(ஆர்.யசி)
சிறுமி ஹிஷாலினி விடயத்தில் ரிஷாத் பதியுதீனை காப்பாற்றும் சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளதாகவும், ஆனாலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க நாம் துணை நிற்போம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திற்குள் வரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறுகின்றார்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் முக்கிய பேசுப்பொருளாக மாறியுள்ள தற்போதைய நிலையில் அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளும் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கம்மன்பில இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிறுமி ஹிஷாலினியின் மரணம் எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும், இவ்வாறான சம்பவங்கள் எப்போதுமே இடம்பெறக்கூடாது என்பது எமது பிரார்த்தனையுமாகும். வறுமையை காரணாமாக வைத்து எவரது வாழ்கையையும் நாசமாக்கக்கூடாது.
ஹிஷாலினி விடயத்தில் அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் அரசாங்கமாக பின்னணியில் நாம் இருப்போம். இந்த நாட்டில் மேலும் பல ஹிஷாலினிகள் உருவாகக்கூடாது என்பதற்காகவும், எந்தவொரு பெண் பிள்ளையும் இவ்வாறு வேதனைப்படக்கூடாது என்பதற்காகவும், வீட்டுப்பணிகளுக்கு இவ்வாறு சிறுவர்களை இணைப்பதில் அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த விசாரணையின் சுயாதீனத்தை பாதுகாப்போம்.
இந்த சிறுமியின் விடயத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களும் ஏதேவொரு அழுத்தங்கள் இருந்துள்ளன. சஹாரான் விடயத்தில் இடம்பெற்ற சதித்திட்டமே இங்கேயும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இனியும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாது என நாம் வாக்குறுதியளிக்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது சகலருக்கும் இப்போது விளங்கியிருக்கும். ரிஷாத் பதியுதீனை அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதாக இருந்தாலோ அல்லது அவருடன் டீல் அரசியல் செய்வதாக இருந்தாலோ இன்று அவர்களை குடும்பத்துடன் கைது செய்திருக்க மாட்டோம்.
இதற்கு முன்னைய காலங்களிலும், நல்லாட்சி காலத்திலும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நானே அதிகளவில் முறைப்பாடுகளை செய்துள்ளேன். இந்த நாட்டில் உருவாகியுள்ள மிக மோசமான அரசியல்வாதி ரிஷாத் பதியுதீன் என்பதே எனது கருத்தாகும். அதில் நான் உறுதியாக உள்ளேன்.
ஆனால் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற நினைக்கும் நபர்கள், இன்றும் அரசாங்கத்தில் உள்ளனர். இவர்கள் 1994-2014 ஆம் ஆண்டு காலங்களில் ரிஷாத் செய்த அநியாயங்களையும் ஆதரித்தது பாதுகாத்து வந்தனர். அவர்கள் இன்றும் அரசாங்கத்திற்குள் உள்ளனர்.
எம்முடன் அரசாங்கத்தில் ரிஷாத் பதியுதீன் அங்கம் வகித்த போதும் நானும் அமைச்சர் விமல் வீரவன்சவும் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இன்றும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.
ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹகீம் ஆகியோர் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திற்குள் வரக்கூடாது. இப்போதும் அவர்களின் அணியில் சிலர் எனக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்திருக்க முடியும்.
ஆனால் அவர்களின் ஆதரவை நான் ஒருபோதும் கேட்கவில்லை. அதேபோல் அவர்களை அரசாங்கத்திற்குள் இணைத்துக்கொண்டு பயணிக்க ஏதேனும் சக்திகள் அரசாங்கத்திற்குள் இயங்குகின்றதா என்ற சந்தேகமும் எம்மத்தியில் உள்ளது. அவ்வாறு இடம்பெறுமானால் நாம் இந்த அணிக்குள் இருப்பதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி ஒருபோதும் அவ்வாறான தவறை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM