" புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன? " - வலிசுமந்த யாழ் பொது நூலக நினைவுகள்  

Published By: Digital Desk 2

01 Jun, 2021 | 05:29 PM
image

முருகபூபதி 

எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச் செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச் சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக  சென்றுவருவேன்.

நீர்கொழும்பு பழைய பஸ் நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச் செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. டியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். 

அங்கே குமுதம், கல்கண்டு, கல்கி, ஆனந்த விகடன் உட்பட இலங்கைப் பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்கு தான் படித்தேன்.

கல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசுபெற்ற உமாசந்திரனின் முள்ளும் மலரும்,  ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றையும் அந்த நூலகத்தில்தான் படித்து முடித்தேன்.

அக்காலம் முதலே எனக்கும் நூலகம் பற்றிய கனவு தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டிலேயே MuruganLibrary என்ற பெயரில் ஒரு நூலகத்தை தொடங்கினேன். மாதம் 25 சதம்தான் கட்டணம். எனது அம்மா தான் முதலாவது உறுப்பினர். அயலில் சிலர் இணைந்தனர். அதற்கென ஒரு RubberStamp தயாரித்து சிறிது காலம் அந்த நூலகத்தை நடத்தினேன். ஆனால், தொடர முடியவில்லை. புத்தகங்களை எடுத்துச்சென்ற சிலர் திருப்பித்தரவில்லை. மனம்சோர்ந்துவிட்டது.

1971 ஏப்ரில் கிளர்ச்சியினால் மாலையில் ஊரடங்கு உத்தரவு வந்துவிடும். வெளியே நடமாட முடியாது. இப்போது போன்று அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை. வீட்டில் வறுமை தாண்டவமாடியதனால் வானொலிப்பெட்டியும் இல்லை. எனது வாசிப்புப்பழக்கத்திற்கு மாத்திரம் வறுமை வரவில்லை.

சில நண்பர்களுடன் இணைந்து வளர்மதி என்ற பெயரில் மீண்டும் ஒரு நூலகத்தை வீட்டில் ஆரம்பித்தேன். தற்போது ஜெர்மனியில் வசிக்கும்  தேவா ஹெரால்ட், பிரான்ஸில் வசிக்கும்  செல்வா என்ற செல்வரத்தினம், கனடாவில் வதியும்வசிக்கும் ந.தருமலிங்கன், மினுவாங்கொடையிலிருந்த அண்மையில் மறைந்த மு.பஷீர், பத்திரிகையாளர் நிலாம், பின்னாளில் அமரர்களாகிவிட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம், ரட்ணராஜ் (சூட்டி), பவானிராஜா, தற்கொலைசெய்துகொண்ட சந்திரமோகன் உட்பட பலர் வளர்மதியில் இணைந்தனர். 1972 இல் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச மலரில் வளர்மதி நூலகம் பற்றி சிறிய கட்டுரையும் எழுதினேன்.

வளர்மதி என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழும் நடத்தினோம். நினைவுகளில் தங்கி காலத்தில் கரைந்துவிட்டது அந்த வளர்மதி நூலகம்.

தொழில், திருமணம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்று திசைமாறிப்போனோம். எனினும் எனது வாசிப்பு பழக்கமும் நூல்கள், இதழ்களை வாங்கி சேகரிக்கும் பழக்கமும் இன்றுவரையில் குறையவே இல்லை. அதற்கு 1971 ஆம் ஆண்டு முதல் நான் எழுதத்தொடங்கியதும் முக்கிய காரணம் என்று நினைக்கின்றேன்.

1981 மே மாதம் யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது எனக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த பதட்டமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், வீட்டிலே தடுத்தபோதும் கேளாமல் மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக்கொடுமையை பார்த்தேன்.

எனக்கு என்ன நேரமோ காலம்கடந்துதான் (2003 இல்) மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப்பார்த்த போது வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activistஆக மாறியே போக்கிக்கொண்டேன்.

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டது அறிந்து வண.பிதா தாவீது அடிகள் மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா சொல்லித்தான் எனக்குத்தெரியும். அவரது படத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. எரியுண்ட நூலகத்தின் கோரக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, “ அங்கே நிற்கவேண்டாம். அகன்று செல்லவும்” என்று ஒரு மிலிட்டரி பொலிஸ் சொன்னபோது, புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?” (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த மிலிட்டறி பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார். ஜீவா என்னை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்.

நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடைகொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரவு பத்து மணிக்குத்தான் அந்த மெயில் வண்டி வந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத்தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். கைத்தொலைபேசி இல்லாத அக்காலத்தில் நீர்கொழும்பில் எனது வீட்டார் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் எனது நல்வரவுக்கு காத்திருந்தனர்.

நீர்கொழும்பில் வாழ்ந்த இனவாதச் சிந்தனையற்ற சில முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்கள இளைஞர்களுடன் இணைந்தேன். வண.பிதா திஸ்ஸ பாலசூரியா அவர்களின் தலைமையில் ஒன்று திரண்டோம். ஏற்கனவே இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்த புத்தள வெட்டு வாய்க்காலுக்கு அருகாமையில் ஒரு சிறிய கட்டிடத்தில் சந்தித்து யாழ். பொது நூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்காகவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம். அச்சமயம் நீர்கொழும்புக்கு அருகாமையில் சீதுவை என்னுமிடத்தில் வசித்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும் எம்முடன் இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டார்.

யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி.செனவிரத்தின உட்பட சில மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதிநேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

நாம் அரசின் உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அந்த இயக்கத்தை முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில் நான் அங்கம் வகித்திருந்த நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் அதன் அப்போதைய தலைவர் அ.மயில்வாகன் தலைமையில் நீர்கொழும்பில் நூல்களும் வர்த்தக அன்பர்களிடம் நிதியும் சேகரித்தோம். பின்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதியுட்பட சேகரிக்கப்பட்டவற்றை கட்டிடக்கலைஞர் வி. எஸ்.துரைராஜா முன்னிலையில் வழங்கினோம்.

1983 இனவாத வன்செயலினால் நானும் குடும்பமும் உறவினர்கள் எவருமில்லாத யாழ்ப்பாணம் அரியாலைக்கு இடம்பெயர்ந்தபோது எம்முடன் எனது சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்களும் இதழ்களும் (சுமார் பத்து பெட்டிகள்) இடம்பெயர்ந்தன.

1984 இல் தமிழ்நாடு சென்றபோது ஏப்ரில் மாதம் சென்னை ஏ.வி.எம்மின் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த இலக்கியச்சிந்தனை விழாவில் முன்னணி எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்து உரையாடினேன். அவர் யாழ். பொது நூலக எரிப்பை கருவாகக்கொண்டு ‘இலட்சம் புத்தகங்கள்’ என்ற அருமையான சிறுகதையொன்றை படைத்திருந்தார். கேள்வி ஞானத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட சிறுகதையை அவர் எழுதிய பின்னணி குறித்து கேட்டறிந்து பின்னர் வீரகேசரியில் தமிழகப் பயணம் பற்றி எழுதியபோது பதிவுசெய்தேன்.

1986 இறுதியில் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டின்போது சந்தித்த நண்பர் புதுவை ரத்தினதுரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க யாழ்ப்பாணத்திற்கு என்னுடன் இடம்பெயர்ந்த அனைத்து நூல்கள், இதழ்களையும் அவர்களின் இயக்க நூலகத்திற்குக்கொடுத்தேன்.

புதுவை ரத்தினதுரையும் மலரவனும் ஒரு வாகனத்தில் அரியாலைக்கு வந்து பெற்றுக்கொண்டனர். பைண்டிங் செய்யப்பட்ட கணையாழி, தீபம் இதழ்களின் தொகுப்பு மற்றும் பல அரியநூல்கள் தற்போது எங்கே எப்படி இருக்கின்றன என்பது தெரியாது, புதுவையும் எங்கே என்பது தெரியாது! ஆனால், அந்த வலிசுமந்த நினைவுகள் இன்றும் என்னுள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.

1987 இல் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் விட்ட குறை தொட்ட குறையாக நூல்கள், இதழ்கள் படிப்பு, சேகரிப்பு குறைந்தபாடாயில்லை. நீர்கொழும்பில் நான் விட்டுவிட்டு வந்த எஞ்சிய நூல்கள் பலவற்றை எனது ஆரம்ப கால பாடசாலை, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு கொடுத்துவிட்டேன். கடந்த 2011 ஆரம்பத்தில் வன்னி சென்றபோது நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவில் அந்தக்கல்லூரியின் சில பழைய மாணவர்கள் அங்கு நூல்நிலையத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டார்கள். 

எங்களுக்கோ இங்கு கணினி ஊடாக கூகுளில் தேடினால் தகவல்கள் உடனடியாகக் கிடைத்துவிடும். ஆனால், அதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த வன்னிப்பிரதேச மாணவர்கள் பயன்படுத்துவதற்கு அவை பெரிதும் உதவும் என நம்புகின்றேன். இதுவிடயத்தில் இங்குள்ள எனது குடும்ப நண்பர் கருணாகரன் என்ற பொறியிலாளரும் எமக்கு உதவினார். நண்பர்கள் நவரத்தினம் இளங்கோ, சுந்தரமூர்த்தி ஆகியோர் தாம் சேகரித்த பொருட்களுடன் அந்த தொகுப்புகளையும் ஒரு கொள்கலனில் வன்னிக்கு அனுப்பிவைத்தனர்.

1998-99 காலப்பகுதியில் அவுஸ்திரேலியா மெல்பனில் எனக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் பொன். சத்தியநாதன் ஒன்றிய தமிழர் தோழமைக் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். நாம் 2001 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் எழுத்தளார் விழாவை மெல்பனில் நடத்தியதன் பின்னர் அதன் அருட்டுணர்வோடு அவர் சிட்னி, தமிழ்நாடு, மலேசியாவிலிருந்தெல்லாம் அறிஞர்களை வரவழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அதுதொடர்பாக முதலில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்து எனது கருத்துக்களை கேட்டார்.

“ காற்றிலே பேசிவிட்டுப்போகாமல் ஏதாவது உருப்படியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் அதற்கு என்னால் இயன்ற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவேன்.” என்றேன். மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன் ஒரு தமிழ் உணர்வாளர். பற்றாளர். கணினியில் தமிழ் பற்றிய சில பரிசோதனைகளையும் மேற்கொண்டவர். தமிழ் உலகம், Tamilworld என்ற இருமொழிப்பத்திரிகையையும் சிலமாதங்கள் நடத்தியவர். குமுதம் தீராநதியிலும் அவரது நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மெல்பனில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கும் யோசனை இருந்தது. அவரிடம் ஏராளமான நூல்களும் சேகரிப்பிலிருந்தன. அவரிடம் கட்டிடமும் இருந்தது. நிதிவசதியும் அப்போதிருந்தது.

ஏற்கனவே மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம் கிளேய்டன் என்னுமிடத்தில் தொடங்கிய தமிழ் நூல் நிலைய திறப்பு நிகழ்வுக்கும் சென்றிருக்கிறேன். உள்ளுர் கவுன்ஸிலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு அளித்த நம்பிக்கை, காலப்போக்கில் அந்நூல் நிலையம் இயங்காமல் போனதும் தளர்ந்துவிட்டது.

அதன் பிறகு நண்பர் மாவை நித்தியானந்தன் தொடக்கிய மெல்பன் கலை வட்டம் மற்றும் பாரதி பள்ளி ஆகியன இணைந்து ஓக்லி என்னுமிடத்தில் கவுன்ஸில் நடத்தும் பொது நூலகத்தில் தமிழ்ப்பிரிவு ஒன்று கோலாகலமாகத்தொடங்கப்பட்டது. இந்நிகழ்விலும் கலந்துகொண்டதோடு 1999 இல் இலங்கை சென்று திரும்பும்போது நண்பர் மாவை நித்தியானந்தன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல புத்தம் புதிய நூல்களை கொழும்பில் கொள்வனவுசெய்துகொண்டு வந்து கொடுத்தேன்.

( எனக்கு வீட்டிலே “ புத்தகம் காவி” என்று ஒரு பட்டப்பெயர் உண்டு)

சத்தியநாதன் நடத்தவிருந்த மாநாட்டின் தொடர்ச்சியாக நூல் நிலையம் அமைப்பது தொடர்பாக அவர் முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதன் பிரகாரம் மாநாடு முடிந்து சில மாதங்களில் அவரது கட்டிடம் ஒன்றில் சிறப்பான முறையில் நூல்நிலையம் அவரது தாயாரால் திறந்துவைக்கப்பட்டது. பத்து டொலர்கள் அங்கத்துவப்பணத்துடன் ஆரம்பமான இந்நூல் நிலையத்தில் கணிசமானவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். தினமும் காலை முதல் மாலை வரையில் திறந்திருந்த இந்நூல் நிலையத்திற்கென ஒரு அன்பரை ஊழியராகவும் நியமித்து அவருக்குரிய வேதனத்தை சத்தியநாதன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நாட்டில் மட்டுமல்ல எந்தநாட்டிலும் ஏதாவது பொது வேலைகளில் எவராவது உருப்படியான யோசனை சொன்னால் அவரது தலையிலேயே அந்தயோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என்பது நான் நடைமுறை வாழ்வில் கண்டுகொண்ட உண்மை. சத்தியநாதன் அவர்களினால் தொடங்கப்பட்ட அந்த நூலகத்தின் செயலாளராக நான் தெரிவுசெய்யப்பட்டேன். நானும் நண்பர்கள் சிவானந்தன், ‘பாடும் மீன்’ ஸ்ரீகந்தராசா, கொர்னேலியஸ், சகோதரி அருண்.விஜயராணி ஆகியோர் தொண்டு அடிப்படையில் இங்கு நூலகர்களாக இயங்கினோம்.

காலம் சக்கரம்பூட்டாமலேயே உருண்டோடும். வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கும். காலத்தின் கோலமோ என்னவோ சத்தியநாதன் அவர்கள் திடீரென்று நூல்நிலையத்திலிருந்த அனைத்து நூல்களையும் வேறும் சில பொருட்கiளையும் ஒரு கொள்கலனில் ஏற்றி வன்னிக்கு அனுப்பிவிட்டார்.

2001-2002 காலப்பகுதியில் இயங்கிய அந்த நூலகம் எவருமே எதிர்பாராத நிலையில் மூடப்பட்டது. அந்த நூலகம் அமைந்திருந்த கட்டிடத்தொகுதியும் அகற்றப்பட்டு அங்கே கார்கள் தரிப்பிடம் தோன்றியிருக்கிறது. குறிப்பிட்ட வீதியில் அந்த இடத்தைக் கடக்கும்போது நெஞ்சைத்தடவிக்கொள்கிறேன். (மருத்துவர் சத்தியநாதனும் அருண். விஜயராணியும் மறைந்துவிட்டனர்.)

சிட்னிக்கு செல்லும் சமயங்களில் அங்கு தமிழ் அன்பர்களினால் நடத்தப்படும் நூலகத்தை பார்வையிட்டு ஆறுதலடைவேன். எனது நூல்களும் அங்கிருப்பது பெருமிதம் தரும். தற்போது மெல்பனில் எனது வீட்டு நூலகத்திலிருக்கும் நான் படித்து முடித்துவிட்ட நூல்களை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எனது மனைவி அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பா. எனக்குப்பிறகு இங்கே யார் படிக்கப்போகிறார்கள் என்று யோசிக்கும்போது மீண்டும் நெஞ்சு லேசாக வலிக்கும். தற்போது நண்பர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

எங்கள் மெல்பனில் நான் வசிக்கும் மோர்வல் ஊரிலிருந்து சற்றுத்தொலைவில் ஒரு பிரதேசத்தில் கேசி தமிழ் மன்றம் என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக தைப்பொங்கல் விழா உட்பட சில தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. அந்த அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கும் அந்தப்பிரதேசத்தில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருந்தது. கணிசமான புத்தகங்களை அவர்களுக்கும் வழங்கிவிட்டேன்.

எனது இந்த இயல்புகளை அருகிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் மனைவியுடன் ஒருநாள் உரையாடிக்கொண்டிருக்கும்போது மீண்டும் “எனது சேகரிப்பு நூல்களை என்ன செய்வது?” எனக்கேட்டேன். அப்போது தனது கனவொன்றை அவள் சொன்னாள்.

இலங்கையில் ஊரில் இருக்கும் தனது வீட்டை தனக்குப்பிறகு ஒரு நூலகமாக்கப்போவதாகவும் அதற்கு எனது சேகரிப்புகள் தேவைப்படும் என்றும். உலகத்திலேயே அழிக்க முடியாதது அறிவுதான். எனவே அழிவற்ற சொத்து எவருக்கும் பயன்படும். என்றும் சொன்னபோது மனநிறைவோடு நெஞ்சைத்தடவிக்கொண்டேன்.

எனக்குக்கிடைக்கும் புதிய நூல்கள் பற்றி அவ்வப்போது படித்தோம் சொல்கிறோம் என்ற தலைப்பில் எழுதிவருகின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வெளியான உதயம் இதழில் நூலகம் பகுதியில் பல நூல்கள், இதழ்கள்பற்றிய அறிமுகக்குறிப்புகள் எழுதியிருக்கின்றேன்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலுமிருக்கும் நூலகப்பிரியர்கள் பலர் இணைந்து இணையத்தில் ஒரு தமிழ் நூலகத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஈழத்து தமிழ் நூல்களையும் இங்கு வெளியான தமிழ் இதழ்களையும் பதிவுசெய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட எண்ணிம நூலகம் உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48