(நா.தனுஜா)
கொவிட் - 19 என்பது அனைவருக்கும் பொதுவானதொரு தொற்றுநோயாகும். அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ளமுடியும். எனவே மக்களின் உயிர்களைப் பணையம் வைத்து ஆதாயம் தேடுவதற்கு முற்படவேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எதிர்த்தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஐந்து மேம்பாலங்களின் நிர்மாணப்பணிகள் இன்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் வைத்து இணையவழியின் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த ஆரம்ப நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நீதியரசர் அக்பர் வீதி மற்றும் உத்தரானந்த மாவத்தையில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம், பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ.கார்டினல் மாவத்தை ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலம், கொஹுவல மேம்பாலம், கண்டி பேராதனை பகுதியில் நிலவும் கடுமையான வாகனநெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள கெட்டம்பே மேம்பாலம் மற்றும் களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையிலான நான்கு மருங்குகள் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கான நிர்மாணப்பணிகளே இவ்வாறு ஆரம்பித்துவைக்கப்பட்டன.
நிர்மாணப்பணிகளை இணையவழியின் ஊடாக ஆரம்பித்துவைத்ததன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:
கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களுக்கு இடையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையிலான திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்டது குறித்து அனைவரும் அறிவீர்கள். எனினும் அதற்கு எந்தவொரு தரப்பினராலும் நடைமுறைக்குப் பொருத்தமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று கடந்த தேர்தலின்போது நாங்கள் பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்தோம். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் இத்தகைய சவால்களோ அல்லது நெருக்கடிகளோ இல்லாத சூழ்நிலையிலேயே கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்திப்பணிகளையும் முன்னெடுக்காமல் இருந்தது. ஆனால் 'நாம் இப்போது என்ன செய்கின்றோம்?' என்று அவர்கள் எம்மிடம் கேட்கின்றார்கள்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். எனினும் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி, அவற்றைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கின்றனர். மக்களின் உயிர்களைப் பணையம் வைத்து ஆதாயம் தேடுவதற்கு முற்படவேண்டாம் என்று எதிர்த்தரப்பிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM