மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகர் கொலை வழக்கின் சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க மன்னார் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கொவிட்-19 நோய்த்தொற்று காலப்பகுதியைக் கருத்திற்கொண்டு இந்த பிணைக் கட்டளையை மன்னார் மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகராகக் கடமையாற்றும் விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளிலில் பயணித்த போது, ஆத்திமோட்டை – கள்ளியடியில் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார்.
அவர் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலை சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் நிர்வாக கிராம அலுவலகரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியமையால் அவர் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இலுப்பக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இளைஞன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். அவரது தகவலின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பெண் கிராம அலுவலகரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாக மண்வெட்டிப் பிடி ஒன்றையும் பொலிஸார் மீட்டனர். அந்தப் பிடியில் உடைந்த பகுதியுடன் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட குருதி படிந்த மரத்துண்டுடன் ஒத்துப்போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாவதாகக் கைதுசெய்து விடுவித்த இளைஞனை அரச சாட்சியாக மாற்றிய பொலிஸார், பெண் கிராம அலுவலகரின் கணவரை சந்தேக நபராகக் குறிப்பிட்டு பி அறிக்கை தயாரித்தனர்
இந்த வழக்கில் பொலிஸாரின் விசாரணைத் தகவல்களை வெளியிட்டதால் விசாரணைகளைத் திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராய்ந்த பதில் பொலிஸ் மா அதிபர், விசாரணைகளை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் மன்னார் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 நிலமையைக் கருத்திற் கொண்டு சான்று ஆதாரங்கள் உள்ள பெரும் குற்ற வழக்குகளின் சந்தேக நபர்களை விடுவிக்க சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த வழக்கிலும் சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க மன்னார் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
“2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணை, 25 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையை நிறைவேற்றினால் சந்தேக நபரை விடுவிக்க முடியும்.
சந்தேக நபர் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலுப்புக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடவேண்டும்” என்று மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிகால் கட்டளை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM