குமார் சுகுணா
விளையாட சென்ற சிறுபிள்ளையோ ... வேலைக்கு செல்லும் இளைஞரோ.. குடும்பஸ்தரானவரோ யாராக இருந்தாலும் , எத்தனை வயதுகளை கடந்தாலும் வீட்டை விட்டு வெளியே சென்ற தனது பிள்ளைகள் குறித்த நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை என்றால் ஒரு தாய் பதறித்தான் போவாள். ஆனால், இந்த உணர்வுகளை பெரும்பாலும் பிள்ளைகள் உணருவதில்லை.
இன்றைய கால இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தமது பெற்றோருக்கு சரியான தகவல்களை வழங்காமல் செல்வதுதான் அதிகம்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் என்றால் மேலதிக வகுப்புக்கு செல்வதாகவே கூறி செல்வர். அவர்களின் வார்த்தை மீதான நம்பிக்கையில் பெற்றோர்கள் அதை ஆராய மாட்டார்கள். அதேவேலை பாடசாலை கல்வியை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நண்பர்களோடு செல்லும் போது சில பெற்றோர் , தமது பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என வினவுவது உண்டு. ஆனால் பெரும்பாலும் நண்பர்களுடன் தானே பிள்ளை செல்கின்றான் என்று விட்டுவிடுவதும் உண்டு.
பெண் பிள்ளைகள் என்றால் நிச்சயம் கேட்கத்தான் வேண்டும் . ஆனால், ஏனைய பிள்ளைகளோடு தனது பிள்ளை சேர்ந்து செல்லும் போது ''எல்லோரும்தானே போகின்றார்கள்..' என பல பெற்றோர்கள் பிள்ளைகள் செல்லும் இடங்களை கூட கேட்பதில்லை. கேட்டாலும் பிள்ளைகள் மறைத்துவிட்டு செல்வர். இது பொதுவான விடயம். எங்கும் நடக்கின்ற விடயம்தான். ஆனால் நம்மை விட நம்மீது அக்கறை கொண்டவர்கள் நமது பெற்றோர்கள்தான் என்பதனை பிள்ளைகள் உணர்வது அவசியம். ஆதலால் எங்கே போனாலும் மறைக்காமல் உண்மையை கூறிவிட்டு செல்வது தவறில்லை.
மலையகத்தில் இந்த மாதம் நடந்த இரு அதிர்ச்சி சம்பவங்கள் அனைவரையும் வேதைனைக்குள்ளாக்கியுள்ளது. இரண்டும் பெண் பிள்ளைகள் பற்றியதுதான். ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் வீட்டில் நடந்த டயகம சிறுமியின் மரணம். மற்றது பத்தனை டெவன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயுள்ள 19 வயது யுவதி. இந்த கட்டுரை காணாமல் போன யுவதியுடன் தொடர்பு பட்டதாகவே அமைகின்றது.
இலங்கை என்பது சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்படுகின்ற நாடு. இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் வந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் இலங்கையின் இயற்கை அழகே. வெளிநாட்டவர்களையே இந்தளவு இலங்கை ஈர்க்கின்றது என்றால், இந்த மண்ணில் பிறந்த நாம் சொல்லவா வேண்டும். இயற்கை எம்மை ஆராதிப்பது அதிகம்தான். அந்த இயற்கை என்றும் எமக்கு தீங்கு நினைக்காது. நாமே சென்று அதனை சீண்டி துன்பத்தை அனுபவித்தால்தான் உண்டு.
நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை எந்தளவு குடியிருக்கிறாள் என்று இந்த மண்ணுக்கு வருபவர்கள் நிச்சயம் உணர்வர்.
பச்சை போர்த்திய தேயிலை தோட்டங்கள், பூங்காக்கள், மலைகாடுகளோடு இங்குள்ள இன்னொரு விஷேடம் அருவிகள். அருவிகள் என்பதனை தான் இன்று நாம் நீர் வீழ்ச்சி என்கிறோம். தலவாக்கலை நகரை அண்மித்து இரண்டு பிரசித்தி பெற்ற அருவிகள் உள்ளன. அவற்றில் டெவன் அருவி 97 மீற்றர் (318 அடி) உயரம்கொண்டது. எப்போதும் வெள்ளை நுரைபோல ஆர்பரிக்கும் நீர்.
தலவாக்கலை அட்டன் வீதியில் பயணிக்கும் அனைவரும் இதனை ரசிக்காமல் செல்ல மாட்டார்கள். நீர் வெள்ளை நிரத்தில் ஆகாயத்தில் இருந்து பஞ்சு மழை பாய்வது போல அத்தனை ரம்யமாக இருக்கும்.
நீர் பாயும் அடிவாரத்துக்கு அருகே காளியம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது. இதனால் அதிகளவிலான மக்கள் இந்த ஆலயத்தை தரிசிக்க செல்வது வழமை. ஆயினும் , இந்த நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் நமக்கு தேவைப்படாது. தூரத்தில் இருந்தே முழு அழகையும் அற்புதமாக ரசிக்கலாம். ஆனால், இந்த டெவன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே ஒரு யுவதி விழுந்து விட்டார் என்பது கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாத சம்பவம்.
கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் நான்கு இளம் பெண்கள் டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டடுள்ளனர். இந்நிலையில், கால் கழுவியபோது அந்த நான்கு பேரில் ஒரு யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 19 வயதான லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் வசிக்கும் மணி பவித்ரா என்பவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
குறித்த யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தடுமாறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் கடந்த 19ஆம் திகதி காலை முதல் இடம்பெற்று வருகின்றன. ஆயினும் கன மழை காரணமாக மீட்பு பணிகள் இடை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தேடுதல்கள் தொடர்கிறது.
காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள –பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனாலும் மேற்படி யுவதியை தேடும் பணிகள் சவாலாகியுள்ளது.இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்..
குறித்த பிரதேசத்தில் நீர் எப்போதும் குளிர்ச்சியுடன் கனமாகத்தான் இருக்கும். இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதனால் தண்ணீர் மேலும் வேகமாக சிறிப்பாய்வதனை காணமுடிகின்றது. மீட்பு படையினர் இதனால் படுகின்ற சிரமம் நமக்கே பார்பதற்கு அச்சமாக உள்ளது.
நீர் வேகமாக பாய்வதால் நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்தவர் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்க கூடும். ஆயினும் அவர் உடல் நலத்தோடு மீட்கப்படவேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனை.
இந்த சம்பவம் தொடர்பில் நாம் உணர வேண்டியது ஒன்றதான். குறித்த யுவதி தனது நண்பிகளுடன் ஆபத்தான பகுதியை தாண்டி சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு மகிழ்சியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றது. உண்மையில் நாம் எங்கே சென்றாலும் யாருடன் சென்றாலும் முதலில் நமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பாதுகாப்பாற்ற விடயங்கள் எத்தனை மகிழ்சியை கொடுத்தாலும் அதனை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது. இந்த கொரோனா காலத்தில் இது போன்ற சுற்றுலாக்களை தவிர்ப்பது நன்மையே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM