(நா.தனுஜா)
தேசிய பாதுகாப்பு தொடர்பான நவீன சவால்களை எதிர்கொள்வதற்கு 'சைபர் போருக்குத் தகுதிவாய்ந்த நாடாக' இலங்கை தன்னை மாற்றியமைக்கவேண்டும்.
எதிர்வரும் 15 வருடகாலத்திற்குள் அத்தகைய நிலையை அடைவதை இலக்காகக்கொண்டு செயற்படுவதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு நிகரான பலம்பொருந்திய நாடாக இலங்கை எழுச்சிபெறும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைக்கான அவரது வருகையை வரவேற்றிருக்கும் பாதுகாப்புச்செயலாளர், உலகிலேயே மிகமோசமான தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான போரின்போது சுப்ரமணியன் சுவாமியினால் வழங்கப்பட்ட பேராதரவை இலங்கையர்கள் மறக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன ஆகியோரின் பங்களிப்புடன் பாதுகாப்புக்கற்கைகளுக்கான தேசிய நிலையத்தினால் 'இருபத்தியோராம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு' என்ற தலைப்பில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சின் 'நந்திமித்ர' கேட்போர்கூடத்தில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுப்ரமணியன் ஸ்வாமி மற்றும் கமால் குணரத்ன ஆகியோர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டனர்.
அங்கு மேலும் உரையாற்றிய சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:
நாடொன்றின் தேசிய பாதுகாப்பு 4 விடயங்களை அடிப்படையாகக்கொண்டதாகும். நோக்கம் என்ன?, எதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது?, கையாளும் உத்தி அல்லது நுட்பமுறை என்ன?, வளங்களை விநியோகிக்கும் கட்டமைப்புக்கள் எவை? ஆகியவையே அந்நான்கு காரணிகளாகும்.
19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் உலகளாவிய ரீதியில் பலதரப்பட்ட போர்கள் பதிவாகியிருக்கின்றன. அவற்றுடன் 21 ஆம் நூற்றாண்டில் சைபர் யுத்தமும் (சைபர் வோர்) இணைந்திருக்கின்றது. அதன்காரணமாக இப்போது தேசிய பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் சிறிய நாடு, பெரிய நாடு என்ற பாகுபாடு இல்லாமல்போயுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை சிறியதோர் தீவாக இருக்கலாம். ஆனால் இலங்கையானது சைபர் யுத்தத்திற்கு அவசியமான தொழில்நுட்பங்களை விருத்திசெய்வதுடன் அதற்குரிய நிபுணர்களை உருவாக்கினால் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சமனான பலம்வாய்ந்த நாடாக மாறமுடியும்.
அண்மைக்காலத்தில் இவை செயல்வடிவம் பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்கு உதாரணமாக அநேகமாக கூடியவிரைவில் இந்தியாவுடன் போரில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்திருக்கும் சீனாவைக் குறிப்பிடமுடியும். இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஒருநாள் திடீரென இந்தியாவின் மும்பை நகரம் முழுமையாக இருளடைந்ததுடன் எந்தவொரு மின்சார இணைப்புக்களும் தொழிற்படவில்லை.
இந்நிலை சுமார் இரண்டு மணிநேரம் வரையில் தொடர்ந்தது. அதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் சிலமணிநேரத்தில் 'எம்மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டாம். இல்லாவிட்டால் மீண்டும் வெளிச்சம்போய் இருளடைந்துவிடும்' என்று சீனா ஓர் அறிவிப்பைச்செய்தது. அதன்மூலம் சீனா இந்தியாமீது சைபர்வழி; யுத்தமொன்றைத் தொடுத்து, அதனைச் செய்திருப்பது வெளிப்பட்டது.
நானறிந்த வரையில் எழுத்தறிவு வீதம் உயர்வான நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதுமாத்திரமன்றி விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவல்லுனர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளைக்கொண்ட நாடாகவும் இலங்கை விளங்குகின்றது.
எனவே எதிர்வரும் 15 வருடகாலத்திற்குள் 'சைபர் யுத்தத்திற்குத் தகுதிவாய்ந்த நாடாக' இலங்கையை மாற்றியமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டு, அதற்காகக் கடுமையாக உழைக்கும்பட்சத்தில் உலகில் மிகவும் பலம்பொருந்திய ஓர் நாடாக இலங்கை மாறும் என்று குறிப்பிட்டார்.
மேலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கும் சைபர் வலையமைப்பை பலப்படுத்துதல், அதற்குரிய வளங்களைப் பெற்றுக்கொள்ளல், பொருளாதார ரீதியில் உரியவாறான கொள்கைகளை வகுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம், விடுதலைப்புலிகளால் தனக்கு விடுக்கப்பட்டிருந்த உயிரச்சுறுத்தல் என்பன தொடர்பிலும் சுப்ரமணியன் ஸ்வாமி இதன்போது பகிர்ந்துகொண்டார்.
அதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச்செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன, உலகளாவிய ரீதியில் அங்கீகாரம்பெற்றவரும் இலங்கையுடன் எப்போதும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திவந்திருப்பவருமான சுப்ரமணியன் சுவாமியின் பங்குபற்றுதலுடனான இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றுவதையிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்றரீதியில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுடைய (சுப்ரமணியன் ஸ்வாமி) இலங்கைக்கான வருகை குறித்தும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளமை குறித்தும் பெருமையடைகின்றேன். நீங்கள் கடந்த காலத்திலிருந்து தற்போதுவரை இலங்கையுடன் பேணிவரும் நல்லுறவை நினைவுகூரவிரும்புகின்றேன்.
உலகிலேயே மிகமோசமான தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான போரின்போது உங்களால் வழங்கப்பட்ட பேராதரவை இலங்கையர்களாகிய நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். மிகவும் நெருக்குதலாக அக்காலப்பகுதியில் நீங்கள் எமது அரசாங்கத்திற்கு எத்தகைய ஆதரவை வழங்கினீர்கள் என்பதை நாமறிவோம் என்று குறிப்பிட்டார்.
அத்தோடு 'நீங்கள் இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவின் ஓரங்கமாகக் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமை குறிப்பிட்டுக்கூறத்தக்கதாகும்' என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM