கே. சுகுணா
நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காகவே உள்ளது. நமது அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் காணப்படுகின்றன. ஏனெனில் ஒரு மாத காலம் வீட்டு உணவுப்பொருட்களை வாங்காமல் இருக்கமுடியாது . தேவைக்களுக்கு ஏற்ப நாம் கடைகளுக்கு செல்லதான் வேண்டும்.
ஆனால், நாம் நமக்கு கிடைத்துள்ள ஊரடங்கு தளர்வுகளை உதாசீனப்படுத்தக்கூடாது. சிலர் தேவைகளின்றி ஊரடங்கு காலங்களில் பயணங்களை மேற்கொள்கின்றதனை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக பொருட்கள் வாங்குவதாக கூறி அடிகடி சிலர் நகரங்களில் நடமாடுகின்றனர். ஒரே தடவையில் கடைக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதே சாலச் சிறந்தது. ஆனால், அதனை விடுத்து நினைக்கின்ற போதெல்லாம் கடைத்தெருக்களுக்கு செல்வது இக்காலகட்டத்தில் தவறான ஒரு நடவடிக்கையே. இராணுவத்தினர் தெருவில் நடமாடினால் மட்டுமே சிலர் வீட்டுக்குள் அடைப்பட்டு இருப்பதனை காணமுடிகின்றது.
ஊரடங்கு என்றால் என்ன என்பதனை யுத்தகாலப்பகுதியில் இலங்கையர்கள் நன்றாகவே உணர்ந்தனர். நாமும் உணர்ந்திருக்கிறோம். ஆனால் 2000 த்தில் பிறந்து இன்று இளைஞர்களாக உள்ளவர்களுக்கு அது தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவே. அதனால்தான் இளைஞர்கள் ஊரடங்கு காலத்தில் அதிகமாக வெளியே நடமாடுவதனை காணக்கூடியதாக உள்ளது.
முன்பெல்லாம் கொழும்பில் குண்டு வெடித்தால் மொத்த மலையகமும் சத்தம் இன்றி வெறிச்சோடியிருக்கும். ஆனால் இன்று நம்மோடு ஒட்டி உறவாடி உயிர் பறிக்க நினைக்கும் கொரோனா நம் அருகில் உள்ள போதிலும் நாம் அச்சம் இன்றி ஊரடங்கு காலத்தில் நடமாடிக்கொண்டிருக்கின்றோம்.
சிலர் இவ் ஊரடங்கு காலத்தில் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். இதனை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது. மலையக பகுதிகளில் இதனை காணக்கூடியதாக உள்ளது. இங்கு தற்போது அதிகளவில் பலர் முச்சக்கர வண்டிகளை உடமையாக வைத்துள்ளனர். அவர்கள் அடிக்கடி தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதனை இல்லை என்று நாம் மறுக்க முடியாது.
குறிப்பாக தோட்டங்கள் பல நகர் புறங்களுக்கு மிக அண்மையில் உள்ளன. உதாரணத்துக்கு தலவாக்கலை பிரதேசத்து தோட்டங்களை கூறலாம். இங்கு தேயிலை தோட்டங்களை சிலர் வெளியாட்களுக்கு விற்றுவிட்டனர். மக்கள் முன்பு கொழுந்து பறித்த தேயிலை மலைகாடுகள் கொலணிகளாக மாறிவிட்டன. தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு போகாத வேற்று மக்கள் அதாவது தோட்டத்தொழிலாளிகள் இல்லாத வெளிபிரதேசங்களில் இருந்து அதிகமானவர்கள் குடியேறிய பிரதேசங்களாக இவை மாறிவிட்டன.
இப்பிரதேசங்களில் உள்ளவர்கள் மற்றும் நகரை அண்டி பிழைக்கும் மக்கள் பலர், அதாவது பஸ்களில் வடை விற்பவர்கள் தொட்டு வேறு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பவர்கள் வரை இங்கு உள்ளனர். அவர்கள் குறுக்கு பாதை வழியாக லயங்களை தாண்டி நகருக்குள் செல்கின்றனர்.
அந்த நேரத்தில் முகக்கவசங்களும் அணிவதில்லை. லயத்தை ஒட்டிய உறவினர்களின் வீடுகளுக்கு லயத்து வழியாக கூட்டம் கூட்டமாக குறிப்பாக பெண்கள் அந்தி வேலைகளில் நடமாடுகின்றனர். இவர்கள் கொரோனா அச்சத்துக்கு உட்படாதவர்களாக முகக்கவசம் இன்றி நடக்கின்றனர். இது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தினாலும். யாரும் எதுவும் சொல்வதில்லை.
நாம் 119 க்கு அழைப்பு செய்தால் விசாரணை என்று நம்மையும் அழைத்துச் செல்வர்... நாமும் பொலிஸுக்கு செல்ல வேண்டும் என்ற பயத்தில் மக்களும் இதனை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் இதனால் பாதிக்கப்படபோவது தோட்ட மக்களே என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
ஏன் எனில் லயத்து வழியாக நடந்து செல்லும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அங்கு விளையாடி கொண்டிருக்கும் சிறார்களையும் அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். அப்படியே அது வீட்டில் உள்ளவர்களை தாக்கும். பின்னர் அது கொத்தணியாக மாறி மொத்த தோட்டத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல இன்னும் சிலர் முககவசங்களை மூக்கிற்கு அணிவதற்கு பதிலாக தாடைக்கு அணிவதே அதிகமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றையெல்லாம் நாம் தவிர்த்திட வேண்டும்.
கொரோனா மிக பெரிய அழிவை உலகளவில் ஏற்படுத்தி வருகின்றமையால் அதனை கண்டு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முதலாம் அலை, இரண்டாம் அலை அடுத்த அலை தாக்கம் இன்னும் குறையவில்லை... அடுத்து மூன்றாவது அலை உருவாகினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்றும் எம்மால் கூற முடியாது.
கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நோய் ஏற்பட்டு 2 தொடக்கம் 10 நாட்களிற்குள் தென்படும். எனினும் உடலில் அறிகுறிகள் தென்படும் முன் இவ் வைரஸ் ஆனது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளிச்சூழலிற்கு பரவிவிடும். எனவே இவ் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு முறைமைகளை அதற்கு முன்னரே ஏற்படுத்துவது இன்றியமையாதது.
கொரொனா பாதுகாப்பு போல நம் பக்கமிருந்தும் செய்யவேண்டிய விடயங்கள் உள்ளன. வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சுத்தத்தைக் கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது. குறிப்பாக, கொரோனா விடுமுறையால் விளையாட்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, சில வழிமுறைகளை கையாள வைக்கலாம்.
இந்நோய்த்தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக வீட்டிலிருந்து வெளியே செல்வதை இயலுமானவரை குறைத்து வீட்டினுள் இருத்தல் வேண்டும். அதற்காகதான் அரசு ஊரடங்கை பிறப்பித்திருக்கின்றது.
கூடுமானவரை நோய்த்தொற்றிற்கு ஆளாகும் குழுக்களை அல்லது நபர்களை வீட்டினுள்ளோ அல்லது வேலைத்தளத்திலோ தொடர்புகொள்வதை குறைத்தல் நன்று. கைகளை சவர்க்காரத்தினாலோ அல்லது திரவ சவர்க்காரத்தினாலோ அடிக்கடி கழுவவேண்டும். தேவையேற்படும் போது தொற்றுநீக்கிகளை பாவித்து தொற்றினை நீக்கலாம்.
முறையான சுகாதார செயற்பாடுகளின் முலம் நோய்ப்பரம்பலை குறைக்கலாம். காற்று உட்செல்லக்கூடியவாறு அறை, கதவு மற்றும் யன்னல்களைத் திறந்து வைக்கவும்.
தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் அல்லது திசுக்கடதாசியால் வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடவேண்டும். திசுக்கடதாசியெனில் பாவித்த உடன் குப்பையில் அகற்றவேண்டும்.
இரு நபர்களுக்கிடையில் பேசும்போது குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுங்கள். முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம். உங்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் தொற்றுநோய் நிபுணர் அல்லது சுகாதார உத்தியோகத்தரை நாடவும்.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் இந்நோய்த்தொற்றைத் தவிர்க்க முகக்கவசத்தை அணியவும்.
குறிப்பாக முடியுமானவரை ஊரடங்கில் வீட்டினுள்ளேயே இருக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு மட்டும் அல்ல இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நீங்கள் செய்யும்மிக பெரிய உதவியாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM