(ஆர்.ராம்)
தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசியத்தளத்தில் கூட்டமைப்பு வெளியில் உள்ள கொள்கை அளவில் உடன்பட்டு இணைந்து பணிப்பதற்கு கூடிய சகல தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்றும் மாவை, செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஏனைய கட்சிகளை எவ்வாறு அரவணைத்துச் செல்வது என்பது தொடர்பில் இன்றையதினமும் மாவை, செல்வம், சித்தார்த்தன் இடையே கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை, மார்டீன் விதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகமான அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.
சுமார் 11.30இற்கு ஆரம்பமான இந்தச்சந்திப்பு பிற்பகல் ஒரு மணி வரையில் நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள், எல்லோரையும் அரவணைத்து போகின்ற நிலைமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாக நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
எங்களுடைய இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கான பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான், புலம்பெயர்ந்த உறவுகள் மற்றும் தமிழ்நாட்டு தமிழர்கள் ஆகியோரை இணைத்து செயற்படும்போது பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும். அதனூடாக தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பல விடயங்களை தடுத்து நிறுத்த முடியும். அதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புளோட் தலைவர் சித்தார்த்தனும், செல்வம் அடைக்கலநாதன் கூறிய விடயங்களையே குறிப்பட்டதோடு, தொடர்ச்சியான பேச்சுக்களில் புளொட்டும் பங்கேற்கும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்படுவது பற்றிய பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் வழியில் ரெலோ ஏற்பாடு செய்திருந்தது.
எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதில் பங்கேற்பதற்கு மறுத்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்துவதில் தயக்கம் காண்பித்தது. அதேநேரம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கூட்டின் பங்காளிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தாவையும், ஈழமக்கள் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரணையும் ஏன் அழைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்விதமான நிலைமைகளால் கூட்டம் தடைப்பட்டது. பின்னர் அக்கூட்டத்தினை மீண்டும் ஏற்பாடு செய்யும் முயற்சிகளை செல்வம் அடைக்கலநாதன் முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கலந்துரையாடி அவ்விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்.
இப்பின்னணியிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒன்பது கட்சிகளின் கூட்டணிச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு அதற்காக, தமது கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் ஏற்பாட்டாளர்களாகவும் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM