(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதோடு மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவில் சிக்கிய 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு
இரத்தினபுரி - எல்ல பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த மூவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது 17 வயதுடைய சிறுமியொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதோடு ஏனைய இருவரை தேடும் பணிகள் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ பிரிவு , முப்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவனைக் காணவில்லை
இதே வேளை மாரவில - விலபார பிரதேசத்தில் 14 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் , சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
44,000 பாவனையாளர்களுக்கு மின்சார விநியோகதடை
கடும் மழை காரணமாக 44,000 மின் பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் தடை பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களே இதற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்விநியோ தடை இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் துரிதமாக அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளம் , குருணாகலில் 6 வான் கதவுகள் திறப்பு
புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பெய்ய கடும் மழை காரணமாக சில நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய திப்போவ நீர்தேக்கத்தின் 6 வான்கதவுகள் 2 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.அபேசிறிவர்தன தெரிவித்தார். இந்த வான்கதவுகளில் நொடிக்கு 3240 கன அளவு நீர் வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே போன்று தெதுருஓயா நீர் தேக்கத்தின் இரு வான்கதவுகள் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளதோடு , இவற்றில் நொடிக்கு 2800 கன அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் இங்கிரிய நீர் தேக்கத்தில் நீர் மட்டம் ஆகக் கூடியளவிற்கு உயர்வடைந்துள்ளதாகவும் இதன் சில வான்கதவுகளை திறக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நீடிக்குமானால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடையக் கூடும் என்பதால் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளம்
களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் காணப்படும் சிறு வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை வீழ்ச்சியைப் பொறுத்து 24 மணித்தியாலங்களுக்குள் நீர் மட்டம் உயர்வடைந்து வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பல பகுதிகளில் பதிவாகியுள்ளது. தும்மலசூசிய பிரதேசத்தில் 346.7 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே போன்று கரந்தனையில் 316.5 மி.மீ., எஹெலியகொட 311.5 மி.மீ., ஹொரனை - 302.5 மி.மீ., மத்துகம 293 மி.மீ. என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
ஆறு மாவட்டங்களுக்களில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலலாவிட்ட, ஹொரண போன்ற பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்த்தில் எஹலியகொட, கலவான பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அயகம, குருவிட்ட எலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, இரத்தினபுரி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தேசிய கட்டட ஆராய்வு நிறுவகம் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை நீடித்துள்ளது.
11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
புத்தளம் , குருணாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 175 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடரும்
நாட்டின்தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பரப்பு
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM