்களுக்கு வாக்களித்த அனைத்துத்தரப்பினரும் வெகுவாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.
நாட்டை நிர்வகிப்பதில் ஜனாதிபதி தோல்வியடைந்திருக்கும் நிலையில், அந்தப் பொறுப்பை பிரதமரிடம் வழங்கவேண்டும் என்றும் எதிர்வருங்காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தைச்சேர்ந்த ஒருவரை ஆட்சிபீடமேற்றக்கூடாது என்றும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றுவதற்காக முன்நின்று செயற்பட்ட மகாசங்கத்தேரர்கள் கூறியிருக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக எல்லே குணவங்ச தேரரும் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
மறுபுறம் சுகாதாரத்துறைசார் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மருத்துவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை அரசாங்கம் எவ்வாறு நடத்துகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
அதேபோன்று இரசாயன உர இறக்குமதியை இடைநிறுத்தியதன் விளைவாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். உலகில் மிகச்சொற்பளவான நாடுகளே சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருகின்றன.
அவ்வாறிருக்கையில் இரசாயன உரத்தின் இறக்குமதியை நிறுத்தி, சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் விவசாயிகளைப் பேரழியில் தள்ளியிருக்கின்றது.
உரப்பற்றாக்குறையின் காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைந்திருப்பதனால் உணவுற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
இதனால் எதிர்வரும் வருடத்தில் நாடு பாரிய உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கக்கூடிய நிலையிலிருக்கின்றது. மறபுறம் நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
இப்போது யூரியாவிற்குப் பதிலாக இந்தியாவிலிருந்து யூரியாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட திரவ நனோ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இறக்குமதி செய்திருக்கின்றது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களின்படி அதனைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயமாகும்.
அதேவேளை இந்த நனோ நைட்ரஜன் உரத்தின் இறக்குமதியிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் திரவ நனோ நைட்ரஜன் உரம் அடங்கிய போத்தலொன்றை 1393 ரூபாவிற்குக் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு காணப்பட்ட போதிலும், அதனை அரசாங்கம் 2500 ரூபாவிற்குக் கொள்வனவு செய்திருக்கின்றது.
எனவே இந்த உர இறக்குமதியில் சுமார் 300 கோடி ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே லிதுவேனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொட்டாசியம் குளோரைட்டு உரம் மற்றும் தற்போது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்ற திரவ நனோ நைட்ரஜன் உரம் என்பன உரியவாறான ஆய்வுகூடப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை.
அடுத்ததாக அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன. அரிசியின் விலையை அரிசி ஆலை உரிமையாளர்களும் ஏனைய பொருட்களின் விலைகளை அவற்றின் உற்பத்தியாளர்களும் பெருவர்த்தகர்களுமே தீரமானிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் நாடு யாரால் ஆட்சிசெய்யப்படுகின்றது? என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இவையனைத்தும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் முன்னனுபவமில்லாத ஒருவரை நாட்டின் தலைவராகத் தெரிவுசெய்தமையின் விளைவுகளாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM