(நா.தனுஜா)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளகக்கட்டமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அவற்றுக்கு வாய்ப்பளிக்கவேண்டியது அவசியம் என்றும் மாறாக அதனை மீறும்வகையிலான வெளியகப்பொறிமுறையொன்றை நிறுவுவது அநாவசியமானதும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நியூயோர்க்கிற்குச் சென்றிருக்கும் நிலையில், அங்கு அமைச்சர் பீரிஸ் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பெய்னை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனின் சார்பில் ஜீ.எல்.பீரிஸிடம் வாழ்த்துக்களை வெளிப்படுத்திய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், இருநாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது வருட நிறைவை முன்னிறுத்திய கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை தொழிற்கல்வி வழங்கலில் அவுஸ்திரேலியாவின் முன்னேற்றகரமான அனுபவம் தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அவ்விடயப்பரப்பில் உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு ஆட்கடத்தல் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் பீரிஸ், இச்சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்கு அவசியமான கணிசமானளவு பங்கை இலங்கை அரசாங்கம் வழங்கும் உறுதியளித்தார்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணகத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் மற்றும் அதன் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை பற்றிக் குறிப்பிட்ட அவர், இவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கான வழிமுறைகளை அடையாளங்காண்பதில் அக்கறை செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை உள்ளகக்கட்டமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அவற்றுக்கு வாய்ப்பளிக்கவேண்டியது அவசியம் என்றும் மாறாக அதனை மீறும்வகையிலான வெளியகப்பொறிமுறையொன்றை நிறுவுவது அநாவசியமானதும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும் என்றும் அமைச்சர் பீரிஸ் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானவகையில் இலங்கையைத் தேர்ந்தெடுத்து இலக்குவைக்கும் வகையிலான பொறிமுறையைக் கையாள்வது முதிர்ச்சியற்ற செயற்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM