(இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவிய பிரச்சினையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அரசியல் தேவைக்காக அரசியல் மயப்படுத்தினார்.
ஆட்சிக்கு வருவதற்காக வழங்கிய வாக்குறுதியை தற்போது ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும். அதனை விடுத்து ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தை முடக்க முயற்சிப்பது முறையற்ற செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாண ஆசிரியர்கள் பெற்றோருடன் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
ஆசிரியர்களை அவமதிக்கும் செயற்பாட்டை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1997ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர்-அதிபர் சேவையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அக்காலக்கட்டத்திலிருந்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண கட்டம் கட்டமாக நடவடிக்கை முன்னெடுத்துள்ளன.
இருப்பினும் எந்த அரசாங்கமும் இப்பிரச்சினையை அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் அரசியலாக்கினார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளை நம்பி அதிபர் மற்றும் ஆசியர்கள் ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சின் மேலதிக செயலளார் சுபோதினி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கையை ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முழுமையாக அங்கிகரித்தனர். ஆனால் அரசாங்கம் சுபோதினி குழு அறிக்கையினை செயற்படுத்த விரும்பவில்லை.
சுபோதினி குழு அறிக்கையை அரசாங்கம் புறக்கணித்து அமைச்சரவை உபகுழுவை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரைகளை தொழிற்சங்கத்தினர் புறக்கணித்துள்ளார்கள்.
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்கள்.
உரிமைக்காக போராடிய ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தை அரசாங்கமே தொடர் போராட்டமாக்கியது. ஆசிரியர்களை மோசமானவர்கள் என்றும், அவர்கள் மீது முட்டை எறிய வேண்டும் என அரசாங்கத்தின் தரப்பினர் குறிப்பிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்கவேண்டும்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனை ஆசிரியர்கள்- அதிபர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நம்பிக்கையான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்தையும், கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் கருத்திற்கொண்டு ஆசிரியர்ளும், அதிபர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர்கள் மீது வெறுப்படைவது பயனற்றது. ஆகவே தொழிற்சங்கத்தினர் பெற்றோருடன் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM