(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரையில் , எரிபொருள் விலை அதிகரிப்பு , உரப்பற்றாக்குறை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்து, இணையவழிக் கல்வி, கொவிட் கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் பொருளாதார வீழ்ச்சி ஆகிய 6 முக்கிய பிரச்சினைகளுக்கும் ஸ்திரமான தீர்வை எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் 6 கேள்விகளுக்கான பதில்களை எதிர்பார்க்கின்றோம்.
முதலாவதாக எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே ஜனாதிபதியிடன் விசேட உரையின் மூலம் எரிபொருள் விலையை ஏற்கனவே காணப்பட்டதை விலைக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இதேபோன்று உரப்பாவனையை மாற்றி உடனடியாக சேதனப்பசளை பயன்பாட்டுக்குச் செல்வதற்கு எடுத்த தீர்மானத்தின் மூலம் விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். தன்னிச்சையாக திடீரென எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தினால் விவசாயிகள் அநாதரவாகியுள்ளனர். உரம் இன்மையால் சகல பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த தீர்மானத்தை முன்னேற்பாடுகளுடன் முறையான திட்டமிடல்களுடன் ஏதேனுமொரு ஸ்திரமான வேலைத்திட்டத்திற்கமைய நடைமுறைப்படுத்துவதோடு , எந்த சந்தர்ப்பத்திலும் உரப்பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குவதாக ஜனாதிபதி அவரது உரையின் போது உறுதிமொழி வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தினால் முழு மீனவ சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காதளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உரையில், மீனவ சமூகத்தினருக்கு அரசாங்கத்தினால் ஸ்திரமான நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றையும், பாதிக்கப்பட்டுள்ள சுற்றாடலை மீள பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமும் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இணையவழி கல்வி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாரிய பிரச்சினையாகியுள்ளது. இணையவசதி மற்றும் உரிய தொழிநுட்ப உபகரணவசதியின்றி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீண் செலவுகளைக் குறைத்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான உரிய வேலைத்திட்டமொன்றையும் ஜனாதிபதி தனது உரையில் உள்ளடக்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் குறிப்பாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களில் அரச தலையீடு மிக மோசமாகக் காணப்பட்டது. அஸ்ட்ரசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்றி 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் கூறியதைப் போன்று சனத்தொகையில் 60 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மிகவும் மந்த கதியில் இடம்பெறுகிறது.
சுகாதார தரப்பினருக்கான பாதுகாப்பு ஆடைகள் இன்மை, வைத்தியசாலைகளுக்கான மருத்துவ உபகரண பற்றாக்குறை, பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி தனது உரையில் வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி திருப்தியடைய முடியாது. எனவே அம் மக்களுக்கு தேவையான நிதி நிவாரணத்தையும் ஜனாதிபதியின் உரையின் மூலம் எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆறு காரணிகளுக்கும் உண்மையான தீர்வை எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி தலைமையிலான முழு அரசாங்கமும் இதுவரையில் முன்னெடுத்துள்ள அனைத்து செயற்பாடுகளும் தோல்வியடைந்துள்ள என்பதை சிறு குழந்தை முதல் சகலரும் அறிவார்கள். மக்கள் உங்களுக்கு வழங்கி ஆணையை முறையாக பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு உங்கள் விசேட உரையின் தீர்வினை வழங்குங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM