குமார்சுகுணா
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் வைத்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபட்டமை தெரியவந்ததை அடுத்து இந்த விடயம் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால் குடும்ப வறுமையை காரணம் காட்டி கல்வி கற்க வேண்டிய சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் செயல் மலையகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கல்வி அறிவு குறைந்த பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது அவர்களது அறியாமையாக இருக்கலாம். ஆனால் கல்வி அறிவுள்ள ஒரு சமூக அந்தஸ்த்து உள்ள மக்களின் பிரதியான பாராளுமன்ற உறுப்பினர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குற்றம்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், இதனை சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளாக சிலர் தூண்டி விடுவதனை பார்க்கின்றோம். ஷ
குறிப்பாக சமூகவலைத்தளங்களில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாகவும் சிறுமிக்கு எதிரான மன நிலையிலும் பல பதிவுகள் காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தை உணர வேண்டும்.
கடவுள் என்பவர் அன்பின் வடிவானவர். எல்லா மதங்களும் இதனைதான் போதிக்கின்றன. இந்து சமயமாக இருந்தாலும் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் கிறிஸ்தவமாக இருந்தாலும். நாம் எந்த மார்க்கத்தை கடைப்பிடித்தாலும் கடவுள் என்பவர் அன்பானவர். எல்லா மதங்களிலும் அன்பே இறைவன் என்றுதான் போதிக்கப்படும்.
மனிதனை வழிநடத்தக்கூடிய மிக நல்ல விழுமியங்கள்தான் மதங்களில் போதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், துரதிஷ்ட வசமாக மதங்கள் மீது சிலருக்கு பிடிக்கும் மதம்.. அதனால் நடத்தப்படும் தவறான வழிகாட்டல்கள் குறித்த சமூகங்களையே சீரழித்து விடுகின்றது.
நாம் பயப்பட வேண்டியது இறைவன் ஒருவருக்கே. நம்மை நேசிக்கும் அளவு பிறரையும் நேசிக்க வேண்டும் என்பதே இறைவனின் கோரிக்கை. அவன் படைத்த பூமி.. அவன் படைத்த உயிர்கள்.. . எல்லாம் அவனுடையதுதான்.
இதில் நாம் சிறு தூசிக்கு கூட சமனற்றவர்கள். இந்த பூமியை விட்டு நம் உயிர் பிரிந்த பின்னே நடப்பது என்ன என்று கூட நாம் அறியோம். ஒரு சிறிய காலம் மட்டுமே இந்த மண்ணில் தங்கிவிட்டு செல்லபோகின்றோம். இந்த காலத்துக்குள் எதற்கு வன்மம். வன்மத்தனமான பேச்சுக்கள். வக்கிரத்தனமான நடவடிக்கைகள்.
இது கலிகாலம் அன்பு மடிந்து பாவங்கள் அதிகரித்துள்ள காலகட்டம். ஆயினும் நாம் அன்பை செலுத்த வேண்டியது எமது கடமை அல்லவா? ஆறுகால பூசை செய்வதாலோ பலமுறை ஒரு நாளில் பிரார்த்திப்பதாலோ கிடைக்காத பலன் அன்பை மற்றவர்களுக்கு செலுத்தும் போது கிடைக்கும்.
இந்த அன்பு நிபந்தனையற்றதாக எல்லோருக்கும் சமமமாக செலுத்த வேண்டும். அதுவே இறைவனை மகிழ்விக்கும். ஆனால் நாம் தராதரம் பார்த்து பழகுகின்றோம். ஏழை–பணக்காரர் என்று பேதம் கொண்டு நடத்துகின்றோம்.
வறியவர்கள் இல்லாதவர்கள் எல்லோருமே நமது உடன்பிறப்புகள் என உணர்வதிலை. நாம் மட்டும் ஆயிரம் வருடங்கள் இந்த பூமியில் வாழ்வது போல ஒரு எண்ணம். ஆனால் அது பொய் என்பதுதான் உண்மை.
பெரியவர்களை மதிப்பதில்லை. வீட்டில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு வீதிகளில் அநாதைகளாக இருக்கும் பல பெற்றோரை பார்க்கின்றோம். அதுபோல தமது பிள்ளைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கின்ற பெற்றோர் ஏனைய பிள்ளைகளை அச்சுறுத்துவது வேலைக்கார்களாக பாவிப்பது எல்லாம் எத்தனை கொடுமையான விடயம் என உணர வேண்டும்.
நமக்கு கடவுள் அனைத்தையும் தருவார். அதனை நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. நமது தேவைக்கு எடுத்துக்கொண்டு மற்றதை இல்லாத மக்களுக்கு கொடுக்கவேண்டும். ஆனால் நமக்கென்று ஒரு குடும்பம் மட்டுமே இந்த உலகம் என்று நினைத்து அவர்களுக்காக மட்டுமே வாழ நினைக்கின்றோம்.
இதுபோன்ற சுயநல போக்கே...பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு காரணம். அதிகாரத்தில் இருந்தாலும் பண பலத்தோடு இருந்தாலும் இறைவன் அதை விட பெரியவர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நாம் நாலு பேரிடம் நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு பலருக்கு செய்விக்கும் தீமைகள், நமக்கே வினையாகிவிடும்.
இறைவன் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பான். அவனுடைய நீதிமன்றத்தில் ஏழை பணக்காரர் என்ற பேதம் இருக்காது. தவறு செய்பவர்கள் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் தண்டணையில் இருந்து தப்ப முடியாது.
எனவே அன்பை விதைத்து இந்த பூமியில் வாழும் வரை இறைவனக்கு பயந்து சிறந்த நல்ல மனிதனாக வாழ முயற்சியுங்கள். அனைத்தும் ஒரே இறைவன்தான். மதங்களை கடந்து மனிதர்களை நேசியுங்கள். தர்மம் வெல்லட்டும். வெல்லும்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM