தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்  போர் குற்றங்களில் ஈடுபடவில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Digital Desk 4

15 Sep, 2021 | 09:10 PM
image

(ஆர்.யசி)

விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் அதற்கு முகங்கொடுத்து அந்த இயக்கத்தின் நற்பெயரையும் தமிழ் இனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையுமே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk

இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், நான், விக்கினேஸ்வரன் ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உப நாடுகளுக்கு அவசரமாக அனுப்பிவைத்தோம். பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே அந்த கடிதத்தின் முக்கியம் பொருளாக அமைந்திருந்தது. அந்த கடிதம் வெளியிடப்பட்டவுடன் அதற்கு எதிராக அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

எமது நிலைப்பாட்டுடன் மக்கள் இல்லை என்பதை அரசாங்கம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் தான் மக்கள் ஒன்றிணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கோட்டம் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.

இது மாபெரும் வெற்றியென்றே கூற வேண்டும். ஆனால் இந்த வெற்றியை திசைதிருப்பும் முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. 

நாம் கூட்டாக செயற்பட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுத்து செயற்பட்ட வேளையில் அதனை முழுமையாக மாற்றியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டது. இவர்களுடன் இனியும் நாம் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.

இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். மனித உரிமைகள் பேரவையில் கூட உள்ளக பொறிமுறையை வலியுறுத்தியுள்ள நிலையில் அதனை வரவேற்று உலகத்திற்கு சொன்னது மட்டுமல்லாது எமது மக்கள் மத்தியில் பொய்யை திணிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

மக்கள் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதேபோல் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அதனை நிருபிக்கலாம் என்பதையே தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம். உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. 

ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் அதற்கு முகங்கொடுத்து அந்த இயக்கத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையும் தமிழ் இனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையுமே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றோம். இவ்வாறு விசாரணை ஒன்று நடந்தால், உண்மையும் அதன் பின்னையும் வெளிப்பட்டால் எமது நியாயங்கள் உறுதிப்படுத்தப்படும். அதனையே நாம் கூறுகின்றோம்.

அதுமட்டுமல்ல இயக்கம் என கூறிய நபர்களை அரசாங்கம் கொலைசெய்துவிட்டது, இப்போது எங்கே சென்று அவர்களை விசாரிப்பது, இன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் போன்றவர்களையே விசாரிக்க வேண்டும். ஆகவே விசாரணை ஒன்று நடந்தால் புலிகளின் நற்பெயர் உறுதிப்படுத்தப்படும். இயக்கம் தவறிழைத்தது என்பது சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகும். 

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதுமட்டும் அல்ல பயங்கரவாத தடை சட்டம் ஒன்று எந்தவொரு சட்டமும் புதிதாக கொண்டுவரவும் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்