(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று நிலைமையால் சுற்றுலா வியாபாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். புதிய வழிகாட்டலின் பிரகாரம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை முழுமையாக திறப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், சுற்றுலாத்துறையை அடிப்படையாகக்கொண்டு தொழில் செய்துவருபவர்கள் கொவிட் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு, வருமானத்தை முற்றாக இழந்துள்ளனர்.
அதனால் அவர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன், வாகன லீசிங் என்பனவற்றை செலுத்த முடியாமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நிவாரண ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
சுற்றுலாத்துறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் வலுவானதாக இருந்தது. அந்நிய வருவாய் அதிகமாக கிடைக்கும் ஒரு முறைமைதான் சுற்றுலாத் தொழில்துறை. 2009 ஆம் ஆண்டின் பின்னர் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்முனைவோரால் வெற்றிகரமாக இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்தது. 90 சதவீதம் தொழில்முனைவோர்தான் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துகின்றனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெறும்வரை நாட்டின் சுற்றுலாத்துறையை கொண்டுச்சென்றது இவர்கள்தான்.
ஆகவே, இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதேபோன்று சுற்றுலாத்துறையில் அனுபவமிக்கவர்கள் வேறு தொழில்களை நோக்கி நகர்கின்றமையை அண்மைக்காலமாக காணமுடிகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக தொடர்ச்சியாக இவர்கள் மூன்றுவருடங்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாது போனமையாலேயே வேறு தொழில்வாய்ப்புகளை நோக்கி நகர்கின்றனர்.
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. சுற்றுலாத்துறை தொழில் முனைவோரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் மற்றும் லீசிங்கை மீள செலுத்துவதற்கு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.
கடந்த மாதம் 9ஆம் திகதி மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இவர்களுக்கான கடன் சலுகையை ஜூலை (இம்மாதம்) 31 ஆம் திகதிவரை நீடிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் கொவிட் தொற்று பரவல் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சலுகைக்காலத்தை வழங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சலுகைக்காலத்தில் வட்டி செலுத்துவதை இடைநிறுத்தவும் லீசிங்க செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையினருக்கு பாதிப்பின்றி இலங்கை மத்திய வங்கி உரிய தீர்மானங்களை எடுக்கும். இருந்தபோதும் சுற்றுலாத்துறையை நம்பி தொழில் செய்துவருபவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதாக இருந்தால், சுற்றுலாத்துறையை விரைவாக யதார்த்த நிலைக்கு கொண்டுவரவேண்டும். அதனை நாங்கள் விரைவாக மேற்கொள்வோம்.
அத்துடன் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கின்றன சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் இதனை விமர்சிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் கிராமங்களுக்கு வருகை தந்தால் அடித்து விரட்டுமாறு கூறுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளால் கொவிட் தொற்று பரவியுள்ளதாகவும் கூறுகின்றனர். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் குழுக்களால் கொவிட் தொற்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவவில்லையென்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாளும் விசேட முறைமைகளை நாம் கையாளுகிறோம்.
சுற்றுலாத்துறைக்கான புதிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நாட்டுக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது பயணங்களை தொடர முடியும். அதேபோன்று எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் அனைவருக்கும் ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM