(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 ஈரான் கைதிகள், கைகளை தொற்று நீக்க பயன்படுத்தும் திரவம் ( செனிடைசர்) அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம், புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.
போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் கீழ், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந் நிலையில் தொற்று நீக்கல் திரவம் அருந்தியமையால் நோய்வாய்ப்பட்டுள்ள ஏனைய 10 கைதிகளுக்கும் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில், தொற்று நீக்கல் திரவத்துடன் நீரையும் சேர்த்து அருந்தியதாக கூறப்படும் ஈரான் பிரஜைகளான விளக்கமறியல் கைதிகள் சிலர் சுகயீனம் அடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு 12.00 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கைதி, நேற்று அதிகாலை 1.00 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதில் மிக மோசமான நிலையிலிருந்த மற்றொரு கைதி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் 25 வயதுகளை உடைய சஜாத் லக்ஷ்ரீன், ஹமீத் ஹம்தீன் என அறியப்படுவதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உயிரிழந்த குறித்த இரு கைதிகளும் கடந்த 2019 ஜூலை மாதம், காலி துறைமுகத்தில் இருந்து 154 கடல் மைல் தூரத்தில் ஆல்கடலில் பயணித்த படகில் இருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 106 கோடி ரூபா மதிப்புள்ள 70 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் என குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.
அந்த சம்பவத்தின் போது 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தொற்று நீக்கல் திரவம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ள ஏனையோரும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிறைச்சாலை தகவல்கள் உறுதி செய்தன.
இதனிடையே, சிறைச்சாலையில் கைதிகளுக்கு அவசியமான தொற்று நீக்கல் திரவம் வழங்கப்படும் போதும், ஈரான் கைதிகளுக்கு அவர்களது நாட்டு தூதரகத்தினாலும் தொற்று நீக்கல் திரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த கைதிகள் , மதுபானத்துக்கு பதிலாக குறித்த தொற்று நீக்கல் திரவத்தை பயன்படுத்தினரா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சிறைச்சாலை மட்டத்தில் பொரளை பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உயிரிழந்த இரு கைதிகளினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. சம்பவம் தொடர்பில் ஈரான் தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM