(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் அபே ஜனபல வேகய கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.
ஆகவே ரத்ன தேரரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து , அபேஜன பல வேகய கட்சியின் உறுப்பினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் 67 ஆயிரம் மக்களானைக்கு முரணாக அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களுக்கு துணைசென்றுள்ளார். அவர் தான் சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தையும், விவசாயிகளையும் நெருக்கடிக்குள்ளாக்கினார். தற்போது அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சிகளுடன் ஒன்றினைந்துள்ளார் என அபேஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளர் நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அபேஜன பல வேகய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு 67 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப் பெற்றது. இந்த வாக்குகளுக்கு அமைய கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது.
தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பது அனைத்து தரப்பினரது கோரிக்கையாக காணப்பட்டது. இருப்பினும் ஞானசார தேரர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்வதில ஒரு சில சிக்கல் நிலை காணப்பட்டது.
கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் விவகாரம் கட்சிக்குள் பெரும் போட்டித்தன்மையை ஏற்படுத்தியது.பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அத்துரலியே ரத்ன தேரரை தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று மூன்று மாத காலத்திற்கு பின்னர் பதவி துறப்பதாக அவர் வாக்குறுதி வழங்கினார். ஆனால் பாராளுமன்றம் சென்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டார்.
அரசாங்கம் நாட்டுக்கு எதிராக எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்க கூடாது என கட்சி மட்டத்தில் குறிப்பிடப்பட்ட போதும் அவர் தனது தனிப்பட்ட சுய இலாபத்திற்காக அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்,கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்க கூடாது என கட்சி மட்டத்தில் அறிவுறுத்தியும் அவர் அதனை பொருட்படுத்தாமல் அச்சட்டமூலங்களுக்கு ஆதரவு வழங்கி 67ஆயிரம் மக்களின் அரசியல் நோக்கத்தையும் இழிவுப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பக்க நியாயத்தை எடுத்துரைக்க அவருக்கு பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் கட்சியின் தீர்மானங்களை புறக்கணித்து கட்சியை மதிக்காமல் தன்னிச்சையாக செயற்பட்டார். அவரது செயற்பாடுகள் கட்சிக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விவசாயிகள் இரசாயன உரம் இல்லாமல் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளதற்கு அத்துரலியே ரத்ன தேரர் பொறுப்பு கூற வேண்டும்.சேதன பசளை திட்டத்தை அறிமுகம் செய்து அரசாங்கத்தையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்.
தற்போது அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சிகளுக்கு துணை செல்கிறார்.இவ்வாறான செயற்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சியின் செயற்குழு அவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
அத்துரலியே ரத்ன தேரர் மக்களின் பிரதிநிதியல்ல மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மக்களுக்கு சிறந்த சேவையாற்றியிருந்தால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். அரசியலை ஒரு வியாபராமாக்கிக் கொண்டு அதன் ஊடாக பயன்பெறுகிறார்.
அபேஜன பல வேகய கட்சியிற்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஊடாகவே அவர் பாராளுமன்றிற்கு தெரிவானார்.கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வலுவிழக்கும்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தையும், தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம். அபேஜன பல வேகய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கட்சியின் உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் தீர்மானம் தொடர்பான அறிவுறுத்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் விரைவாக அறிவிக்க வேண்டும். என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதும் வெற்றிடமாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை அபேஜன பல வேகய கட்சி நியமிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM