- ரொபட் அன்டனி -
கடந்த காலங்களைவிட தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மரணங்கள் அதிகளவில் அதிகரித்து செல்கின்றன. மரணங்களின் அதிகரிப்பை பார்க்கும்போது ஒரு அச்ச நிலைமை ஏற்படுகின்றது. எனவே அதற்கு தொடர்ந்தும் இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
சுகாதார தரப்பினரை பொறுத்தவரையில் இந்த தொற்றுநோய் காலத்தில் மிகவும் உற்சாகமாகவும் களைப்படையாமலும் சலிப்படையாமலும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் தொற்று ஏற்படுமானால் பாரதூரமான ஒரு சூழலை நாட்டில் ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவ துறையை பாதுகாக்க வேண்டும். அதற்கு பொது மக்களும் விழிப்புடன் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாக தமது பங்களிப்பை வழங்குவது இன்றியமையாதது.
மேல் மாகாணத்தில் வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தொற்றாளர்கள் கட்டிலிலும் நிலங்களிலும் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் அவல நிலையை தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்த ஊடகவியலாளர் ஒருவர் முக்கியமான விடயம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் கொரோனா வைரஸ் விடயத்தில் எவ்வாறான பாதகமான நிலைமை நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அறிக்கையிட்டுக்கொண்டிருந்தோம், அந்த நிலைமையை இன்று நாங்கள் இலங்கையில் காண்கிறோம் என்றதொரு மிகவும் முக்கியமான சகலரும் சிந்திக்க வேண்டியதான ஒரு பதிவை அவர் இட்டிருந்தார். இந்த பதிவு உண்மையிலேயே ஒரு பாரதூரமான நிலைமையை எமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது. முக்கியமாக நாடு தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் விடயத்தில் எவ்வாறான நிலையில் இருக்கின்றது என்பதை எமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. இதனை வெறுமனே சமூக ஊடக பதிவாக எடுத்துக்கொள்ள முடியாது.
எவ்வாறான கட்டத்தை நோக்கி இந்த வைரஸ் பரவல் விடயத்தில் நாடு சென்று கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்தக்கூடிய மிக முக்கியமான பதிவாக இது காணப்படுகின்றது. அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் தற்போதைய சூழலில் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்து செல்வதை காண முடிகிறது.
வொஷிங்டன் பல்கலையின் முன்னைய எச்சரிக்கை
அதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்பாக எதிர்வுகூறல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது செப்டெம்பர் மாதமாகும்போது தினம் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக அந்த பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சில மாதங்களுக்கு முன்னர் செப்டெம்பர் மாதமளவில் மோசமான நிலைமை நாட்டில் ஏற்படும் என்றும் மரணங்கள் அதிகரிக்கும் என்றும் தினம் நூறு மரணங்கள் பதிவாகும் அபாயம் இருக்கின்றது என்றும் தெரிவித்திருந்தார். ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்த அவ்வப்போது சில விடயங்களை இந்த வைரஸ் தொற்று தொடர்பில் எதிர்வு கூறிவருகின்றார். அந்தவகையில் தற்போதைய சூழலில் நாட்டில் எவ்வாறானதொரு நிலைமை நீடித்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தினமும் 80 அல்லது 70 என்ற வகையில் மரணங்கள் பதிவாகின்றன. இவ்வாறு மரணங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும் தன்மையானது ஒரு அபாயகரமான நிலைமையை சகலருக்கும் எடுத்துக் காட்டுகின்றது
அதிகரிக்கும் மரணங்கள்
மேலும் இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்று பரவலானது தீவிரமடைந்து செல்வதை காண முடிகிறது. தற்போது மூன்றாவது அலையில் தினந்தோறும் அடையாளம் காணப்படும் பெற்றவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து செல்கின்றது. அதேபோன்று மரணங்கள் மிக அதிக அளவாக உயர்வடைந்து செல்கின்றன. கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகள் வைரஸ் தொற்று நோயாளர்களினால் நிறைந்து கிடப்பதைக் காணமுடிகிறது. பலர் சிகிச்சை படுக்கைகள் இன்றி நிலத்திலும் இருந்து சிகிச்சை பெற்று வருவதை காணமுடிகிறது. அந்தவகையில் ஒரு அபாயகரமான நிலைமையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோமா என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்த நிலைமையை உணர்ந்து சகலரும் தமது பொறுப்பு என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.
சுகாதார நடைமுறைகள் மறக்கப்பட்டுவிட்டனவா?
ஆனால் பல்வேறு தரப்பினரையும் நோக்கும் போது பலரும் இந்த சுகாதார அறிவுறுத்தல்களை சரியான முறையில் கடைபிடிக்காமல் இருப்பதை காண முடிகிறது. இந்த நிலைமையானது ஒரு பாரதூரமான அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்வதற்கு காரணமாகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. மிக முக்கியமாக தற்போது சுகாதார ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும் அதிகரித்து வருகின்றது. சுகாதார தரப்பினரை பொறுத்தவரையில் இந்த தொற்று நோய் காலத்தில் மிகவும் உற்சாகமாகவும் களைப்படையாமலும் சலிப்படையாமலும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் தொற்று ஏற்படுமானால் பாரதூரமான ஒரு சூழலை நாட்டில் ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவ துறையை பாதுகாக்க வேண்டும். தற்போது இந்த செயற்பாடுகளில் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். எப்படியிருப்பினும் தற்போதைய இந்த நிலைமை ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் கொரோனா தொற்று காணப்படுகிறது. அதன் பின்னர் பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சை படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன. வைத்தியசாலைகளின் விரிவுபடுத்தப்பட்டன. அப்படி இருந்தும் கூட தற்போதும் சிகிச்சை படுக்கைகள் குறித்த நெருக்கடி காணப்பட்டு வருவதை அறியமுடிகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளை விட தற்போது குறைந்தளவான பி.சி.ஆர். பரிசோதனைகளே செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்ற சூழலிலும் கூட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதை காணமுடிகிறது.
மூன்று முக்கிய விடயங்கள்
அதனால் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு சகலரும் பொறுப்புடன் செயல்படுவது மிக முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக சுகாதார அறிவுறுத்தல்களை, நடைமுறைகளை, வழிகாட்டிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது. சுகாதார தரப்பினர் சுகாதார வழிகாட்டல்கள் குறித்து சரியான முறையில் விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால் அவற்றை சரியான முறையில் பின்பற்றுகின்றனரா என்பதே இங்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது. தற்போது இந்த இக்கட்டான நெருக்கடியான சூழலில் மூன்று முக்கிய விடயங்களுக்கு அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
முதலாவதாக எந்தவிதமான விட்டுக்கொடுப்புமின்றி சகலரும் சுகாதார நடைமுறைகளை விதிமுறைகளை வழிகாட்டிகளை ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை யாராவது பின்பற்றாமல் செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் எந்த ஒரு தரப்பினரும் பின்வாங்கக்கூடாது. அது பொது இடமாக இருக்கலாம், வர்த்தக நிலையமாக இருக்கலாம், போக்குவரத்து சாதனமாக இருக்கலாம், எந்த ஒரு இடத்திலும் சகலரும் இந்த வழிகாட்டிகளை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வதற்கு முன்வரவேண்டும். அவற்றைத் மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. காரணம் அவ்வாறு அந்த நடைமுறைகளை மீறுவதன் ஊடாக அவர்கள் தங்களையும் அபாயத்துக்கு உட்படுத்தி தங்களை சுற்றி இருப்பவர்களையும் அபாயத்தை உட்படுத்துகின்றனர். இதுவே யதார்த்தமாக இருக்கிறது. அதனால் அவ்வாறு செயற்படுவதற்கு யாருக்கும் இடமளிக்கக்கூடாது. அது தொடர்பாக கவனம் எடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
இரண்டாவதாக சகலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். தற்போது நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் மிகத்தீவிரமாக பரந்துபட்ட ரீதியில் செலுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு வகையான தடுப்பூசிகள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தடுப்பூசிகளை பொதுமக்கள் தயக்கமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும். தற்போதைய சூழலில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதே பாதுகாப்பானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம். தடுப்பூசியை சரியான முறையில் சகலரும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே தற்போதைய சூழலில் மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு அரணாக இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தடுப்பூசியை சகலரும் உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு முன் வரவேண்டும்.
மூன்றாவதாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட பின்னரும் கூட சகலரும் மிகவும் பொறுப்புடனும் சுகாதார வழிகளையும் நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றியும் நடந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி பெற்றுக் கொண்டோம் என்பதற்காக எந்த ஒரு தரப்பினரும் சுகாதார வழிகாட்டிகளை புறக்கணித்து அவற்றை அலட்சியம் செய்து நடந்து கொள்ள முடியாது. காரணம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் இந்த தொறறுநோய் பரவுவதற்கான சாத்தியம் பல வழிகளில் காணப்படுகின்றது. அதாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவருக்கு சுகாதார ரீதியான பாதுகாப்பு அரண் கிடைக்கலாம். ஆனால் அவரின் ஊடாக மேலும் பலருக்கு இந்த நோய் பரவுவதற்கான அபாயம் காணப்படுகின்றது. அதன் காரணமாக கொண்டும் தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னரும் கூட சகலரும் மிகவும் பொறுப்புடனும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று விடயங்களும் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.
வழிகாட்டல்களை தவிர்க்கவே வேண்டாம்
அதேபோன்று பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதார தரப்பினர் ஊடாக கொரோனா பரவல் தடுப்பு குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுகின்றன. அவ்வாறு சுகாதார தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரும் அறிவுறுத்தல்கள் எச்சரிக்கைகளை விடுத்துவருகின்ற நிலையில் அவற்றை பின்பற்றி சகலரும் நடந்துகொள்ள வேண்டும். அவற்றை எந்த ஒரு தரப்பினரும் அலட்சியப்படுத்த கூடாது. அவ்வாறான செயல்பாடுகளும் பாரியதொரு சிக்கலான நிலைமையை நாட்டில் ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே இந்த மூன்று விடயங்களை தற்போது மிக முக்கியமானதாக காணப்படுகின்றன. இவற்றை பின்பற்றி நடந்து கொள்வதற்கு சகலரும் முயற்சிக்க வேண்டும். அதாவது விஞ்ஞான ரீதியாக எவ்வாறு இவ்வாறு செயல்பட்டால் இதிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அதனை தயக்கமின்றி பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுதல், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுதல், அனாவசியமான ஒன்றுகூடல்களையும் கூட்டங்களையும் தவிர்த்தல் ஆகியன இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றன. எனவே அவற்றில் சகலரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் மிக மோசமான வைரஸ் தொற்று தாக்கல் நிலைமையை நாம் ஒரு சர்வதேச ஊடகங்களில் பார்த்தோம். மிகவும் மோசமான நிலைமை அங்கு நிலவியது. தொற்றாளர்கள் வீதிகளில் இறந்து கிடந்ததையும் வீதிகளில் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் படுத்து கிடந்ததையும் காணமுடிந்தது. அதேபோன்று ஒட்சிசன் இல்லாமல் பலர் உயிரிழக்கும் நிலைமையும் காணப்பட்டது. அவ்வாறான ஒரு நிலைமையை இலங்கையில் ஏற்படாமல் தடுக்க அனைவரும் தமது பொறுப்பு என்ன என்பதனை உணர்ந்து செயற்படுவது கட்டாயமாகும். மிகவும் மோசமான நிலைமையை புதுடில்லி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எதிர்கொண்டிருந்தது. தற்போது அங்கு நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்தோனேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது மிக மோசமான நிலைமை காணப்படுகின்றது. அங்கு தொற்றாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மருத்துவ கட்டமைப்பு சலிக்காமல் இயங்குவதன் முக்கியத்துவம்
அவ்வாறான இக்கட்டான நிலைமை இலங்கையில் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்கு சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் புதுடில்லி தாய்லாந்து இந்தோனேசியா போன்ற ஒரு நிலை ஏற்படுமாயின் மருத்துவத் துறையினரால் அதனை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அந்த அளவுக்கு நாம மருத்துவ கொள்ளளவை கட்டமைப்பை கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எமது மருத்துவ துறையினர் மிகவும் திறமையானவர்கள். சிறந்த கட்டமைப்பின் கீழ் இயங்குகின்றவர்கள். எந்த ஒரு நெருக்கடியை சமாளிக்க கூடியவர்கள் என்பதை கடந்த காலங்களில் நிரூபித்து இருக்கின்றனர். எனினும்கூட தற்போது இந்த வைரஸ் தொற்று பரவலானது கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதைக் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே அவ்வாறான மிக மோசமான நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதனை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எனவே அதற்கேற்ற வகையில் சகலரும் செயற்படவேண்டிய, பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
குறிப்பாக தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்வதால் நாட்டில் எவ்வாறான கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படவேண்டும் என்பது தொடர்பாக ஆராய வேண்டும். . நாட்டை முடக்குவது அனைத்து பிரச்சினைக்கும் தீர்வாக அமைந்துவிடும் என்று யாரும் கூற முடியாது. காரணம் நாட்டை முடக்குவதால் பல்வேறு நெருக்கடிகள் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இந்த நேரத்தில் பொருளாதாரமா சுகாதார பாதுகாப்பத என்பதை சிந்தித்து அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறு இந்த வைரஸ் பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. கடந்த காலங்களைவிட தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மரணங்கள் அதிகளவில் அதிகரித்து செல்கின்றன. மரணங்களின் அதிகரிப்பை பார்க்கும்போது ஒரு அச்ச நிலைமை ஏற்படுகின்றது. எனவே அதற்கு தொடர்ந்தும் இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய ஒரு தேவையுள்ளது.
மறக்கவே வேண்டாம்
இந்தநிலையில் இந்த தொற்று பரவலை முற்றாக தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயங்களை மேற்கொள்வது மிக முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக அடிக்கடி கைகளை 30 வினாடிகள் கழுவுதல், ஒன்றுகூடல்களை முற்றாக தவிர்த்தல் எந்தவொரு இடமாக இருந்தாலும் 6 அடி அளவிலான சமூக இடைவெளியை பேணுதல் என்பன மிக அவசியமாகும். மேலும் உரிய முறையில் சரியான வகையில் முகக்கவசங்களை அணிய வேண்டும். பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், பொது போக்குவரத்து சாதனங்கள் என்பவற்றில் மிகவும் கவனமாக சுகாதார வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்து கொள்வது இன்றியமையாதது.
அதுமட்டுமன்றி தயக்கமின்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான தயக்கமும் அவசியமில்லை. தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பின்னரும் சுகாதார வழிகாட்டிகளை சரியான முறையில் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.
அபாய நிலையை தவிர்ப்போம்
அபாயகரமான ஒரு நிலைமையின் அருகில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்கு இடமளிக்காமல் இந்தியா இந்தோனேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலைமை இலங்கையில் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சகலரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அது எமது கைகளிலேயே இருக்கிறது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. மருத்துவர்கள், சுகாதார தரப்பினர், வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்ற விடயங்களில் சகலரும் கவனம் செலுத்துவது கட்டாயமாகும். இந்த இடத்தில் எமக்கு வேறு வழி இல்லை. சுகாதார தரப்பினர் கூறுகின்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றுவது அவர்களது பரிந்துரைகளை அமல்படுத்துவதே தற்போது மேற்கொள்ளவேண்டிய தேவையாக இருக்கின்றது.
எனவே அதற்காக சகலரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அபாயகரமான நிலைமையை இந்த இடத்திலேயே ஒழித்துவிடுவது அவசியமாகும். அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் கட்டுப்படுத்த முடியாத அபாயகரமான மோசமான நிலைமையை நோக்கி செல்வதற்கு யாரும் காரணமாக இருக்கக்கூடாது. அதிலிருந்து சகலரையும் காப்பாற்றும் வகையில் இந்த இடத்தில் செயற்பட வேண்டிய பொறுப்பு மக்களுக்கும், சுகாதார தரப்பினருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், அரசாங்கத்திற்கும் என சகலருக்கும் இருக்கின்றது என்பதே யதார்த்தமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM