அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

01 Oct, 2021 | 10:13 AM
image

(நா.தனுஜா)

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துக் கட்டவிழ்த்துவிடப்படும் பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும்.  பொதுவெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்று 9 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் என்பன முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, முன்னரங்க செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கையின் பிரசாரம், சித்திரவதைகளுக்கு எதிரான பூகோள அமைப்பு ஆகிய 9 அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கல்விசார் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பழிவாங்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆர்ப்பாட்டங்கள், கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை, அமைதிவழியிலான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கு தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகளின் பணிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலித்தகவல்கள் ஆகியவற்றையே இலங்கை அரசாங்கம் பதிலாக வழங்கியிருக்கின்றது.

நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருக்கும் அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குதல் மற்றும் இலவசக்கல்விக்கட்டமைப்பு தனியார், இராணுவமயப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப்பல்கலைக்கழகச் சட்டமூலம் உடனடியாக நீக்கப்படல் ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜுலை மாதத்திலிருந்து பல்வேறு தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. அதன் ஓரங்கமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதிவழியிலான போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக இலவசக்கல்விக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கோஷிலா ஹன்சமாலி பெரேரா, தொழிலாளர் போராட்ட நிலையத்தைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் அமில சந்தீப, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் ஹேஷான் ஹர்ஷன மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்டோர் இன்னமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸ் அதிகாரியொருவரின் விரலில் காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் கொவிட் - 19 சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியமை ஆகியவையே அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களின் சுகாதாரப்பாதுகாப்புத் தொடர்பில் நாம் வெகுவாகக் கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் சில செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கின்றார்கள். இதே விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றிச்சென்றமை மற்றும் அவர்களுக்கான ஒலிபெருக்கி வசதிகளை வழங்கியமைக்காக 7 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி மாணவர் ஒன்றியத்தலைவர்கள், பல்கலைக்கழகக் கல்விசார் ஊழியர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளடங்கலாக மேலும் 11 பேரின் பெயர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தலங்கம பொலிஸாரால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர்களைக் கைதுசெய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்படாத நிலையிலும் பல்வேறுமுறை அவர்களது வீடுகளுக்கு விஜயம்செய்தல், தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் ஊடாக அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.

அதேவேளை கடந்த ஜுலை மாதம் ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் அதிகமானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், அவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறு பிணையில் விடுதலைசெய்யப்பட்டதன் பின்னரும் வற்புறுத்தலின்பேரில் 16 பேர் கொவிட் - 19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் உடலியல் மற்றும் உளவியல் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகின்றோம். மேலும் பொதுவெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13