சிவலிங்கம் சிவகுமாரன்
இலங்கையில் 60 வயதுக்கும் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த இரு பிரிவினருக்கும் குறித்த தடுப்பூசி வகைகள் இரண்டு டோஸ்களையும் போட்டு முடிப்பதற்கு அடுத்த வருட நடுப்பகுதி வரை காலம் செல்லும் எனக் கூறப்படுகின்றது.
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனமோ செப்டெம்பர் மாதத்துக்குள் சகல நாடுகளும் தமது பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கியிருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
தடுப்பூசிகள் பற்றாக்குறை, நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை என பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் தொடர்பில் அக்கறையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வயது வந்தோருக்கான தடுப்பூசி வழங்கல் திட்டமும் டெல்டா வைரசின் பாதிப்பு குறையும் பட்சத்திலும் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டியதாகவுள்ளது.
வயதானவர்களுக்கு எங்ஙனம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றதோ அதே போன்று வளர்ந்து வரும் சிறுவர்களுக்கும் இந்த பிரச்சினை உள்ளது.
இவர்களது வயது மற்றும் உடல் நிலையானது கொரோனா அல்லது வீரியமிக்க டெல்டா வைரஸ்களை தாங்கக்கூடிய அளவுக்கு இல்லை.
ஆகவே உலக நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் 12 தொடக்கம் 18 வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் குறித்து சுகாதார தரப்பினரால் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதென்றால் குறிப்பிட்ட வயதுடைய மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே அதை சாத்தியமாக்கலாம் என கல்வி அமைச்சும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஆகவே இது குறித்து ஆலோசித்து வருவதாக மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை
இதேவேளை சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இன்னும் இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையென கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இவ்விடயத்தில் தடுப்பூசிகள் வழங்கும் குழுவே இதற்கான இறுதி தீர்மானங்களை எடுக்கவேண்டும். சிறுவர்களுக்கு எந்த தடுப்பூசி வகைகளை வழங்கலாம் என்பது அதில் முக்கியமானது என்றும் அவர் கூறுகின்றார்.
சிறுவர்களுக்கு உகந்த பைஸர் தடுப்பூசி
எனினும் உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது பைஸர் தடுப்பூசி சிறுவர்களுக்கு உகந்தது என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சீனாவைத் தவிர நோர்வே, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், டுபாய், இஸ்ரேல், ஜேர்மனி, அவுஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், இத்தாலி, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, சிங்கபூர், ஹொங்கொங் ஆகிய நாடுகள் தமது நாட்டின் சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து விட்டன.
இதில் டுபாய், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவசரகால நிலைமைக்கு வழங்கப்படும் பைஸர் பயோடெக் தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டமாக வழங்க ஆரம்பித்துள்ளன.
சீனா தனது நாட்டில் 3 தொடக்கம் 17 வரையான வயதுடைய சிறுவர்களுக்கு அவசர கால நிலைமைகளில் வழங்கப்படும் தனது நாட்டு தயாரிப்பான சைனோவெக் தடுப்பூசியை வழங்க அனுமதி அளித்துள்ளது.
சவால்கள் என்ன?
அண்மையில் இலங்கையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த இணைய வழி கலந்துரையாடல் ஒன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பல வைத்தியர்கள், மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள் இதில் உள்ள சாத்தியக் கூறுகள், சவால்கள், தடைகள் பற்றி விபரித்தனர்.
குழந்தை மருத்துவ நிபுணரான டொக்டர் சுரந்த பெரேரா கூறும்போது அமெரிக்காவில் 23 வயதுக்குட்பட்ட சுமார் 1 இலட்சத்து 91 ஆயிரத்து 641 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
மேலும் நோய் அறிகுறியற்ற தனி நபர்களின் நடமாட்டங்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பானது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை சிபாரிசு செய்கின்றது. அங்கு முதல் தடுப்பூசி போட்டவுடன் இரண்டாது ஊசியை மூன்று வார காலத்துக்குள் போடவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை இக்கலந்துரையாடலில் குழந்தை மருத்துவ நிபுணரும் ஓய்வு நிலை பேராசிரியருமான டொக்டர் லமாபாதுசூரிய, இதய நோய்கள் அது தொடர்பான பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இது இலங்கைக்கு மட்டுமானதல்ல. பூகோள ரீதியாக பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உள்ள சில பிரச்சினைகள் காரணமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
கொரோனா தடுப்பூசிகளுக்குப் பிறகு இவ்வாறான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலை தூக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
ஆனால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே இவ்வாறு இடம்பெறுகிறது என்றும் அங்கும் கூறப்பட்டது.
அமெரிக்காவின் ஹார்வட் சுகாதார பிரசுரங்களின் ஆசிரியர் டொக்டர் கிளாயர் மெக்கர்த்தி தனது கட்டுரையொன்றில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் இது தொடர்பான 1000 வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடுகிறார்.
இவை அனைத்தும் இளம் பருவத்தினர் முகங்கொடுத்த பாதிப்புகளாகும். இரண்டாவது தடுப்பூசியை பெற்ற சில காலங்களில் இந்த பாதிப்புகளுக்கு இவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.
ஆனால் தற்போது இதில் 79 வீதமானோர் அதிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.
இருப்பினும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிபுணர்கள் கொவிட்– 19 தடுப்பூசிகளில் அபாயங்களை விட நன்மைகளே அதிகம் உள்ளதாக விவாதிக்கின்றனர்.
டொக்டர் சுரந்த பெரேரா கூறும்போது ‘குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை, குழந்தை மருத்துவ நிபுணர்கள் பரிசோதிக்கவேண்டும். அவர்கள் சிபாரிசுகளை வழங்க வேண்டும்.
தப்பூசிகளினால் எழும் சிக்கல்கள் அரிதானவை என்றாலும் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் தொடர்பில் குறைந்தது 6 வாரங்களுக்கான கண்காணிப்புகள் அவசியம் என்றும் அவர் கூறுகின்றார்.
இது தொடர்பில் பெற்றோர்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில்களை வழங்குவதற்கு மருத்துவ செயலிகளை (Apps) உருவாக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என்று ஆராயப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு செப்டெம்பரில் அநேகமாக சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று இவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் அனுமதியளித்தால் கூட்டு நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு (ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் கொண்டவர்கள்– co morbidities) இதில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
இந்த பிரிவில் சுமார் 25 ஆயிரம் குழந்தைகள் இருக்கின்றனர் என்பது எமது அண்ணளவான கணிப்பு என்றும் இவர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கும் வரை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தாமே பாதுகாத்து வர வேண்டிய நிலைமைகளில் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM