(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மேலதிக நீதவான் மற்றும் மாத்தளை நீதவானினால் விடுவிக்கப்பட்ட 15 யானைகளையும் வன ஜீவரசிகள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் வண்னம் இந்த இடைக்காலத் தடை உத்தரவு வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருனா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இயற்கை மற்றும் கலாசார கல்வி மையம் மற்றும் விலங்களுக்கான நீதி எனும் அமைப்பு, சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், அதன் தலைவர் ஹேமந்த விதானகே மற்றும் விலங்கியல் ஆர்வலர்களான பத்ரகொட கங்கானம்லாகே திலேனா, பஞ்சாலி மதுரங்கி பனாபிட்டிய, மகேஷி நளின்கா முனசிங்க, வாத்துவகே விஷாகா பெரேரா திலகரத்ன ஆகியோர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுக்களை (ரிட் மனு) பரிசீலனைக்கு எடுத்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
இன்று இந்த எழுத்தானை கோரும் மனுக்கள் பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரவீந்ரநாத் தாபரே மற்றும் நிலமல் விக்ரமசிங்க உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இதன்போது இம்மனுக்கள் தொடர்பில் இடையீட்டு மனுதாரர்களாக ஆஜராக அனுமதி கோரி யானைகளின் உரிமையாலர்கள் என கூறப்படும் தரப்புக்கள் கோரிக்கை முன் வைத்த போதும், அது தொடர்பிலான சட்ட ரீதியிலான ஆவணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்து எழுத்து மூலம் அனுமதி கோருமாறு நீதிமன்றம் அவர்களை அறிவுறுத்தியது.
அதே நேரம் இந்த விவகாரத்தில், தற்போதும் வன ஜீவிகள் திணைக்கள பொறுப்பிலுள்ள ' சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் எந்த தரப்புக்கும் விடுவிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு விடுத்த உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில் சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் பின்னவலை மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ( கைப்பற்றும் போது உரிமை கொண்டாடியோர்) கையளிக்க இரு நீதிவான்கள் பிறப்பித்த உத்தரவுகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி இந்த எழுத்தாணை ( ரிட் மனு) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரன், மாத்தளை நீதிவான் சி.விக்ரமநாயக்க ஆகியோரின் உத்தரவுகளை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரியே மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம், 2241/21 ஆம் இலக்க ஆகஸ்ட் 19 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமனி அறிவித்தலுக்கும் இடைக்கால தடை விதிக்க குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
வனஜீவிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நயகம், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு (01) பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரன், மாத்தளை நீதிவான் சி.விக்ரமநாயக்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் பெயரிடப்பட்டுள்ளனர்.
வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் யானைகளை பதிவு செய்யும் புத்தகத்தை மோசடியான முறையில் மாற்றி, அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வைத்திருந்ததாக கூறி, சி.ஐ.டி. மற்றும் வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட யானைகளை, மீளவும் அதனைக் கைப்பற்றும் போது உரிமைக் கோரியவர்களுக்கே விடுவித்தமை விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் பல பிரிவுகளை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது தொடர்பில் நீதிவான்கள் வழங்கிய உத்தரவுகளும், யானைகளை விடுவிக்க சட்ட மா அதிபர் வழங்கிய அனுமதியும் சட்டத்துக்கு முரணானது என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி, வன ஜீவிகள் அமைச்சர் விமவீர திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியானது, சட்ட விரோதமாக யானைகளை பிடித்து பதிவு செய்துகொள்ளவும், அதனை மையப்படுத்திய கடத்தல்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டுக்காட்டியுள்ளனர்.
அந்த வர்த்தமானி ஊடாக யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளதாகவும், சட்ட விரோத யானை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் அது வழியமைக்கும் எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே 14 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ( கைப்பற்றும் போது உரிமை கொண்டாடியோர்) கையளிக்க இரு நீதிவான்கள் பிறப்பித்த உத்தரவுகளை வலுவிழக்கச் செய்யுமாறும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM