முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உறுதிவழங்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நல்லிணக்கம் தொடர்பான பேசுவதற்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவரிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இச்சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் கருத்து வெளியிடுகையில்,
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகத்தை சுமார் ஒருமணி நேர காத்திருப்புக்கு பின்னரே சந்திக்க நேர்ந்தது. நாம் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தபோது அவருடைய அலுவலகர் ஒருவர் அவருக்கு கைலாகு கொடுத்து விட்டு தாமதப்படுத்தாது விட்டுவிடுங்கள் என என்னிடத்தில் கோரினார். அப்போது மனவருத்தத்தை தெரிவித்தேன். அதன் பின்னர் ஆறு நிமிடங்கள் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்காக எமக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இறுதித்தருணத்தில் இவ்வாறு இடம்பெறுவதற்கான வாய்புக்கள் ஏற்படலாம் என்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன்.
ஆகவே அரசியல் கைதிகள், மீள்குடியேற்றம், காணாமல்போனோர் விடயம் உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விரிவான விடயங்களை அவரிடத்தில் கையளித்திருந்தேன். குறிப்பாக காணாமல்போனோர் விடயத்தில் சுமார் 4200பேரின் முழுமையான விபரங்கள், இராணுவத்திடம், கடற்படையினரிடம், விமான படையினரிடம் உள்ள எமது மக்களுக்குச்சொந்தமான காணிகள், கட்டங்கள் தொடர்பான விடயங்களை புத்தக வடிவில் அவரிடத்தில் கையளித்திருந்தேன். இவ்வாறு அனைத்து விடயங்கள் தொடர்பான விபரங்களை அவரிடத்தில் கையளித்து இவ்விடயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு கடப்பாடு உள்ளது என்பதை அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது மனித உரிமைகள் சம்பந்தமாக அனைத்து விடயங்களையும் விசாரிப்பதாக அரசாங்கம் அவரிடத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் கூட நீக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்பது பாரிய குறைபாடாகும் என்பதை அவரியடத்தில் நான் குறிப்பிட்டேன்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான பொறிமுயை இன்னமும் முன்னெடுத்துச்செல்லப்படவில்லை என்பதை எடுத்துக்கூறினேன். நல்லிணக்கத்திற்காக பாரியளவில் பணம் செலவிடப்போவதாகவும் உலக நாடுகள் அதற்கான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், போர்க்குற்ற விசாரணையை முறையாக முன்னெடுக்காத நிலையில் எவ்வாறு நல்லிணக்க பொறிமுறையை முறையாக முன்னெடுக்கப்போகின்றோம். குறிப்பாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் வடமாகணத்தில் இருக்கின்றார்கள். போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு எவ்விதமான நன்மையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. காணாமல்போனோர் தொடர்பில் பிரச்சினை நீடிக்கின்றது. சிறையில் எத்தனையோ பேர் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை எற்படுத்தப்படப்போகின்றீர்கள். ஆகவே முதலில் போர்க்குற்ற விசாரணையை முறையாக மேற்கொண்டால் அதன் பின்னர் மக்கள் மனதில் நம்பிக்கையொன்று ஏற்படும். அகவே அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினேன்.
ஐக்கிய நாடுகள் சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பி ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து வடமாகாண மக்களின் தேவைகள் குறித்த கணிப்பீடொன்றை மேற்கொள்ளவேண்டுமென கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே அதனை முன்னெடுத்துச்சென்று உடனடியாகமேற்கொள்வதன் ஊடாகவே வடக்கு மாகாணத்திற்கான திட்டமொன்றை வகுக்க முடியும் அதற்கு முழுமையான உதவிகளை வழங்வேண்டும் என்பதையும் அவரிடத்தில் எடுத்துரைத்தேன்.
அதேபோன்று வடமாகாண மக்களின் உடனடித்தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அவருடைய கவனத்திற்கு கொண்டுசென்றேன்.
இவ்விடயங்களை கேட்டுக்கொண்ட ஐ.நா செயலாளர் தனது பதிலில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என கடந்தமுறை தான் வருகை தந்தபோது கூறப்பட்போதும் தற்போது வரையில் அச்சட்டம் நீடித்துக்கொண்டிருப்பது தவறானது. ஆகவே அச்சட்டம் உடன் நீக்கப்படவேண்டும். அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படவேண்டுமென அரசாங்கத்திடத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கின்றபோது அதனை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்கின்ற விதத்தில் பொறிமுறைகள் அமையவேண்டும். அது குறித்து உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. சபை தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுமாதானத்தை கட்டியெழுப்பதல் தொடர்பான விடயத்தில் கருத்துரைத்த ஐ.நா.செயலாளர் இம்மாதம் 21ஆம் திகதி இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக உலக நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இணைத்தலைவராக இருக்கும் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்திட்டத்திற்காக கிடைக்கும் நிதி தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பார். அதன்போது தான் எமது மக்களின் தேவைகள் தொடர்பாக கூறி நிதியைப் பெற்றுக்கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதியில் தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை பொறுப்புடன் முன்னெடுக்குமென உறுதியளித்தார்.
மேலும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டுமென அவரிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM