எம்.மனோசித்ரா
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மும்முரமாகச் செயற்பட்ட மகா சங்கத்தினர் இப்போதாவது மக்களுக்கான அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் மரணித்தாலும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியே தொடர வேண்டும் என்பதையா மகா சங்கத்தினரின் மௌனம் வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
மகா சங்கத்தினரின் எதிர்ப்புக்கள் , கொவிட் அபாய நிலைமை , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் என முக்கியத்துவம் மிக்க சகல விடயங்களை புறந்தள்ளி சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் விட துறைமுக நகர சட்ட மூலமே அரசாங்கத்திற்கு முக்கியத்துவமுடையதாகியுள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்ட மூலத்தில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு எதிராக எதிர்கட்சிகள் நீதிமன்றத்தை நாடியிருக்காவிட்டால் இன்று அரசியலமைப்பிற்கு முரணான சட்ட மூலமொன்று சூட்சுமமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும். ராஜபக்ஷாக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சீனாவிற்கு ஏற்பவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க தற்போது நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இரும்புகட்டில்களை அமைப்பதால் மாத்திரம் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
கலப்பு தடுப்பூசியை வழங்க முடியும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமது இயலாமையை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு பொய் கூறி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.
தற்போதுள்ள நிலைமை தொடருமானால் எதிர்வரும் 100 நாட்களில் ஒரு மில்லியன் தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்படுவார்கள் என்று மருத்துவர்கள எச்சரித்துள்ளனர். அவ்வாறிருந்த போதிலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே , விசேட வைத்திய நிபுணர் என்ற ரீதியில் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும் என்று ஸ்திரமாகக் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கத்திலுள்ள ஏனைய தரப்பினர் அவருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த அபாய கட்டத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினர் முன்வர வேண்டும். இப்போதாவது அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். கொவிட் தொற்றால் மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை , ராஜபக்ஷாக்களின் ஆட்சி தொடரட்டும் என்பதையா மகா சங்கத்தினரின் மௌனம் வெளிப்படுத்துகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM