ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து மதத்தினரும் இணைந்து குரல்கொடுத்து உண்மையினை கண்டறியவேண்டும் - இரா.சாணக்கியன்

Published By: Digital Desk 3

21 Aug, 2021 | 06:07 PM
image

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து இதற்காக குரல்கொடுத்து உண்மையினை கண்டறியவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களை கடந்துள்ள நிலையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிவேண்டி இன்றைய தினம் கறுப்புக்கொடிகளை கட்டுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அலுவலகத்திற்கு முன்பாக கறுப்புக்கொடியை ஏற்றிவைத்தார்.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன் படுகாயங்களும் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள்விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது அலுலகத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை கறுப்புக்கொடியை ஏற்றி தனது ஆதரவினை பேராயருக்கு வழங்கியுள்ளார்.

அனைத்து இன,மத மக்களும் இணைந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான உண்மையினை கண்டுபிடிக்க அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது வேண்டுகோள்விடுத்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருதது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 28 மாதங்கள் பூர்த்தியடைகின்றது.பேராயர் மல்கம் ஆண்டகை கறுப்புக்கொடிகளை இன்றைய தினம் எட்டுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தார்.அந்த நிகழ்வில் நானும் இன்று இணைந்திருந்தேன்.

கடந்த காலத்தில் பேராயர் மல்கம் ஆண்டகை உட்பட தெற்கில் உள்ள கத்தோலிக்க மதகுருக்கள் வடகிழக்கில் நடந்த அநீதிகளுக்கு குரல்கொடுக்கவில்லை,நீங்கள் ஏன் அவர்களுக்காக குரல்கொடுக்கின்றீர்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.

இருந்தபோதிலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்  நடைபெற்றபோது அதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகும்.மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 31 பேர் உயிரிழந்திருந்ததுடன் அதில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர். அந்த தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த சிறுமியொருவர் தனது தாய்தந்தையரையும் இழந்த நிலையில் இன்று உள்ளார். இவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்கான விடையை கேட்கவேண்டிய தேவையுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் இலங்கை தமிழரசுக்கட்சியாக இருக்கட்டும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.யாரும் செய்யவில்லையென்பதைபற்றி கதைப்பது அநாவசியமாகும்.நாங்கள் நீதிகேட்கவேண்டிய நிலையுள்ளதனால் அதனை கேட்கவேண்டும்.அதன்காரணமாக நான் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.

நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்கள் விசேட உரையென்று கூறிக்கொண்டு நகைச்சுவை படம் ஒன்றினை 10 நிமிடங்கள் ஓட்டினார்.இந்த அரசாங்கம் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கம் என்பதற்கு உதாரணம் அந்த உரையினைத்தவிர வேறு எதுவும்தேவையில்லை.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் 250க்கு மேற்பட்டவர்கள்தான் உயிரிழந்திருந்தனர். ஆனால் இந்த நாட்டில் 7000க்கும் அதிகமானவர்களை இன்றைய கொரனா தொற்றினால் இழந்திருக்கின்றோம். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் கடன்களை கட்டவேண்டும்,வேலைவாய்ப்பினை பாதுகாக்கவேண்டும்,வியாபாரங்களை பாதுகாக்கவேண்டும் என்று கூறுகின்றாரே தவிர நாட்டின் மக்களின் உயிரைப்பாதுகாக்கவேண்டும் என்று கூறியது மிகவும் குறைவு.

பேராயர் மல்கம்ஆண்டகை இந்த விடயத்தினை தனது கையிலெடுத்து தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு நீதிகோரிவருவதன் காரணத்தினால் இதற்கு ஒரு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்ததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இறுதியுத்ததிற்கு முற்பட்ட காலத்தில் மதத்தலைவர்கள் கடத்தப்பட்டார்கள்,கொல்லப்பட்டார்கள்,தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டு அங்கு தஞ்சடைந்திருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு இந்த நாட்டிற்குள் உடனடியாக தீர்வு கிடைப்பது என்பது கஸ்டம்தான்.

இருந்தபோதிலும் பேராயர் மல்கம் ஆண்டகை அதன்மீது நம்பிக்கைகொண்டு அது தொடர்பான அறிக்கைகளை விடுத்திருந்தார். அதில் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த காலத்தில் இஸ்லாமிய கடும்போக்கு சக்திகள் ஒரு சிலதை பயன்படுத்தி யாரோ ஒருவர் தமிழர்,சிங்களவர் மீது ஒரு தாக்குதலை நடாத்தினார் என்று சொன்னால் நாளை பௌத்த மதத்தினை சேர்ந்த ஒருவரையோ,சைவசமயத்தினை சேர்ந்த ஒருவரையோ வைத்து ஓரு தாக்குதலை அவர் நடாத்தமாட்டார் என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளிவைப்பதாகயிருந்தால் நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தவேண்டும்.அதற்கு நாங்கள் நிச்சயமாக குரல்கொடுப்போம்..

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டனர். அவர்களை கொலைசெய்ததாக கூறி முன்னாள் போராளி அஜந்தன் என்பவரை கைதுசெய்தார்கள். அது நடைபெற்று இரண்டு வருடங்களின் பின்னர் ஈஸ்டர் தாக்குதல் நடாத்தியவர்கள்தான் அந்த பொலிஸாரை கொலைசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனால் எதற்காக முன்னாள் போராளி அஜந்தனை தடுத்துவைத்துள்ளீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கேட்டு கடிதம் எழுதிய பின்னரே அவரை விடுதலைசெய்திருந்தார்கள்.

அந்த நேரத்திலேயே இந்த கொலைகளைச்செய்து அதன் பழியை முன்னாள் போராளிகள் மீது சுமத்தப்பட்டது. மாவீரர் தினம் நடைபெற்று சில தினங்களின் பின்னரே வவுணதீவு சம்பவம் நடைபெற்றது. அன்று கொல்லப்பட்ட அந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் நீதிவேண்டும். ஒருவேளை அந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தியவர்கள்தான் இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலைசெய்தார்கள் என்பது கண்டறியப்படாமலிருந்திருந்தால் அஜந்தன் இன்றுவரையில் சிறையிலிருந்திருப்பார். அதனை வைத்து இன்னும் ஆயிரம் முன்னாள் போராளிகளை கைதுசெய்திருப்பார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு அரசாங்கத்திற்கு உதவி செய்து,தமிழர்களைக்கொலைசெய்து இன்று வரையில் புனர்வாழ்வளிக்கப்படாத நிலையுள்ள ஒட்டுக்குழுக்களுக்கே புனர்வாழ்வளிக்கவேண்டும் என்று நான்கோரிவருகின்றேன். விடுதலைப்போராட்டத்திலிருந்தவர்களை நான் கூறவில்லை. ஆனால் விடுதலைப்போராட்டத்தினை காட்டிக்கொடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கே அரசாங்கம் முறையான புனர்வாழ்வினை அளிக்கவேண்டும் என்று கூறுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டிருந்தோம்.அந்த பெற்றோர்,உறவினர்கள்பட்ட கவலையினை நாங்கள் பார்த்தோம்.உண்மையில் இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றான இணைந்து இதற்காக குரல்கொடுத்து உண்மையினை கண்டறியவேண்டும்.

இன்று இதன் உண்மையினைக்கண்டறியாமல் விடுவோமானால் நாளை தினம் இவ்வாறான சம்பவங்கள் நாளையும் நடக்கலாம்.இதனை இயக்கியதாக சும்மா பெயர்களை குறிப்பிடுவதை விடுத்து தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படவேண்டும். அமைச்சர் சரத் வீரசேகர கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். பேராயர் அவர்களே கூறுகின்றார் நீங்கள் கைதுசெய்துள்ளவர்கள் சின்ன மீன்கள்,பெரியமீன்கள் எல்லாம் வெளியில் சுற்றுகின்றது என்று. அந்த பெரிய மீன்கள் யார்? பேராயரின் கோரிக்கையென்பது நியாயமானது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களை கடந்துள்ள நிலையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும்.இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சிலர் கடந்த காலத்தில் பல குற்றச்செயல்களை செய்தவர்களாக இருக்கலாம்.அதனால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகேட்க தயங்கலாம்.

ஆனால் ஆகக்குறைந்தது சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராகயிருந்தபோது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த 31 குடும்பங்களுக்கும் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகள் கூட இன்று நிறைவுபெறாத நிலையிலுள்ளது. அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருப்பவர்கள் அந்த வீடுகளையாவது பூர்த்திசெய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்று உயர் பதவிகளில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அஸ்கீரிய,மல்வத்து பீடங்களை சென்று சந்தித்து தங்களை பாதுகாக்குமாறு கோருகின்றனர்.ஈஸ்டர் தாக்குதலில் தங்களை குற்றவாளிகளாக மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர்.இது ஒரு நாடகமா அல்லது உண்மையாக அவர்களின் நிலைமையினை போய்ச்சொன்னர்களா தெரியாது. ஆனால் பொலிஸ் பிரிவில் அதியுயர் பதவியிலிருப்பர்கள் மதத்தலைவர்களிடம் சென்று நீதிகேட்கும் நிலையேற்பட்டுள்ளது என்றால் இந்த நாட்டின் நிலைமை என்ன என்பது புரிகின்றது.செய்தவர்களை விடுத்து தங்களை குற்றவாளிகளாக மாற்ற முற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறானால் செய்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. இன்று இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இந்தளவுக்குத்தான் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47