(ஆர்.ராம்)
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்த அவரை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேரில் சென்று வரவேற்றிருந்தார்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் வெளிவிவகர அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருக்கவுள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்குச் செல்லவுள்ளார்.
இதன்போது தலதாமளிகையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு சமயத் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத்தொடர்ந்து நுவரெலியா சீத்தா எலியவுக்குச் செல்வதோடு, இந்திய வீடமைப்பு திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுப்பார் என்று திட்டமிடப்பட்டிருந்தபோதும் காலநிலை காரணமாக அந்த விடயம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியைத் தொடர்ந்து திருகோணமலைக்குச் செல்லவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அங்கு இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.
பின்னர், அங்கிருந்து பிற்பகலளவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், செட்டிக்குளத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை அங்குராப்பணம் செய்யவுள்ளதோடு, பருத்துறையில் ஏற்பாடாகியுள்ள பாடசாலை நிகழ்வொன்றிலும் பங்கேற்கவுள்ளதோடு, அதனையடுத்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸைச் சந்தித்துக் பேச்சுக்களை நடத்தவுள்ளவர் மாலை ஆறரை மணியளவில் யாழில் உள்ள விடுதியொன்றில் இராப்போசன விருந்துடன் முக்கிய பிரதிநிதிகளையும் சந்திக்கின்றார்.
இந்தச் சந்திப்பில், வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி., ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்.மேயர் மணிவண்ணன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சர்கள், மற்றும் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ள அவர், நாளை திங்கட்கிழமை பிற்பகலளவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், செயலாளர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
மேலும் குறித்த தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், துறைசார் நிபுணர்கள், வர்த்தகத்துறையினர் உள்ளிட்டவர்களிடத்திலும் பேச்சுக்களை அவர் மேற்கொள்ளவுள்ளார். திங்கட்கிழமை அன்று நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காணப்படும் பட்சத்தில் மறுதினமான செவ்வாய்க்கிழமை சந்திப்புக்களை தொடரவுள்ளார்.
மேலும், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய வெளிவிவகார செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். இதன்போது இருநாடுகளுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவு படுத்தல், எதிர்காலச் செயற்றிட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிலேயே இந்த உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM