நா.தனுஜா
ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் பாடசாலை மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளன.
அனைத்து மாணவர்களுக்கும் கணினி மற்றும் இணையவசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையினால் அரச தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவாறான செயற்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
முன்னாள் கல்வியமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன். நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்திருந்த செயற்திட்டங்கள் இப்போது தடைப்பட்டுள்ளன. குறிப்பாக 13 வருடகாலப் பாடசாலைக் கல்விக்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் 'சுரக்ஷா' காப்புறுதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.
எனினும் தற்போது அந்தக் காப்புறுதி வரையறைக்கப்பட்ட எண்ணிக்கையானோருக்கே வழங்கப்படுவதுடன் அதுவும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி ஒரு வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக வரையறுத்தோம்.
எனினும் இப்போது அந்த வரையறை இல்லாமலாக்கப்பட்டு, அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகளவான மாணவர்கள் ஒரே வகுப்பிற்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
நாம் எமது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அரசியல் ரீதியான ஆசிரியர் நியமனங்களையோ அல்லது இடமாற்றங்களையோ வழங்கவில்லை. பாடசாலை அதிபர்களுக்கான நியமனங்களின் போது எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினோம். ஆனால் தற்போதைய ஆட்சியில் இவ்வனைத்தும் முழுமையாக சீர்குலைந்துள்ளன.
மேலும் ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் பாடசாலை மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கடந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டபோது, தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர்.
அதனால் இப்போது மாணவர்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் கணினி மற்றும் இணையவசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையினால் அரச தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவாறான செயற்திட்ட மொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
கல்வித்துறை மாத்திரமன்றி, எந்தவொரு துறைசார் நடவடிக்கைகளையும் திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. குறிப்பாக நாட்டை முடக்கும் விடயத்தில் கூட அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை. நாடு ஒருபோதும் முடக்கப்படாது என்று ஆரம்பத்தில் கூறினார்கள்.
அதன்பின்னர் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மாத்திரம் முடக்கினார்கள். எதிர்வரும் நாட்களில் நாடு முழுமையாக முடக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் தற்போது ஏமாற்றமாக மாறியுள்ளன. எனவே எதிர்வரும் நாட்களிலேனும் எவ்வித கட்சி, அரசியல் பேதங்களுமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM