இந்தியா - இலங்கை இடையிலான சுற்றுலாத்துறை தொடர்பான மூன்றாவது கூட்டுச் செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் மெய்நிகர் மார்க்கம் ஊடாக நடைபெற்றிருந்தது.
இலங்கை சார்பாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி, இந்தியா சார்பாக சுற்றுலாத்துறை அமைச்சின் இணைச்செயலர் (சுற்றுலா) ஶ்ரீ ராகேஷ் குமார் வர்மா ஆகியோர் இக்கூட்டத்துக்கு இணைத்தலைமை வகித்திருந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து இங்கு உரை நிகழ்த்தியிருந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஶ்ரீ கோபால் பாக்லே, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார மற்றும் மக்கள் – மக்கள் தொடர்புகள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
சர்வதேச உல்லாசப்பயணிகளுக்காக இரு நாடுகளும் திறக்கப்படுவதற்கான ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இந்த சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளதாக உயர் ஸ்தானிகர் அவர்கள் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்.
2021 செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவிலிருந்து வருகைதந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள உயர் ஸ்தானிகர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் கொவிட்-19 நிலைமை தணிவடைந்துவருகின்றமை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதற்கு மிகமுக்கியமான காரணிகளாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு ஜனவரி கைச்சாத்திடப்பட்ட, அரசாங்கங்களுக்கிடையிலான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், இருநாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பாக இருநாடுகளினதும் குழுக்களின் தலைவர்கள் தமது ஆரம்ப உரைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன் பல்வேறு துறைகளிலும் சுற்றுலாத்துறையை மேலும் விஸ்தரிப்பது குறித்து இரு அரசாங்கங்களும் கொண்டிருக்கும் ஆர்வத்தினையும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அந்த அடிப்படையில் வான் மற்றும் கடல் மார்க்கமான தொடர்புகளை அதிகரித்தல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறந்த ஒத்துழைப்பு ஆகியவற்றின் அபிவிருத்தி மற்றும் இருதரப்பையும் சேர்ந்த சுற்றுலாத்துறை அதிகாரிகளிடையிலான கலந்துரையாடல்கள், தொடர்பாகவும் இங்கு முக்கியத்துவமளிக்கப்பட்டிருந்தது. இருநாடுகளினதும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை அமைத்துக்கொடுத்தல், இந்தியாவில் பௌத்த வளாகங்களின் அபிவிருத்தி மற்றும் இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் போன்றவை மூலமாக மத அடிப்படையிலான சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வழிகள், இந்தியாவில் உள்ள குஷிநகரை பௌத்த பயணஸ்தலமாக மேம்படுத்தல், ஆரோக்கியம், சாகச விளையாட்டுக்கள், திரைப்படம் மற்றும் களியாட்டங்கள், மற்றும் MICE ஆகியவை சார்ந்த சுற்றுலாத்துறைகளை அதிகரித்தல் போன்றவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கண்காட்சிகள் மற்றும் ஏனைய சந்தைகளை ஒழுங்கமைப்பதனூடாகவும் பரிமாற்ற விஜயங்கள் மற்றும் ஏனைய விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக, ஹோட்டல்களை முகாமைத்துவம் செய்வோர், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், உள்ளிட்ட சுற்றுலாத்துறையில் தொடர்புடைய தரப்பினரிடையிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். 2021 ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட காற்றுக்குமிழி முறைமை, இலங்கையால் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியமை, 2021 நவம்பர் முதல் இந்திய அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க ஆரம்பிக்கவுள்ளமை போன்ற இரு வழி சுற்றுலா முறைமையை மேம்படுத்த இரு அரசாங்கங்களும் அண்மைக்காலங்களில் மேற்கொண்டிருந்த தீர்மானங்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இரு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
சுற்றுலாத்துறை குறித்த இரண்டாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் 2016 ஜூனில் கொழும்பில் நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் இம்மாத முற்பகுதியில் இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த வெற்றிகரமான விஜயத்தின் அடிப்படையில் சுற்றுலாத்துறை குறித்த கூட்டுச் செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளும் கொவிட் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் நிலையிலும் அந்த விஜயத்தின்போது சிறப்புமிக்க இருதரப்பு பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய இராணுவ தலைமை தளபதியால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் விஜயத்தையும் இவ்வாறான தொடர்புகள் உள்வாங்கியுள்ளதுடன், இரு நாடுகளினதும் தலைமைத்துவங்களின் உறுதிப்பாடு மற்றும் நோக்கு ஆகியவற்றுடன் இணைந்ததாக காணப்படும் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளும் வழங்கியுள்ள முக்கியத்துவத்தையும் அத்தொடர்புகள் வலுவாக்குகின்றன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வலுவான மக்கள் தொடர்புகள் மற்றும் கலாசார தொடர்புகள் போன்றவற்றிற்கு இன்று நடைபெற்ற கூட்டுச் செயற்குழு கூட்டம் மேலும் வலுச்சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM