1983 கறுப்பு ஜூலையும்! ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்கவும்

23 Jul, 2021 | 02:14 PM
image

ரூபன்

1983 (கறுப்பு ஜூலை).  38 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற 'இனப்படுகொலை'  என்றுமே மறக்கமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் நினைவு கூரப்படுகிறது.

1956 ஆம், 1958 ஆம், 1977 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை விட மிகக்கொடுமை! பயங்கரமானது.இந்நாட்டில் தமிழர்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும்,பாதுகாப்பாகவும் வாழ முடியாது என்ற நிலைமையை உருவாக்கிய நிகழ்வுகள்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கவும், இந்தியாவை இலங்கை இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கும் வழிவகுத்தது.

அன்று ஆட்சியிலிருந்தவர்களோ, சிங்களத்தலைவர்களோ, பௌத்த மதகுருமாரோ,பௌத்த அமைப்புக்களோ இச்சம்பவங்களுக்காக மன்னிப்பையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. ஆனால், அங்கிலிக்கன் (Anglican) திருச்சபையின் குருநாகல் மறை மாவட்டத்தின் மறைந்த ஆயர் மேதகு லக்ஸ்மன் விக்கிரமசிங்க ஆண்டகை இதனை வன்மையாக கண்டித்ததுடன் சிங்கள மக்கள் சார்பில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

லிக்கன் (Anglican) திருச்சபையின் குருநாகல் மறை மாவட்டத்தின் மறைந்த 

2009 இறுதி யுத்தத்தின்போது மகிந்த ஆட்சியில் தமிழர்கள் எப்படி,யாரால் வன்னியில் கொல்லப்பட்டனர் என்ற விபரங்களை துணிந்து வெளிக்கொண்டுவந்த மன்னார்  ஆயரான மறைந்த மேதகு இராயப்பு யோசப் ஆண்டகைக்கு முன்னரே ஒரு அங்கிலிக்கன் சிங்களவரான ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க 1983 ஆடி மாதம்  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகள் எனத்துணிந்து வெளிக்கொண்டுவந்ததுடன், தமிழ் மக்களுக்காகவும் குரல் எழுப்பினார்.

மறைந்த மேதகு இராயப்பு யோசப் ஆண்டகை

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிறிஸ்தவ மாநாட்டிலும் இத்துயர நிகழ்வுகளை எடுத்துக்கூறியிருந்தார். மன்னார் ஆயர் தமிழன் என்பதால் புலிச்சாயம் பூசினார்கள். ஆனால்,ஆயர் லக்ஸ்மன் சிங்களவர் என்பதால் மௌனம் காத்தனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அரசு கறுப்பு ஜூலை வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கும் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்த ஆயர் விக்ரமசிங்க, இதற்கு நீதிவிசாரணை வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நட்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

1977 வன்முறைகளுக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்த நீதியரசர் சன்சோனி ஆணைக்குழு விசாரணையில் நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள், யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அத்துமீறல்கள் வெளிவந்தன. யாழ். வர்த்தக நிலையங்கள் எரிப்பு போன்றவையும் தெரியவந்தது. யாழ்.சுகாதாரப் பணிப்பாளரான டாக்டர் தசநாயக்கா என்ற சிங்களவர் நேரில் கண்டவற்றை துணிந்து கூறியதால் ,அவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வவுனியாவில் அவரது கார் தாக்கப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்து விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு  நீதி வழங்கவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அவரது சில அமைச்சர்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் குண்டர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததால் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவில்லை என தமிழர் விடுதலைக்கூட்டணி செயலர் அ.அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.

இலங்கையில் அங்கிலிக்கன் திருச்சபைக்கு கொழும்பு, குருநாகல் ஆகிய இரு மறை மாவட்டங்கள் . இரு ஆயர்களின் கீழ் இயங்கி வருகின்றன. (ஆங்கில திருச்சபை, இலங்கை திருச்சபை) பிரதமர் பண்டாரநாயக்கா, தந்தை செல்வநாயகம், அமைச்சர்கள் லக்ஸ்மன் கதிர்காமர், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற பல  சிங்கள தமிழ் அரசியல் தலைவர்கள் இத்திருச்சபையை சேர்ந்தவர்கள். அங்கிலிக்கன் திருச்சபைக்கு சொந்தமான பல பாடசாலைகள்  நாடு முழுவதும் உள்ளன. கல்கிசை சென்.தோமஸ், யாழ்.சென்.ஜோண்ஸ், கண்டி திரித்துவ கல்லூரிகள் இச்சபையால் நிர்வகிக்கப்படும் தனியார் பாடசாலைகள்.

1983 ஜூலை இனவன்முறை பதற்றமான சூழலில் துணிந்து செயற்பட்ட ஒரு சிங்கள மதத்தலைவரே குருநாகல் ஆயர் மேதகு லக்ஸ்மன் விக்கிரமசிங்க.

இவர் யார் ? முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிறிய தந்தையும், ஜனாதிபதி ஜே.ஆரின் மைத்துனர் முறையானவர். 1983 கலவரங்களுக்கு எனது நெருங்கிய உறவினர்களுக்கு தொடர்பு என பகிரங்கமாக குற்றம் சுமத்தியவர்." Two of my Closest Family Members were involved in the Murderous Tamil Riots of 1983 " Sobbed an Inconsoble - Lacksman Wickramasinghe - Bishop of Kurunagale- The RW File ( Part 2).

ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க

1983 ஜூலை லண்டனில் இதயநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஆயர் லக்ஸ்மன் விக்ரமசிங்க அங்கிருந்தே கறுப்பு ஜூலை தமிழர்களின் உயிரிழப்புக்களை, சொத்தழிப்புக்களை அறிந்து, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் அவரது ஆட்சியையும் கண்டித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை அரசின் திட்டமிட்ட செயலே எனக்கூறி, அதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். லண்டனில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பி, கொழும்பு மாவட்டத்தில் அழிக்கப்பட்ட தமிழர்களின் இல்லங்கள், எரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்,தொழிலகங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு கண்கலங்கினார்.

கொழும்பில் தமிழர்கள் அகதிகளாக தஞ்சமடைந்த முகாம்கள், பாடசாலைகளுக்கும்  விஜயம் செய்து ஆறுதல் கூறினார். அதேபோலவே மலையகத்துக்கும் சென்று கண்டி, மாத்தளை பிரதேசங்களில் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்த தமிழர்களை சந்தித்து கவலையும், ஆறுதலும் கூறினார். மலையக தமிழர்கள் தனிநாடு கேட்டார்களா ? என்று அங்கு வந்த அதிகாரிகள், பொலிசாரிடம் கேள்வி எழுப்பினார்.

அன்றைய பாதுகாப்பு சூழலில் பலர் யாழ்ப்பாணம் போகவேண்டாம் என்று தடுத்தும் துணிந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்ற ஒரு சிங்கள மதத்தலைவர். எனக்கு யாழ்ப்பாணத்தில் பிரச்சினையில்லை, இங்குதான் பிரச்சினை என்றார். யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் உரையாடி ஆறுதல் கூறினார். அங்கிலிக்கன் திருச்சபையின் நிவாரணப்பணிகளையும் முன்னெடுத்தார்.

1982 டிசம்பர் 8 இல் " லண்டன் ரைம்ஸ் " பத்திரிகைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சர்வாதிகார ஆட்சியை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதினார். 1977 பொதுத்தேர்தலில் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சர்வாதிகார ஆட்சி ! சிறிமாவின் குடியுரிமையை பறித்து ஜனாதிபதி தேர்தலில் சிறிமாவை போட்டியிடாது தடுத்தது! அவருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது! சர்வசன வாக்கெடுப்பு! பாராளுமன்ற கால நீடிப்பு! அவசரகால சட்டம்! பத்திரிகைகளுக்கு சீல்! சுதந்திரக்கட்சி பிரமுகர்கள் கைது! ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கூட்டம் நடத்தியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்! போன்ற பல அநீதியான சம்பவங்களை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அப்பத்திரிகை பிரசுரிக்க மறுத்துவிட்டது.பின்பு  " லங்கா கார்டியன்" பத்திரிகை 1984 பெப்ரவரி 15 ஆயரின் மறைவுக்கு பின்னர் அதனை பிரசுரித்தது. 1981 திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை பறிப்பதற்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடவடிக்கை எடுத்தபோது மனித உரிமை அமைப்பின் தலைவராக அதனைக் கண்டித்தும், நிறுத்துமாறும் அவருக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்தார்.

1980 வேலை நிறுத்தம் செய்ததால் அரச ஊழியர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் ஆயர் கண்டித்தார். இனங்களுக்கு இடையில் ஒற்றுமை,சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பெரும்பான்மையினத்தவர்கள் வழங்கவேண்டிய அவசியம் தொடர்பாக கருத்தரங்குளை பல தடவைகள் சிங்கள பேராசிரியர்கள், சிங்கள தமிழ் அரசியல் தலைவர்களை அழைத்து நடத்தியிருந்தார்.

குருநாகல் ஆயர் என்ற முறையில் மலையக பிரதேசங்களுக்கு செல்லும்போது தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டு வேதனைப்பட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளான அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் அவசியத்தையும் அடிக்கடி கூறிவந்தார். இன்றுவரை அந்த மக்கள் பல்வேறு துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர்.

1983 செப்டம்பர் 23 இடம்பெற்ற குருநாகல் மறை மாவட்ட குருக்கள் கூட்டத்தில் பேசியபோது, ஆடி மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகளை சுட்டிக்காட்டியதுடன், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். சிங்கள மக்கள் கறுப்பு ஜூலை  சம்பவங்களுக்காக முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

1983 ஜூலை சம்பவங்களுக்கு நீதிவேண்டும்.குற்றம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பான் இன்று தமிழர்களுக்கு ! நாளை உங்களுக்குள்ளும் ஏற்படும் என்று ஒரு வழிபாட்டு நிகழ்வில் கூறியிருந்தார். அவர் கூறியபடி ஐக்கிய தேசியக்கட்சி கடந்த தேர்தலில் ஒரு இடத்தையும் பெறவில்லை. அவரது பெறாமகன் ரணில் விக்கிரமசிங்கவே படுதோல்வியடைந்தார். 1983 ஆடி தமிழர்களை கொன்று எரித்ததுபோல, 1989 களில் தெற்கில் வீதிகளில் எரிந்த சடலங்கள். காணாமல்போனோர். அரசியல் படுகொலைகள். வன்முறைகள்.பாதாள உலக குழுக்கள் சண்டை எனப்பல தொடர்வதை காணமுடிகிறது.

மட்டக்குளி- எலி ஹவுஸ் வீதியில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் 1970 களில் தமிழில் திருப்பலி,வழிபாடுகள் நடத்துவதற்கு சில சிங்கள கத்தோலிக்கர்கள் தடை விதித்து,பெரும் பிரச்சினைகள் தோன்றின.பின்னர்,சில காலத்தால் நிலைமை வழமைக்கு வந்து தமிழிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

1983 ஒக்டோபர் 23 திடீர் இதயநோயால் 56 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்."ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்காவிடம் கிறிஸ்துவை கண்டேன்!

தமிழ் மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்து பணியாற்றிய மனிதநேயமுள்ள மதகுரு! அவரைப்போன்ற சிங்கள மதத்தலைவர்கள் இருந்தால் நாட்டில் இனங்களுக்கிடையே பிரச்சினைகளும்,கலவரங்களும் ஏற்பட்டிருக்காது என தமிழர் விடுதலைக்கூட்டணி செயலர் அ.அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் என்றுமே மறக்கமுடியாத ஒரு கிறிஸ்தவ துறவி என மறைந்த அமைச்சர் சௌ.தொண்டமான் இரங்கல் தெரிவித்தார். 2019 ஏப்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை என கொழும்பு பேராயர் கருதினால் மல்க்கம் ரஞ்சித் ஆண் டகை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்.

ஆனால்,வன்னி இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஒரு கண்டனத்தையும் வெளியிடவில்லை. இதற்கு உள்நாட்டு விசாரணையை ஆதரித்தவர்.1995  சந்திரிகா ஆட்சியில் நவாலி புனித பீட்டர் தேவாலயத்தின் மீது புக்கார குண்டு வீச்சு விமானம் நடத்திய தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் 125 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயம். 1993 நவம்பர் ஐ.தே.க. ஆட்சியில் யாழ்.புனித யாகப்பர் ஆலயத்தின் மீதான விமானத்தாக்குதல்10 பேர் பலி,பலர் காயம்.இதேபோல வடகிழக்கில் பல கிறிஸ்தவ வணக்க தலங்கள் அழிக்கப்பட்டன.தென் பகுதி கத்தோலிக்க ஆயர்கள் எவருமே இவற்றைக்கண்டிக்கவில்லை.

1985 ஜனவரி 5 மன்னார் வங்காலை புனித அன்னம்மாள் தேவாலய பங்குத்தந்தை வண.மேரி பஸ்ரியன் அடிகளார் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு சடலம் படையினரால் எடுத்துச்செல்லப்பட்டதை பலரும் கண்டனர்.இதனை மன்னார் ஆயர் இல்லமே முறையிட்டது.இவர் இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச்சென்றுவிட்டதாக தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி தெரிவித்தார்.வண.மேரி பஸ்ரியன் அடிகள் இந்தியாவில் நலமாக இருப்பதாக அன்றைய கொழும்பு பேராயர்  நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார்.

வண.மேரி பஸ்ரியன் தமிழ் போராளிகளுக்கு ஆதரவாக செயற்பட்டாரா? மன்னாரில் படையினரின் மனித உரிமை மீறல்களை மேலிடத்துக்கு முறையியிட்டது,படையினரால் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை அப்புறப்படுத்தியது, கொல்லப்பட்ட மெதடிஸ்த திருச்சபை குரு வண.ஜெகராசசிங்கம், மனைவி சடலங்களை உறவினரிடம் ஒப்படைத்தது.இவை குற்றமா? தென்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் இவற்றை அறிந்திருக்கவில்லையா.

சிலாபத்தில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த பரதகுல தமிழ்க்குடும்பங்கள் இன்று சிங்கள குடும்பங்களாகியுள்ளன. சிலாபம் மறை மாவட்டத்தின் மறைந்த ஆயர்.மேதகு எட்மன்ட் பீரிஸ் ஆண்டகை இங்கிருந்த நாற்பத்தெட்டு தமிழப்பாடசாலைகளை ( றோ.க.தமிழ் பாடசாலை)சிங்கள மொழி மூல பாடசாலைகளாக மாற்றிவிட்டார்.

மறைந்த ஆயர்.மேதகு எட்மன்ட் பீரிஸ் ஆண்டகை 

சிலாபம் மறை மாவட்டம் முன்னர் யாழ்.மறை மாவட்டத்துடன் இணைந்திருந்தது.மறைந்த பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர். சிலாபம்,நீர்கொழும்பு, பிரதேசங்களில் முன்னர் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவிட்டனர்.இரு மொழிகளையும் சிலர் பேசுகின்றனர்.

வடக்கு,கிழக்கு பிரதேச கத்தோலிக்க மக்களுக்காக தனியாக ஒரு உயர் மறை மாவட்டத்தை ( Archdiocese) 1975 இல் ஏற்படுத்தவேண்டும் என மறைந்த யாழ்.ஆயர்.மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால்,இதனை அன்றைய கண்டி ஆயர் லியோ நாணயக்கார எதிர்த்தார். இன்று வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1983 கறுப்பு ஜூலைக்கு பின்னர் கண்டி தேசிய குருமடத்தில் தமிழ் குருமாணவர்கள் கற்பதற்கு அச்சம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து யாழ்.ஆயர்.மறைந்த வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை வத்திக்கானின் அனுமதியுடன் யாழ்.கொழும்புத்துறையில் தமிழ் கத்தோலிக்க குருமாணவர்களுக்காக புனித சவேரியார் குருத்துவ கல்லூரியை ஆரம்பித்தார்.இதற்கும் தென் பகுதி ஆயர்கள் எதிரப்புத்தெரிவித்தனர்.

இறுதிப்போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்தும் தென்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் எதுவித கருத்துக்களையும் கூறவில்லை.

அங்கிலிக்கன் ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க எம்மத்தியில் இன்று இருந்தால்,சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும் குரல் எழுப்பியிருப்பார்.யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளாகிவிட்டன.அவர் கூறியபடி இனப்பிரச்சினையோ,தமிழ் மக்களின் பிரச்சினைகளோ இன்னும் தீர்க்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04