(நா.தனுஜா)
சம்பள அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை ஆதரிக்கின்றோம். போராட்டம் என்பது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஓர் வழிமுறையாகும். இருப்பினும் கடந்த காலங்களில் பொலிஸாரினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகள் மக்களின் இந்த உரிமைகளை மீறும்வகையில் அமைந்திருந்தன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.
அதுமாத்திரமன்றி நேற்றைய தினம் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் அதிபர்,ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடக்குவதற்கோ அல்லது அதில் பங்கேற்பவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் எந்தவொரு தரப்பினரும் செயற்படாதிருப்பதனை உறுதிப்படுத்துமாறும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடகசேவையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்திற்கான இளம் தொழில்வல்லுனர்களின் வலையமைப்பு, உரிமைக்கான ஊடகவியலாளர்கள், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு உள்ளடங்கலாக 17 அமைப்புக்களும் சமூக செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ, சட்டத்தரணி சுரேன் பெரேரா, ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, நிமல்கா பெர்னாண்டா உள்ளடங்கலாக 30 தனிநபர்களும் இணைந்து 'அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படல்' என்ற தலைப்பில் கூட்டாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சம்பள அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து 87 நாட்களாக அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் நீட்சியாக இன்றைய தினம் (நேற்று) கொழும்பு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிக்கின்றோம்.
இலஙகையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்து கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குமான உரிமையையும் உறுதிசெய்கின்றது. இருப்பினும் கடந்த காலங்களில் மக்களின் இந்த உரிமைகளை மீறும்வகையில் பொலிஸாரும் அரசாங்கமும் செயற்பட்டமையினை அவதானிக்கமுடிந்தது.
போராட்டம் என்பது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு வழிமுறையாகும். இருப்பினும் எத்தகைய சூழ்நிலையிலும் போராட்டங்களுக்கு அனுமதிவழங்கப்படமாட்டாது என்று அண்மையில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்த்துள்ளமை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று (நேற்று) கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் நடைபெறும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களை பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ ஒடுக்குவதற்கு முயன்றால், அதன்விளைவாக அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே அதனைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் போராட்டங்களில் பங்கேற்பவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பொலிஸார் அல்லது வேறு தரப்பினரோ செயற்படுகின்றார்களா என்பதைக் கண்காணிக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM