(நா.தனுஜா)
நாடு முகங்கொடுத்திருக்கும் டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக அரசுக்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறுகின்ற அரசாங்கம், மறுபுறம் நாட்டிற்கு வீண்சுமையை ஏற்படுத்தக்கூடியவாறான 'வெள்ளை யானையை' ஒத்த அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலையைக் குறைப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று முன்தினம் கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தினால் அரிசியை விற்பனை செய்வதற்கான உச்சபட்சவிலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கடைகளில் அந்த விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை. நிர்ணய விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படாமை தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகின்றது.
இதுவரையான காலமும் சந்தையிலிருந்து கடைகளுக்குக் கொண்டுவரப்படும் அரிசி உரிய நிர்ணயவிலையில் விற்பனை செய்யப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், எவ்வாறு அரிசி விலையைக் குறைக்கப்போகின்றது? அதேவேளை அரசாங்கத்துடன் இருக்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான 'டீலை' நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக அரசாங்கம் பாரியதொரு நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை ஈடுசெய்வதற்கான நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது. அதன் ஓரங்கமாக அரசுக்குச் சொந்தமான, சுமார் 300 மெகாவோற் மின்சாரத்தை உற்பத்திசெய்யக்கூடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், டொலரைப் பெறுவதற்காகவே அதனை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதேவேளை மறுபுறம் நாட்டின் கடன்சுமையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடிய 'வெள்ளை யானையை' ஒத்த செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
தாமரைக்கோபுரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமானநிலையம், சூரியவௌ விளையாட்டரங்கு உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தினால் அதன் கடந்த ஆட்சிக்காலத்திலும் பயனற்றதும் நாட்டிற்கு வீண்சுமையை ஏற்படுத்தக்கூடிதுமான அபிவிருத்தித்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன.
தற்போதைய அரசாங்கம் ஆட்பீடமேறியதிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வெகுவாக அதிருப்தியடைந்துள்ளனர். எனவே கடந்த தேர்தலின்போது அரசாங்கத்திற்குக் காணப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தற்போது இல்லாமல்போயிருக்கின்றது.
அதனை அடுத்துவரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளின் நன்கு வெளிப்படும். எனவே தற்போதைய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அதனை மறைத்துக்கொள்வதற்காக இனவாதத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM