(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் 623 பொருட்களுக்கு, இறக்குமதி உத்தரவாத தொகையை 100 வீதமாக அதிகரித்த இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என, முன்னாள் திறைசேரி செயலரும் தற்போதைய ஜனாதிபதி செயலருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் குறித்த நடவடிக்கையானது, கொவிட் பரவலின் பின்னரான பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் அர்த்தமற்ற செயற்பாடு என வர்ணித்துள்ள அவர், அதனால் அதனை கண்டிப்பாக மீள் பரிசீலனைச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
'எகொனொமி நெக்ஸ்ட்' எனும் இணையத் தளத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அளித்துள்ள விஷேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'தகவல் தொழில் நுட்பம் என்பது ஏற்றுமதி வருமானத்தை சடுதியாக அதிகரிக்க உதவிவரும் ஒரு துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வருடம் தகவல் தொழில் நுட்பத் துறை ஊடாக 1.7 பில்லியன் டொலர் வருமானம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய வங்கி தகவல் தொழில் நுட்ப துறைக்கு அவசியமான பொருட்களுக்கு இறக்குமதி உத்தரவாத தொகையை 100 வீதமாக அதிகரித்துள்ளது. இது அர்த்தமற்றது என்பதுடன் ஆரோக்கியமானது அல்ல.
கொரோனா நிலைமையின் பின்னரான பொருளாதார வளர்ச்சி, பணப் புழக்கம் தொடர்பில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையே அவசியமாகும் நிலையில், கண்டிப்பாக இந்த இறக்குமதி வரம்புகள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும்.' என தெரிவித்துள்ளார்.
கையடக்கத்தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள், பழவகைகள், ரயர் உள்ளிட்ட 11 வகையான (அதற்குள் மேலும் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன) அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அவற்றுக்கான முழுத்தொகையையும் பணமாக வைப்புச்செய்வது அண்மையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற நாணயச்சபையின் கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளின் நாணயக்கடிதங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதியின்போது குறைந்தபட்சம் அதற்குரிய முழுத்தொகையையும் (100 சதவீதம்) பணமாக வைப்புச்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாணயமாற்றுவீதத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டுச்சந்தையின் திரவத்தன்மையை சாதகமான மட்டத்தில் பேணுவதற்குமென தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கிலும் அநாவசியமான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலுமே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபேசிகள் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களையும் மின்விசிறி, தொலைக்காட்சி, குளிரூட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் கமரா, தலைமுடி கிளிப், சூடாக்கி, விளக்குகள் மற்றும் அனல் அடுப்பு போன்ற வீட்டுப்பாவனை சாதனங்களையும் குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடை, விளையாட்டு உடைகள், இரவு உடைகள் மற்றம் பிஜாமாக்கள், மேலங்கிகள், சேர்ட் மற்றும் பிளவுஸ், முழு உடை, நீச்சல் உடை, டி-சேர்ட், பாதணி, மணிக்கூடுகள், வெயிலுக்கு அணியும் கண்ணாடி உள்ளிட்ட அணியும் ஆடை மற்றும் துணிப்பொருட்களையும் இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அதன் முழுத்தொகையையும் பணமாக வைப்புச்செய்யவேண்டியது அவசியமாகும்.
மேலும் தளபாடம், விளக்குகள், விளக்கு பொருத்துகள், அலங்காரப்பொருட்கள், மேசைப்பொருட்கள், சமையலறைப்பொருட்கள், கட்டில் விரிப்புக்கள் போன்ற வீட்டுத்தளபாடங்களையும் இறப்பர் ரயர்களையும் வாயுச்சீராக்கிகளையும் இறக்குமதி செய்யும்போதும் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தோடு பழவகைகளான அப்பிள், திராட்சை, தோடம்பழம், உலர்த்திய பழங்கள் மற்றும் பழரசங்களின் இறக்குமதி, ஒப்பனைப்பொருட்கள் மற்றும் மலசலகூடப்பொருட்களின் இறக்குமதி, குடிபானங்களான பியர், வைன், கனிம குடிநீர் மற்றும் ஏனையவற்றின் இறக்குமதி, ஏனைய உணவுப்பொருட்களான தானியத்தயார்ப்படுத்தல்கள், மாவுச்சேர்க்கைகள், சொக்லேட், முளை தானியம், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணை ஆகியவற்றின் இறக்குமதியின் போதும் அதற்குரிய முழுத்தொகையும் பணமாக வைப்புச்செய்யப்பட வேண்டும்.
மேலும் ஏனைய உணவல்லா நுகர்வுப்பொருட்களான இசைச்சாதனங்கள், புகையிலைப்பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள், காகிதத்தாள்களின் இறக்குமதிகளும் மேற்படி விதிமுறைக்கு உட்படுகின்றன.
இவ்வாறான நிலையிலேயே, இலங்கையின் முன்னாள் திறை சேரி செயலரும், தற்போதைய ஜனாதிபதி செயலாளரும் மூத்த அரச அதிகாரியுமான பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் தீர்மானம் மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM