உத்தேச அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் உங்களது கட்சியின் வகிபாகம் என்ன?
நான் கட்சி என்ற வகையில் தொழிலாளர் தேசிய சங்கத் தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணிக்கு
உரியவன். அதன் பொதுச்செயலாளரும் கூட. ஆனாலும் உத்தேச அரசியலமைப்பு விடயத்தில் நாங்கள் தனிக்கட்சியாக பங்களிப்பதைவிட நாம் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்மொழிவுகளையே எமது முன்மொழிவாகவும் கொள்கின்றோம். இது மலையகத்திற்கான ஒன்றிணைந்த குரலாக அமையும் என்பது எமது நம்பிக்கை. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் கூட தனியே கட்சிகளின் முன்மொழிவாக உத்தேச அரசியல் யோசனைகளை முன்வைக்காது அதற்கென விசேட நிபுணர் குழுவை அமைத்து நாமும் அவர்களோடு இணைந்து தயாரித்த யோசனைகளை கூட்டணி சார்பில் வழிப்படுத்தல் குழுவுக்கும் நிபுணர் குழுவின் சார்பாக மக்கள் கருத்தறியும் குழுவினரிடமும் சமர்ப்பித்துள்ளோம்.
பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாகவும் செயற்படவுள்ள நிலையில் அந்த செயன்முறையில் எத்தகைய குழுக்களில் நீங்கள் அல்லது உங்கள் கட்சி அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றீர்கள்? அத்தகைய குழுக்களில் மலையக மக்கள் குறித்து நீங்கள் முன்வைத்திருக்கும் யோசனைகள் என்ன?
பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாகவும் செயற்பட ஆரம்பித்ததன் பின்னர் அரசியலமைப்பு சபையின் வழிகாட்டல் குழுவின் உறுப்பினராக எமது கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் அங்கம் வகிக்கின்றார். அதன் கீழாக அமைக்கப்பட்ட உபகுழுக்களிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றோம். அவற்றுள் 'மத்தி மற்றும் சுற்றயல்' அதிகாரங்கள் குறித்த குழுவில் அங்கத்தினராக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். இப்போது எங்கள் பணிகள் நிறைவுபடுத்தப்பட்டு வழிகாட்டல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோல ஏனைய உப குழுக்களும் தங்களது குழு அறிக்கையை வழிகாட்டல் குழுவுக்கு வழங்கியிருக்கும் என நினைக்கின்றேன். இனி வழிகாட்டல் குழுவில் அவை ஆராயப்பட்டு அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
'மத்தி மற்றும் சுற்றயல்' எனும் இந்த உப குழு மத்திய அரசாங்கத்துக்கும் சூழவுள்ள மாகாண, உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மத்திய அரசின் நேரடி அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் அவை மாகாண அரசாங்கங்களுடன் கொண்டிருக்க வேண்டிய தொடர்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. இதில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினர்கள் போன்றோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி எமது அறிக்கையை தயாரித்து அளித்திருக்கின்றோம். அதிகாரப்பகிர்வு பற்றி பேசும் உப குழு என்ற வகையில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை செவிமடுக்கக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் கோரிக்கைகளும் மாகாண சபை அதிகாரங்களை வலுப்படுத்தும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. சமஷ்டி
முறை குறித்த உரையாடலும் இடம்பெற்றது.இந்த நிலைகளுக்கு அப்பால் கிராம ராஜ்ய என்ற அடிமட்ட மக்கள் பிரதிநிதித்துவ சபை குறித்தும் பேசப்பட்டது. மலையகப் பெருந்தோட்டங்களின் கீழ் மக்கள் வாழும் பகுதிகள் அரச பொது நிர்வாக முறைமைக்குள் கொண்டுவரப்படல் வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. மக்கள் கருத்தறியும் குழுவுக்கு மலையகம் சார்ந்ததாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின் யோசனைகள் அந்தக் குழுவின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் சாராம்சத்தை 'மத்தி மற்றும் சுற்றயல்' குழுவின் அறிக்கையில் இணைக்க நான் பரிந்துரைத்தேன்.
உத்தேச அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக மலையக மக்களுக்கு தனியான அதிகார அலகு பற்றி வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அது பற்றிய உங்கள் கருத்து என்ன? மலையக மக்களுக்கான அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் வட மாகாண சபை கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தின் அடிப்படையில் எத்தகைய தீர்மானத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடியும். அவர்கள் மலையக மக்களைப் பொறுத்த மட்டில் இத்தகைய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரமுடைய ஒரு சபையும் அவர்களிடம் இல்லை. அரசியல் அதிகாரம் மட்டுமல்ல நிர்வாக அதிகாரங்களைக்கொண்ட ஒரு சபையேனும் இன்றி ஓரம் கட்டப்பட்ட இனமாக மலையக தமிழ் சமூகம் உள்ளது. வடக்கினைத் தளமாகக் கொண்ட இயங்கும் அரசியல் அமைப்புகள் காலத்திற்கு காலம் பல்வேறு வகையான தீர்மானங்களை எடுத்துள்ளன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது அவர்களின் தலைமைகள் எடுத்த தீர்மானம், ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டபோது எடுத்திருக்க வேண்டிய தீர்மானம் குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேபோல வட்டுக்கோட்டைத் தீர்மானம் மலையக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எத்தகைய விளைவைத் தந்தது எனப் பார்க்க வேண்டும். உண்மையில் 1987 இல் திம்பு மாநாட்டில் மலையக மக்கள் குறித்த தீர்மானம் போன்று வடக்கு அரசியல் தரப்பு காத்திரமானதும் யதார்த்தமானதுமான வேறு தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என்பது எனது கணிப்பு.
இப்போது கூட வட மாகாண சபை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்களுக்கு தனியான அதிகார அலகு குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதைவிட வடக்கில் குறிப்பாக வன்னியில் வாழும் மலையக வம்சாவளி தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கான தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றியிருக்குமானால் அது மிகுந்த வரவேற்புக்குரியது. வன்னியில் வாழும் மலையக மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள விதத்திலும், அவர்களின் காணியுரிமை விடயத்திலும் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது. அவர்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்ற மாத்திரமல்ல சிறந்த நடைமுறைகளை கையாளவும் கூட வட மாகாண சபைக்கு அதிகாரம் இருக்கின்றது. அந்த மக்கள் வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால் வன்னிவாழ் மலையக மக்கள் தொடர்ந்தும் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
அதேபோல இன்று தேசிய ரீதியில் எதிர்க்கட்சித் தலைவராக வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்படுகின்றார். சம்பந்தன் மலையக மக்கள் குறித்த தனது மௌனத்தைக் கலைத்து நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். அது வட மாககாண சபை தீர்மானத்தை விட காத்திரமானதாக அமையும். ஏனெனில் அவர் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகளும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளும் கூட அங்கம் வகிக்கின்றார். அந்த சபையின் எதிர்கட்சித் தலைவர் என்றவகையில் சம்பந்தனின் மலையக மக்கள் குறித்து வெளியிடக்கூடிய நிலைப்பாடு என்பது தேசிய மற்றும் சர்வதேச கவனத்தைப் பெறும். எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளரான அநுரகுமார திசாநாயக்க மலையக மக்கள் குறித்த ஒரு பிரேரணையை முன்வைத்து தமது கட்சியின் நிலைப்பாட்டையும் கூட தெளிவுபடுத்தியுள்ளார். தமது ஆரம்ப கால அரசியல் நிகழ்ச்சி நிரலில் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் எச்சங்கள் என புறக்கணித்த அதே மலையக மக்களை இன்று இலங்கை நாட்டின் தேசிய இனமாக மலையக மக்களை அங்கீகரிக்க வேண்டும். மலையக மக்களை தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினர் என அழைக்க வேண்டுமா? மலையக மக்களின் அபிவிருத்திக்கு தனியான அதிகார சபை வேண்டும் போன்ற அவர்களது நிலைப்பாடு போன்றன கவனத்தைப்பெற்றுள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது எதிர்க்கட்சி என்றவகையில் இரா.சம்பந்தனோ தெளிவுபடுத்தவில்லை. இந்த மௌனம் கலையப்படல் வேண்டும்.
எம்மைப்பொறுத்த வரைக்கும் மலையக மக்கள் நிர்வாக ரீதியான அதிகார அலகுகள் கட்டாயமானதாக உறுதிப்படுத்தபடல் வேண்டும் என்பதையும் 26 ஆவது நிர்வாக மாவட்டம் மலையக மக்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்படல் வேண்டும் எனவும் தெளிவாகக் கூறியுள்ளோம். அதேபோல இந்த நாட்டின் ஆட்சி அதிகார முறை மாற்றப்பட்டு ஒற்றையாட்சி அல்லாத அதிகாரப்பகிர்வு ஒன்று முன்வைக்கப்படும்போது சமஷ்டிமுறையோ அல்லது அதற்கு இணையான வேறு ஒரு அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும்போது நாட்டில் வாழும் ஏனைய இனத் தேசிய மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பகிர்வுக்கு சமமான அதிகாரப்பகிர்வு மலையகத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.
உத்தேச தேர்தல் முறைமை எவ்வாறு அமையப்போகின்றது? அத்தகைய முறைமையில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக முன்வைக்கப்படும் மாற்றங்களில் பாரிய விடயமாகப் பார்க்கப்படுவது தேர்தல் முறைமை மாற்றம்தான். இந்த தேர்தல் முறைமாற்றம் குறித்து உப குழுக்கள் ஏதும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் நேரடியாகவே வழிப்படுத்தல் குழுவிலேயே விவாதிக்கப்பட்டு வருகின்றது. வழிப்படுத்தல் குழுவில் மலையக மக்களின் பிரதிநிதியாக எமது கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அங்கம் வகிக்கின்றார்.
இதுவரை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கிடைக்கக்கூடிய தகவல்கள் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசியல் சூழலில் ஆய்வு ரீதியாக பேசப்பட்டு வந்த கலப்பு முறை அறிமுகமாகும் சாத்தியம் உள்ளதாகத் தெரிகின்றது. அத்தகைய உத்தேச முறையின்படி தொகுதிவாரிக்கு 60 சதவீத வாய்ப்பும் விகிதாசார முறைக்கு 40 சதவீத வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. மலையக மக்கள் உள்ளிட்ட வடக்கு கிழக்குக்கு வெளியே வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களது இனத் தேசியம் சார்ந்த பிரதிநிதிகளை தொகுதி உறுப்பினராகத் தெரிவு செய்துகொள்வதற்கு உத்தேச முறைமை பெரும் சவாலாக அமையும் போல் தெரிகிறது. விகிதாசார முறைமையில் தெரிவானாலும் கூட அதற்காக தேசிய கட்சிகளில் தங்கியிருக்கும் சூழல் உருவாகலாம். எனவே வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படாத முறைமை குறித்து ஆலோசிக்க
வேண்டியுள்ளது. வடக்கு கிழக்குக்கு வெளியே ஏறக்குறயை 16 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களுள் 90 சதவீதமானோர் மலையகத் தமிழ் மக்கள். எனவே இவர்களின் எதிர்கால பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும ஆலோசனைகள் வெறுமனே எண்ணக்கருக்களாகவும் கோரிக்கைகளாகவும் மட்டுமின்றி விஞ்ஞானபூர்வ தன்மைகொண்டதாக இருக்க வேண்டும்.
மலையக கட்சிகள் மட்டுமல்ல முஸ்லிம் கட்சிகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கூட தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் இன்னும் தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. மலையக மக்களைப் பொறுத்த மட்டில் வாக்குரிமை இல்லாது அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த நிலைமை மாறி வாக்குரிமை இருந்தும் அதற்கு உரிய அரசியல் பிரதிநித்துவம் இல்லாது தவிர்க்கும் இனமாக மலையகத் தமிழர் சமூகம் மாறும் அபாயம் உத்தேச தேர்தல் முறை மாற்றத்தின் ஊடாக ஏற்பட்டுவிடாது பாதுகாப்பது மலையக சமூகத்தின் முன் உள்ள பாரிய பொறுப்பாக உள்ளது.
நேர்கண்டவர்: ஜீவா சதாசிவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM